பெங்களூரில் பிப்ரவரியிலேயே திடீரென 4 டிகிரி அதிகரித்த வெயில்! காரணமான ‛எல்-நினோ’.. அப்படினா?
பெங்களூர்: பெங்களூரில் கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்ச வெப்பநிலை என்பது 34.1 டிகிரி செல்சியஸாக பதிவாகி உள்ளது. இது வழக்கமான வெப்பநிலையை விட 4 டிகிரி அதிகமாகும். இந்நிலையில் தான் வெயில் இப்படியே தொடருமா? இல்லை குறையுமா? பெங்களூரில் கோடைக்காலம் வருவதற்கு முன்பு வெயிலின் தாக்கம் அதிகரித்ததன் பின்னணி காரணம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
பெங்களூர்.. கர்நாடகாவின் தலைநகராக இந்த ஊர் இந்தியாவின் மிக முக்கிய நகரங்களில் ஒன்றாக உள்ளது. பூங்கா நகர் என்ற புனைப்பெயருக்கும் பெங்களூர் சொந்தமாகும். இங்கு நிலவும் குளு.. குளு சீதோஷ்ண நிலைக்காகவே ஏராளமான ஐடி நிறுவனங்கள் படையெடுத்து சென்றன.

இந்த குளுமையான வானிலைக்கு முக்கிய காரணம் என்பது பெங்களூர் நகரில் இருக்கும் பூங்காக்கள் மற்றும் பெரும்பாலான ரோடுகளிலும் நிறைந்து இருந்த மரங்களாகும். ஆனால் சமீபகாலமாக பெங்களூரின் நிலை என்பது முற்றிலுமாக மாறிவிட்டது.
மேம்பால பணி, மெட்ரோ பணி உள்பட வெவ்வேறு விஷயங்களுக்காக மரங்கள் என்பது வெட்டி அகற்றப்பட்டுள்ளன. இதனால் குளிர்ச்சி நிறைந்த பெங்களூரில் படிப்படியாக வெப்பத்தின் அளவு என்பது அதிகரிக்க தொடங்கி உள்ளது. குறிப்பாக இந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது முதல் பெங்களூரில் வெயில் என்பது அதிகரிக்க தொடங்கி உள்ளது. இயல்பு வெப்பநிலையை தாண்டி வெயில் மண்டை பிளக்கிறது.
அதாவது பொதுவாக பெங்களூரில் பிப்ரவரி மாத தொடக்கத்தில் சராசரி வெப்பநிலை என்பது 31 டிகிரி செல்சியஸாக இருக்கும். ஆனால் கடந்த 24 மணிநேரத்தில் இயல்பு வெப்பநிலையில் வழக்கத்தை விட 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரித்துள்ளது. அதாவது பெங்களூரில் அதிகபட்ச வெப்பநிலை என்பது 34.1 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் பதிவாகி உள்ளது.
மேலும் இரவு நேரத்தில் நிலவும் குறைந்தபட்ச வெப்பநிலையும் 2 டிகிரி வரை அதிகரித்துள்ளது. அதாவது தற்போதைய சூழலில் பெங்களூரில் குறைந்தபட்ச வெப்பநிலை என்பது சராசரியாக 16.4 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருக்க வேண்டும். ஆனால் கடந்த 24 மணிநேரத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை என்பது 18.4 டிகிரி செல்சியஸாக இருந்துள்ளது.
இதனால் பெங்களூர் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மதிய வேளையில் போக்குவரத்து நெரிசலுக்கு நடுவே வாகனங்கள் ஓட்டி செல்வோர் அதிக சிரமத்தை சந்தித்தனர். இந்த வெப்பநிலை இனி கோடைக்காலம் வரை சிறிய மாற்றங்களுடன் வெப்பநிலை என்பது 30 டிகிரி செல்சியசுக்கு மேலாகவே இருக்கும் என வானிலை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதனால் மக்கள் கவலையடைந்துள்ளனர்.
அடுத்த வாரத்தை பொறுத்தமட்டில் அதிகபட்ச வெப்பநிலை என்பது 33 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை என்பது 17 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பெங்களூரில் திடீரென்று வெயில் அதிகரிக்க எல் நினோவின் தாக்கம் தான் முக்கிய காரணம் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எல் நினோ என்பது ஒரு காலநிலை மாறுபாட்டை குறிக்கும். அதாவது பசிபிக் பெருங்கடலில் நீரின் மேற்பரப்பில் அதிகரிக்கும் வெப்பம் என்பது அதிக வெப்பநிலையை கொடுப்பதோடு, பருவமழையின் அளவை கட்டுப்படுத்தும். இதற்கு தான் எல் நினோ என்று பெயர். தற்போது இந்த எல் நினோவின் தாக்கத்தால் தான் பெங்களூரில் வெப்பநிலை என்பது உயர்ந்து மக்களை வாட்டி வதைக்க தொடங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூர் மட்டுமின்றி தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்திலும் வெப்பநிலை என்பது அதிகரித்து காணப்படுகிறது. ஹைதராபாத்தை பொறுத்தமட்டில் குளிர்காலம் என்பது பிப்ரவரி மாதம் 3வது வாரத்தில் முடிவடையும். ஆனால் இந்த ஆண்டு அது முன்கூட்டியே முடிவடைந்துவிட்டது.
அதுமட்டுமின்றி கடந்த 5 ஆண்டுகளில் முதல் முறையாக ஹைதராபாத்தில் குளிர் அலை இல்லாமல் உள்ளதோடு பிப்ரவரி மாதம் முதல் வாரத்திலேயே அதிகபட்ச வெப்பநிலை என்பது 35 டிகிரி செல்சியஸை கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications