பெங்களூர் கூட்ட நெரிசல் எதிரொலி! சின்னசாமி மைதானத்தை வேறு இடத்திற்கு மாற்ற திட்டம்! சித்தராமையா தகவல்
பெங்களூர்: ஆர்சிபி வெற்றி கொண்டாட்டத்தின்போது சின்னசாமி ஸ்டேடியத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நிகழாமல் தடுக்க கிரிக்கெட் மைதானத்தை வேறு இடத்திற்கு மாற்றுவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாகக் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
இந்தாண்டு நடந்த ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி வென்றது. கடந்த 18 வருட ஐபிஎல் வரலாற்றில் ஆர்சிபி அணி வெல்வது இதுவே முதல்முறை. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் வெற்றி பெற்றதைக் கொண்டாடும் நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் கர்நாடக அரசுக்குக் கெட்ட பெயரை வாங்கிக் கொடுத்துள்ளது.

வேறு இடத்திற்கு மாற்றத் திட்டம்
இதற்கிடையே இந்தச் சம்பவம் குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த சித்தராமையா சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். இது குறித்து சித்தராமையா கூறுகையில், "கிரிக்கெட் மைதானத்தை வேறு இடத்திற்கு மாற்றுவது குறித்து அரசு பரிசீலிக்கிறது. நீண்டகால தீர்வுகளைக் காண அரசு யோசித்து வருகிறது..
எந்த அரசு ஆட்சியில் இருந்தாலும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கக் கூடாது. இந்த சம்பவம் எனக்கும், அரசுக்கும் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ஐந்து காவல் துறை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். உளவுத்துறைத் தலைவர் மற்றும் முதலமைச்சரின் அரசியல் செயலாளர் மாற்றப்பட்டுள்ளனர்" என்றார்.
தேவையான நடவடிக்கை
ஜூன் 4 முதல் நடந்த இந்த சம்பவத்தை அரசு தீவிரமாக எடுத்துக்கொண்டு தகுந்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சித்தராமையா தெரிவித்தார். மேலும் அவர் "இந்த சம்பவம் வருத்தமளிக்கிறது, ஆனால் அரசு நிர்வாகம் எந்த தவறும் செய்யவில்லை. குற்றவாளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்று அவர் கூறினார்.
பாஜக மற்றும் ஜேடிஎஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பதிலளித்த சித்தராமையா, "கும்பமேளாவின் போது மக்கள் இறந்தபோது உத்தரப் பிரதேச முதலமைச்சர் ராஜினாமா செய்தாரா? அப்போது பாஜகவும், ஜேடிஎஸ்ஸும் ஏன் அவரை ராஜினாமா செய்யச் சொல்லவில்லை ஜூன் 4ம் தேதி ஆர்சிபி வீரர்களுக்குப் பாராட்டு விழா நடத்தியதில் அரசுக்கு எந்தப் பங்கும் இல்லை. கர்நாடக கிரிக்கெட் சங்க செயலாளரும், பொருளாளரும் என்னைப் பாராட்டு விழாவுக்கு அழைத்தார்கள்.
எங்கள் விழா இல்லை
அது நாங்கள் ஏற்பாடு செய்த விழாவல்ல. அவர்கள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி, அதில் நான் விருந்தினராக அழைக்கப்பட்டேன். மேலும், ஆளுநர் கலந்து கொள்ள இருப்பதாகவும் என்னிடம் சொன்னார்கள். ஆகவே, நான் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். அதைத் தவிர வேறு எதுவும் எனக்குத் தெரியாது," என்று அவர் கூறினார்.
போலீஸ் அதிகாரி கடிதம்
பாதுகாப்பு அபாயங்கள் குறித்து காவல்துறை எச்சரித்த போதிலும், ஜூன் 4ம் தேதி விதான சவுதாவில் பாராட்டு விழா நடத்தியது. அந்த நிகழ்ச்சிக்கு முன்பு, அன்றைய தினம் டிசிபி எம்.என்.கரிபசவண்ணா பாதுகாப்பு கவலைகள் குறித்து எழுத்துப்பூர்வமாக எச்சரிக்கை கொடுத்திருந்தார். விதான சவுதாவில் அதிக பாதுகாப்புப் பணியாளர்கள் இல்லாதது குறித்து எச்சரித்தனர்.
அந்த கடிதத்தில், "ஆர்சிபி கிரிக்கெட் அணிக்கு நாடு முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். விதான சவுதாவின் அவசர அவசரமாக இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தால், லட்சக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் விதான சவுதாவுக்கு வருவார்கள். இதனால் சிக்கல்கள் ஏற்படும், ஏனெனில் விதான சவுதா போதுமான அதிகாரிகள் இல்லை" என்று கூறப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications