கொலை வழக்கில் பதுங்கிய பாஜக எம்எல்ஏ.. ஏர்போர்ட்டில் வைத்து அதிரடியாக கைது செய்த சிஐடி போலீசார்
பெங்களூர்: ரியல் எஸ்டேட் விவகாரத்தில் 'பிக்லு' சிவா என்பவர் கொலை செய்யப்பட்டதில் கே.ஆர். புரம் பாஜக எம்.எல்.ஏ. பைரதி பசவராஜ் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தலைமறைவாக இருந்த நிலையில், பெங்களூர் விமான நிலையத்தில் வைத்து அவரை சிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் கொலை வழக்கு ஒன்றில் எம்எல்ஏ ஒருவர் பெங்களூர் ஏர்போர்ட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். ரியல் எஸ்டேட் விவகாரத்தில் 'பிக்லு' சிவா என்பவர் கொலை செய்யப்பட்டதில் கே.ஆர். புரம் பாஜக எம்.எல்.ஏ. பைரதி பசவராஜுக்கு தொடர்பு இருப்பதாகச் சொல்லப்பட்டது. கடந்த 9 மாதங்களாகவே பைரதி மீது குற்றச்சாட்டு இருந்தது.

முன்ஜாமீன்
அவர் சீக்கிரமே கைது செய்யப்படலாம் என்று தகவல்கள் பரவி நிலையில், அவர் முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இருப்பினும், அவருக்கு முன்ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. முன்ஜாமீன் நிராகரிப்பு குறித்த தகவல் வந்த சில மணி நேரத்திலேயே 'பிக்லு' சிவா கொலை வழக்கில் பைரதி பசவராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பெங்களூர் விமான நிலையத்திற்கு வந்த நிலையில், அங்கு வைத்து அவரை கர்நாடக மாநிலத்தின் சிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.
தலைமறைவு
முதலில் கர்நாடக உயர் நீதிமன்றம் அவரது ஜாமீன் மனுவை நிராகரித்து இருந்தது. இதையடுத்து பசவராஜ் உச்ச நீதிமன்றத்தை நாடினார். இந்த வழக்கில் பைரதியை சிஐடி போலீசார் ஏற்கனவே இரு முறை விசாரணைக்கு அழைத்திருந்தது. மற்றொரு முறை விசாரணைக்கு அழைத்த நிலையில், அவர் தலைமறைவானார். கைது செய்யப்படுவோமோ எனப் பயந்த அவர் முன்ஜாமீன் கோரியிருந்தார்.

கைது
உயர் நீதிமன்றம் ஜாமீன் மனுவை நிராகரிக்கவே, சிஐடி அவரை தேடும் பணிகளை ஆரம்பித்தது. கர்நாடக உள்துறை அமைச்சரும் அவரை சரணடைய வலியுறுத்தினார். இந்தச் சூழலில் தான் உச்ச நீதிமன்றமும் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. இந்தச் சூழலில் தான் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அகமதாபாத்திலிருந்து விமானம் மூலம் பசவராஜ் பெங்களூர் வந்துள்ளார். விட்டால் தலைமறைவாகிவிடுவார் என்பதால் விமான நிலையத்தில் வைத்தே CID அதிகாரிகள் நேற்று அவரை கைது செய்தனர்.
விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட அவர், தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். சட்ட நடைமுறைகளின்படி, அவருக்கு வழக்கமான மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். அப்போது அவரை காவலில் எடுத்து விசாரிக்கவும் கோரிக்கை விடுக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
பின்னணி
'பிக்லா' சிவா கொலை வழக்கில் பாஜக எம்எல்ஏ பசவராஜ், ஐந்தாவது குற்றவாளியாகப் பெயரிடப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்ட 44 வயதான வி.ஜி. சிவபிரகாஷ் என்கிற 'பிக்லா' சிவா, 12க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளைக் கொண்ட பிரபல ரவுடி ஆவார். ரியல் எஸ்டேட் துறை போட்டியால், 2025 ஜூலை 15ஆம் தேதி இரவு பாரதி நகரில் ஒரு கும்பலால் அவர் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார்.
சில சர்ச்சைக்குரிய சொத்து விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று சிவாவை அழைத்துள்ளனர். அவரும் அன்று பேச்சுவார்த்தைக்கு நம்பிப் போய் இருக்கிறார். அப்போது தான் மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் முக்கியமான சாலையில் கொடிய ஆயுதங்களால் அவர் தாக்கப்பட்டார். அங்கேயே கொல்லப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக பசவராஜின் நெருங்கிய கூட்டாளியான 42 வயது ஜகதீஷ் பத்மநாபா (ஜகா) உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications