தீப்பெட்டி சைஸ் வீட்டிற்கு மாதம் ரூ.50 ஆயிரம்! பெங்களூர் வீட்டு வாடகை பிரச்சனை.. புலம்பும் இளைஞர்கள்
பெங்களூர்: பெங்களூரில் வீடு வாடகை என்பது தொடர்ந்து உயர்ந்து எங்கோ போய்விட்டது. இதனால் அங்குக் குறைந்த வாடகையில் வீட்டை வாடகைக்கு எடுப்பது என்பது கிட்டதட்ட முடியாத ஒரு விஷயமாகிவிட்டது. இதற்கிடையே பெங்களூரில் வீட்டு வாடகை இந்தளவுக்கு உயர ஐடி ஊழியர்களின் அலட்சியமே காரணம் என்று பெங்களூர்வாசிகள் இணையத்தில் சாடி வருகிறார்கள்.
இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படும் பெங்களூரில் தான் ஏகப்பட்ட ஐடி நிறுவனங்கள் உள்ளன. அதிலும் இப்போது ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் கூட பெங்களூரில் அதிகரித்துள்ளன.

பெங்களூர் வாடகை
கடந்த சில காலமாகவே பெங்களூரில் வாடகைக்கு வீடு கிடைப்பது என்பது மிகப் பெரிய சிக்கலாக மாறியுள்ளது. இது தொடர்பான சமூக வலைத்தள போஸ்ட்களை நீங்கள் பார்த்து இருக்கலாம். ஒரு சாதாரண வீட்டை வாடகைக்கு எடுக்கவே படாதபாடு பட வேண்டி இருக்கும். ஓனர்கள் கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லி வீட்டை வாடகைக்கு எடுப்பதற்குள் ஒரு வழியாகிவிடுவோம். அப்படி எல்லாவற்றையும் கடந்து வீட்டை வாடைக்கு எடுத்தாலும் கூட அவர்கள் சொல்லும் வாடகையைக் கேட்டால் நமது தலையே சுற்றிவிடும்.
இதற்கிடையே ஐடியில் வேலை செய்யும் இளைஞர்களின் அலட்சியத்தாலேயே வீட்டு வாடகை இந்தளவுக்கு உயர்ந்துள்ளதாக நெட்டிசன்கள் சாடியுள்ளனர். ஐடி ஊழியர்களால் எப்படி வீட்டு வாடகை உயர்கிறது என்பதை ரெட்டிட் தளத்தில் நெட்டிசன் ஒருவர் விளக்கியுள்ளார்.
காரணம் ஐடி ஊழியர்கள் தான்
அதில் அவர், "பெங்களூரில் வீட்டு வாடகை என்பது மிகப் பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. ஐடி துறையில் புதிதாக வேலைக்குச் சேர்வோரைச் சிலர் ஈஸியாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். மாதம் ₹1.5 லட்சம் முதல் ₹2.5 லட்சம் வரை சம்பாதிக்கும் ஐடி ஊழியர்கள், தேவையே இல்லாமல் சிறிய சைஸ் வீட்டிற்கும் ரூ.50,000 முதல் ரூ.70,000 கூட வாடகை தருகிறார்கள்.
இது சங்கிலித் தொடராக அமைகிறது. ஐடி ஊழியர்கள் இதுபோல வாடகையைத் தேவையில்லாமல் அதிகரித்துக் கொடுப்பதால் ஒட்டுமொத்தமாக நகர் முழுக்க வாடகை அதிகரிக்கிறது. இது குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு பெரும் சிரமமாக அமைகிறது. ஐடி ஊழியர்களின் அலட்சியத்தால் சாதாரண சம்பளம் பெறும் ஊழியர்களால் குறைந்த வாடகையில் வீட்டைக் கண்டுபிடிக்க முடிவதில்லை" என்று பதிவிட்டுள்ளார்.
தீப்பெட்டி சைஸ் வீடு
அவரது இந்த பதிவு இணையத்தில் டிரெண்டாகி வரும் சூழலில், பலரும் இது குறித்து தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். நெட்டிசன் ஒருவர், "நான் எலக்ட்ரானிக் சிட்டியில் வேலைக்கு இருந்த போது 2BHK வீடு எனக்கு ரூ.15,000க்கு கிடைத்தது. ஆனால், அதே நேரம் எனது சக ஊழியர் கோரமங்களாவில் தீப்பெட்டி சைஸ் இருக்கும் 1BHK வீட்டிற்கே ₹35,000 கொடுக்க வேண்டி இருந்தது" என்று பதிவிட்டுள்ளார்.
பேரம் பேச மறுக்கிறார்கள்
அதேபோல மற்றொரு நபர், "ஐடி ஊழியர்களின் இயலாமையே இதற்குக் காரணம். அவர்கள் பேசி வாடகையைக் குறைக்க முனைப்புக் காட்டுவதில்லை. ஓனர்கள் எந்த வாடகை சொன்னாலும் அதை ஓகே சொல்லிவிடுகிறார்கள். இதுவே வாடகை அதிகரிக்க முக்கிய காரணமாக இருக்கிறது.. சிறிய வீடுகளுக்கும் அதிக வாடகை வசூலிக்கப்பட இதுவே காரணமாக உள்ளது" என்று பதிவிட்டுள்ளனர்.
பெங்களூரைப் பொறுத்தவரை முக்கிய பகுதிகளான இந்திரா நகர் மற்றும் கோரமங்களா உள்ளிட்ட பகுதிகளில் 1BHK வீடுகளில் உள்ள வசதிகளைப் பொறுத்து ரூ. 20,000 முதல் ரூ.25,000 வரை வாடகை வசூலிக்கப்படுகிறது. அதேநேரம் புறநகர்ப் பகுதிகளில் வீட்டு வாடகை ரூ.15,000 முதல் ரூ.20,000ஆ உள்ளது.












Click it and Unblock the Notifications