பெங்களூரில் தீவிரவாதிகள் பதுங்கல்? வீடு வீடாக சோதனை நடத்தும் போலீசார்.. மக்கள் அதிர்ச்சி
பெங்களூர்: தீவிரவாதிகள் நடமாட்டம் தொடர்பான உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து, கர்நாடக மாநிலம் தலைநகர் பெங்களூருவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஈஸ்டர் பண்டிகை தினத்தன்று இலங்கையில் தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு, தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்த தாக்குதல்களுக்கு இலங்கை தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு மற்றும், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்றுக் கொண்டுள்ளன.
இந்த தாக்குதல்கள் தொடர்பான விசாரணையின்போது திடுக்கிடும் தகவல் ஒன்று வெளியானது. இலங்கை ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க இதை நிருபர்களிடம் போட்டு உடைத்தார்.
பெங்களூர், கேரளா, காஷ்மீர்
இலங்கையில் நடைபெற்ற தாக்குதலின் பின்னணியில் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் உதவியும் இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த தாக்குதலில் சதித்திட்டம் தீட்டியவர்கள், பெங்களூரு, கேரளா மற்றும் காஷ்மீர் ஆகிய இடங்களுக்கு அவ்வப்போது சென்று வந்துள்ளது தெரிய வந்துள்ளது. இவர்கள் பிற தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளவும், அல்லது அங்கு உள்ளவர்களுக்கு பயிற்சி அளிக்கவும் சென்று இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம், என்று தனது பேட்டியின் போது ஒரு பெரிய குண்டை தூக்கி போட்டார்.
தொலைபேசி அழைப்புகள்
இந்திய உளவுத்துறையும் கூட இந்த தகவல்களை உறுதிப்படுத்தியுள்ளது. இலங்கை தாக்குதலில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் நபர்களின், செல்போன் எண்களுக்கு, பெங்களூரு, சென்னை, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தொலைபேசி அழைப்புகள் சென்றுள்ளதும், இந்திய உளவுத்துறை விசாரணையில் உறுதியாகியுள்ளது.
பெங்களூர் தொடர்புகள்
பெங்களூரில் அவர்கள் யாரை சந்திக்க வந்தனர் என்பது தொடர்பான விசாரணையை முடுக்கிவிடும் படி, மத்திய உளவுத் துறை சார்பில் மாநில உளவுத் துறையிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில், பெங்களூருவில் காவல்துறை பாதுகாப்பை அதிகப்படுத்தியுள்ளது. இலங்கை தாக்குதலின் மூளையாக செயல்பட்ட, தீவிரவாதிகளின் நண்பர்கள், மற்றும் அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் பெங்களூருவில் இருக்கிறார்களா என்பதை கண்டறிவதற்காக வீடுவீடாக காவல்துறை சோதனை நடத்தி வருகிறது.
வீடு வீடாக சோதனை
பெங்களூர், ஆடுகோடி பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் 'ஒன்இந்தியா தமிழ்' இணைய தளத்திடம், இது தொடர்பாக கூறுகையில், "எங்கள் வீட்டிற்கு இரு தினங்களுக்கு முன்பாக இரு பெண் கான்ஸ்டபிள்கள் வருகை தந்தனர். அவர்கள் வீட்டில் உள்ள அனைவரது ஆதார் விபரம் தொடர்பான நகல்களை அளிக்குமாறு கேட்டனர். ஆதார் தொடர்பான விவரம் அப்போது எங்கள் வீட்டில் இல்லை என்பதை, வீட்டில் இருந்த, பெண்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, காவல் நிலையத்தில் வந்து அவற்றை ஒப்படைக்குமாறு கூறிச் சென்றுள்ளனர். இவ்வாறு எங்கள் ஏரியாவில் பல்வேறு வீடுகளுக்கும் சென்று விசாரணை நடத்தியதாக கேள்விப்பட்டோம்" என்று தெரிவித்தார்.
|
வாட்ஸ்அப் வதந்திகள்
இதனிடையே, பெங்களூரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தீவிரமாக ஒரு தகவல் பரவி வந்தது. இதை பெங்களூர் நகர காவல்துறை மறுத்துள்ளது. இதுபோன்ற வதந்தி தகவல்களை பரப்ப வேண்டாம் என்று காவல்துறை சார்பில் ட்விட்டரில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.