பெங்களூரில் கொட்டி தீர்த்த கனமழை.. நொடியில் பறிபோன உயிர்.. சிறுவன் உட்பட மூன்று பேர் பரிதாபமாக பலி
பெங்களூர்: தமிழ்நாட்டைப் போலவே கர்நாடக தலைநகர் பெங்களூரிலும் கடந்த சில நாட்களாகவே கனமழை கொட்டி வருகிறது. இந்த மழையால் அங்குப் பல இடங்களில் நீர் புகுந்துள்ளது. டிராபிக் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே இந்த கனமழையால் இருவேறு சம்பவங்களில் பெங்களூரில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
வழக்கமாக மே மாதம் வெயில் தான் படுத்தி எடுக்கும். ஆனால், இந்த முறை தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும் மழை கொட்டி வருகிறது. திடீரென கொட்டும் இந்த கோடை மழையால் வெப்பம் குறைந்துள்ளதால் மக்களும் கூட மகிழ்ச்சியில் உள்ளனர். தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகாவிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

பெங்களூர் மழை
அப்படி தான் கர்நாடக தலைநகர் பெங்களூரிலும் கடந்த சில நாட்களாகவே கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் அங்கு பல்வேறு இடங்களிலும் டிராபிக் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தாழ்வான இடங்களில் மழை நீரும் தேங்கியுள்ளது. இதற்கிடையே பெங்களூரில் கனமழையால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மூன்றாக உயர்ந்துள்ளது.
கர்நாடகாவின் பெங்களூருவில் பெய்த கனமழையால் பல வீடுகளில் தண்ணீர் புகுந்தது. அப்படி தான் அங்கு பி.டி.எம் இரண்டாம் கட்டத்தில் இருக்கும் டாலர்ஸ் காலனியில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் தண்ணீர் புகுந்திருந்தது. நேற்றிரவு அந்த தண்ணீரை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த போது மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
உயிரிழப்பு
அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் மனமோகன் காமத் (63) மற்றும் அங்கு பணிபுரிந்த ஊழியர் ஒருவர் மகன் தினேஷ் (12) ஆகியோர் இறந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அதாவது தரைதளத்தில் இருந்த நீரை அகற்றிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியுள்ளது. தண்ணீரை வெளியேற்ற அவர் ஒரு பம்ப் செட்டை வாடகைக்கு எடுத்திருந்தார். பம்ப் செட்டை இயக்கிய போது ஷார்ட் சர்க்யூட் காரணமாக மின்சாரம் தாக்கியதில் காமத் உயிரிழந்தார்.
சோகம்
அப்போது சிறுவன் தினேஷும் அங்குச் செல்ல அவனும் பரிதாபமாக உயிரிழந்தான். நேபாளத்தைச் சேர்ந்த பரத் என்பவரின் மகன் தான் தினேஷ். அவரது தந்தை பரத் அடுக்குமாடிக் குடியிருப்பில் வேறு இடத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அவர்களின் சத்தம் கேட்டு அங்கு விரைந்த அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் மின்சாரத்தைத் துண்டித்து உடலை மீட்டுள்ளனர். உடனடியாக அருகே உள்ள மருத்துவமனைக்கும் அழைத்துச் சென்றுள்ளனர்.
இருப்பினும், அங்கு அவர்கள் உடலைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இது தொடர்பாகத் தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இயற்கைக்கு மாறான மரணம் என்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மூவர் உயிரிழப்பு
முன்னதாக பெங்களூரில் மகாதேவபுரா காவல் எல்லையில் அமைந்துள்ள நிறுவனத்தில் உதவியாளராக பணியாற்றி வந்த 35 வயது சசிகலா என்பவர் அந்த நிறுவனத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்திருந்தார்.
மே மாதம் எதிர்பாராத விதமாகப் பெய்யும் மழை வெப்பத்தைக் குறைத்து குளிர்ச்சியான வானிலையை உருவாக்கினாலும் கூட இதுபோல எதிர்பாராத விதமாக நடக்கும் சம்பவங்கள் சோகத்தை ஏற்படுத்துவதாகவே இருக்கிறது.












Click it and Unblock the Notifications