பெங்களூரில் புதிதாக 30 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு.. மாஸ்டர் பிளான் ரெடி
பெங்களூரு: பெங்களூரு நகரத்தின் பொருளாதாரத்தை வரும் 2037ஆம் ஆண்டிற்குள் 390 முதல் 420 பில்லியன் டாலராக உயர்த்தவும், கூடுதலாக 25 முதல் 30 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் வாய்ப்புள்ளதாகத் தலைமைச் செயலாளர் ஷாலினி ரஜனீஷ் தலைமையில் நடைபெற்ற உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. ஐடி ஊழியர்களின் சொர்க்கபுரியான பெங்களூர் அடுத்தகட்டத்திற்கு உயர்த்தப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
முக்கிய அம்சங்கள்
2037ஆம் ஆண்டிற்குள் பெங்களூருவின் பொருளாதார மதிப்பு 420 பில்லியன் டாலராக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் பெங்களூரு பெருநகரப் பகுதியில் (BMR) வரும் நாட்களில் 30 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக வாய்ப்புள்ளது என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், நகரின் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த 287 கிலோமீட்டர் தூரத்திற்கு வட்டார ரயில் (Circular Rail) திட்டம் கொண்டு வரப்படவுள்ளது.

தற்போது பெங்களூரு பெருநகரப் பகுதியின் பொருளாதார மதிப்பு 149 பில்லியன் டாலராக உள்ளது. இது கர்நாடகாவின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் (GSDP) 43 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பை வழங்குகிறது. அதாவது மொத்த மாநிலத்தின் பாதி வளர்ச்சி பெங்களூரை மட்டுமே சார்ந்துள்ளது.
பெங்களூரு பெருநகரப் பகுதியின் தலா ஜிடிபி (Per Capita GDP) சுமார் 9,700 டாலர் (சுமார் 9.15 லட்சம் ரூபாய்) ஆகும். இது கர்நாடகாவின் சராசரியை விட (5,000 டாலர்) 1.9 மடங்கும், இந்திய தேசிய சராசரியை விட (2,500 டாலர்) நான்கு மடங்கும் அதிகமாகும்.
வளர்ச்சியை மேம்படுத்தும் புதிய திட்டங்கள்
ஐஎஸ்இஜி (ISEG) அறக்கட்டளை தயாரித்துள்ள பொருளாதார மாஸ்டர் பிளான் படி, பெங்களூருவின் மையப்பகுதியில் உள்ள அழுத்தத்தைக் குறைக்க நகரின் புறநகர்ப் பகுதிகளில் தொழில் துறை, ஐடி/பிடி (IT/BT), ஆராய்ச்சி மற்றும் லாஜிஸ்டிக்ஸ் உள்ளிட்ட புதிய 'வளர்ச்சி மையங்கள்' (Growth Centres) அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
நகரத்தின் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த 287 கிலோமீட்டர் நீளமுள்ள வட்டார ரயில் நெட்வொர்க் (Circular Rail Network), 400-500 கிலோமீட்டர் கூடுதல் மெட்ரோ ரயில் நெட்வொர்க், 4 புதிய பிராந்திய விரைவுப் போக்குவரத்து (RRTS) வழித்தடங்கள் மற்றும் புறநகர் ரயில் நெட்வொர்க் விரிவாக்கம் ஆகியவை இந்தத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த இறுதி மாஸ்டர் பிளான் அறிக்கை செப்டம்பர் முதல் வாரத்தில் துணை முதல்வர் டி.கே. சிவக்குமாரிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது. எல்லாம் சரியாகி பெங்களூர் தனது பெருமையை மீட்டெடுக்குமா?












Click it and Unblock the Notifications