சென்னையை விட பெங்களூரில் தான் வெயில் உச்சம்.. கதறும் பெங்களூர்வாசிகள்.. இந்த வானிலைக்கு என்ன காரணம்?
பெங்களூர்: கோடைக் காலத்திற்கு முன்பே வெப்பம் படுத்தி எடுத்து வருகிறது. முன்பெல்லாம் எப்போதும் சென்னையில் தான் வெப்பம் அதிகமாக இருக்கும். பெங்களூரில் சில் கிளைமேட் தான் இருக்கும். ஆனால், இப்போது நிலைமை தலைகீழாக மாறி வருகிறது. கடந்த சில நாட்களாகவே சென்னையை விட பெங்களூரில் வெப்பம் அதிகமாக இருப்பதால் பெங்களூர்வாசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
முன்பெல்லாம் கோடைக் காலம் என்பது ஏப்ரல்- மே மாதத்தில் தான் இருக்கும். ஆனால், இப்போதெல்லாம் பிப்ரவரி மாதம் வந்தாலே வெப்பம் அதிகரிக்கத் தொடங்கிவிடுகிறது. பிப்ரவரி, மார்ச் மாதங்களிலேயே வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்துவிடுகிறது. அதீத வெப்பத்தால் வீட்டில் இருந்தாலும் கஷ்டம். வெளியே சென்றாலும் கஷ்டம் என்ற சூழலே இருக்கிறது.

வெப்பம்
சென்னை என்பது கடற்கரைக்கு அருகே இருப்பதால் பொதுவாக ஈரப்பதம் அதிகமாக இருக்கும். இதனால் வெப்பம் நமக்கு அதிகமாகத் தோன்றும் என நீங்கள் நினைக்கலாம். ஆனால், உண்மையில் சென்னையை விடப் பெங்களூரில் தான் வெப்பம் அதிகமாக இருக்கிறது. கடந்த சில நாட்களாகவே மதிய நேரங்களில் சென்னையைக் காட்டிலும் பெங்களூர் அதிக வெப்பமாக இருக்கிறது. கடந்தாண்டே பெங்களூரில் மழை என்பதே இல்லாமல்.. அதீத வெப்பம் பதிவான நிலையில், இந்தாண்டும் அது தொடர்கிறது.
பெங்களூர் என்றாலே எப்போதும் அதன் சில் கிளைமேட் தான் பலரது நினைவுக்கு வரும். ஆனால், இப்போதெல்லாம் சென்னைக்கு இணையாகப் பெங்களூரிலும் வெப்பம் படுத்தி எடுக்கிறது. கடந்த 4 நாட்கள் இரு நகரங்களிலும் மதிய நேரம் பதிவான வெப்பத்தை ஒப்பிட்டுப் பார்த்தாலே நமக்கு இது தெளிவாகப் புரிந்துவிடும்.
சென்னையில் குறைவு
கடந்த புதன்கிழமை சென்னையில் மதிய நேரம் அதிகபட்ச வெப்பம் 32 டிகிரி செல்சிஸயாக பதிவாகி இருந்தது. பெங்களூரிலும் கூட மதிய நேரத்தில் 32 டிகிரி வெப்பமே பதிவாகியிருக்கிறது. வியாழக்கிழமையும் கூட மதிய நேரம் சென்னைக்கு இணையாகப் பெங்களூரிலும் 34 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. எப்போதும் சென்னையைக் காட்டிலும் பெங்களூரில் வெப்பம் குறைவாக இருக்கும் எனச் சொல்லப்படும் நிலையில், இந்த இரு நாட்கள் ஒரே அளவுக்கு மதியம் வெப்பம் பதிவாகியுள்ளது.
பெங்களூரில் அதிகம்
கடந்த 3 நாட்கள் அதை விட மோசம்.. கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 14) சென்னையில் மதிய நேரம் 33 டிகிரி செல்சியஸ் வெப்பம் தான் பதிவாகி இருந்தது. ஆனால் அதே வெள்ளிக்கிழமை பெங்களூரில் மதியம் 35 டிகிரி வரை வெப்பம் பதிவானது. கடந்த சனிக்கிழமையும் (மார்ச் 15) சென்னையில் அதிகபட்சமாக 33 டிகிரி செல்சியஸ் மட்டுமே வெப்பம் பதிவான நிலையில், பெங்களூரில் அதிமுக 34 டிகிரி செல்சியஸ் வெப்பமே பதிவானது. நேற்றும் கூட இதே நிலையே தொடர்ந்து இரு நகரங்களிலும் 33 டிகிரி செல்சியஸ் வெப்பமே பதிவானது.
என்ன காரணம்
பெங்களூரில் இந்தளவுக்கு வெப்பம் அதிகமாக இருக்க என்ன காரணம் என்பது குறித்து பெங்களூர் வானிலை மைய தலைவர் பாட்டீல் விளக்கியுள்ளார். அதாவது வறண்ட காற்று மற்றும் மேகமூட்டம் இல்லாததுமே வெப்பம் அதிகரிக்கக் காரணம் எனக் குறிப்பிடுகிறார். வரும் நாட்களில் கூட மேகங்கள் உருவாவதற்கான வாய்ப்பு குறைவு என்பதால் இதேபோன்ற வானிலையே வரும் நாட்களிலும் தொடும் என எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.
எப்போதும் குளுகுளு சில் கிளைமேட்டிலேயே இருந்து பழக்கப்பட்ட பெங்களூர்வாசிகளுக்கு இந்த அதீத வெப்பத்தைத் தாங்க முடியவில்லை. இதனால் மதிய நேரங்களிலே வெளியே செல்லவே பல முறை யோசிக்க வேண்டிய ஒரு சூழலுக்கு பெங்களூர்வாசிகள் தள்ளப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications