அண்ணாமலைக்கு காய்ச்சல்! கட்சி நிகழ்ச்சிகள் 2 நாட்களுக்கு ரத்து! பெங்களூரில் தங்கி ஓய்வு!
காய்ச்சல் காரணமாக அண்ணாமலை பங்கேற்க இருந்த தென்காசி கட்சி நிகழ்ச்சிகள் ரத்து.
பெங்களூர்: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு காய்ச்சல் இருப்பதால் அவர் பங்கேற்க இருந்த அனைத்து கட்சி நிகழ்ச்சிகளும் 2 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளன.
அந்த வகையில் இன்று தென்காசியில் அண்ணாமலை கலந்துகொள்ளவிருந்த பல்வேறு நிகழ்ச்சிகள் வேறொரு தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதனிடையே தேர்தல் பணிகள் காரணமாக பெங்களூரில் உள்ள அவர் அங்கேயே தங்கி ஓய்வெடுத்து வருகிறார்.

பாஜக தலைவர்
பாஜக மாநிலத் தலைவரும், கர்நாடக சட்டமன்றத் தேர்தல் பாஜக பொறுப்பாளருமான அண்ணாமலை கட்சிப் பணிகள் காரணமாக ஓய்வின்றி ஓடிக்கொண்டே இருக்கிறார். குறிப்பாக நேற்று முன் தினம் தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் பாஜக அலுவலகம் திறக்கப்பட்ட நிலையில், அதற்கான முன்னேற்பாடு பணிகள் காரணமாக அண்ணாமலை சுற்றி சுழன்றிருக்கிறார். தினமும் ஒரு ஊர், பல்வேறு நிகழ்ச்சிகள் என அவர் சுற்றிக்கொண்டே இருப்பதால் அதனால் ஏற்பட்ட அலுப்பு காரணமாக அவருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தென்காசி நிகழ்ச்சி
எந்த வகை காய்ச்சல் என்ற விவரம் எதுவும் வெளியாகவில்லை. லேசான காய்ச்சல் என்று மட்டுமே தெரிவிக்கப்படுகிறது. பெங்களூரிலேயே காய்ச்சலுக்கு சிகிச்சை எடுத்துக்கொண்ட அண்ணாமலை நாளையோ அல்லது நாளை மறுதினமோ சென்னை திரும்புவார் எனத் தெரிவிக்கப்படுகிறது. முன்னதாக இன்று தென்காசியில் அண்ணாமலை கலந்துகொள்ளவிருந்த பல்வேறு நிகழ்ச்சிகள் வேறொரு தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

ஓய்வு அவசியம்
தற்போது எங்கு பார்த்தாலும் இன்புளூயன்ஸா வைரஸ் வேகமாக பரவி வருவதால் காய்ச்சல், சளி, இருமல் என மக்கள் பல்வேறு உபாதைகளால் அவதிப்படுகின்றனர். இதனிடையே அண்ணாமலையை 2 நாட்களுக்கு மருத்துவர்கள் ஓய்வெடுக்குமாறு அறிவுறுத்தியிருப்பதாகவும் ஆனால் அவரோ நாளையே கட்சிப்பணிகளுக்கு திரும்ப வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பன்னிரெண்டாம் வகுப்பு
நாளை பொதுத்தேர்வு எழுதும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வாழ்த்துக் கூறி டிவிட்டரில் பதிவு வெளியிட்டுள்ள அண்ணாமலை, சென்னை பெங்களூரு சாலை தொடர்பாக முதல்வர் ஸ்டாலினை டேக் செய்து கோரிக்கை ஒன்றையும் வைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications