தமிழ்நாட்டில் தமிழ்த் தாய் வாழ்த்து போல..கர்நாடகாவில் வெடித்த கன்னடத்தாய் வாழ்த்து-சட்டசபையில் அமளி!
பெங்களூர்: தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவியால் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடல் விவகாரம் வெடித்திருப்பது போல கர்நாடகாவில் கன்னடத் தாய் வாழ்த்துப் பாடல் விவகாரம் சட்டசபையில் பெரும் அமளியை ஏற்படுத்தியது.
தமிழ்நாடு சட்டசபையில் ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். ஆனால் தமது உரையை முழுமையாக வாசிக்காமல் சில நிமிடங்களிலேயே உரையை முடித்துக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆளுநர் ரவி வெளிநடப்பு: தமிழ்நாடு சட்டசபையில் முதலில் தேசிய கீதத்தை இசைக்க வேண்டும் என்ற தமது கோரிக்கையை ஏற்காததால் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தாம் உரையை முழுமையாக வாசிக்கவில்லை என ஆளுநர் ரவி தமது உரையில் குறிப்பிட்டிருந்தார். இதற்கு சட்டசபையிலேயே சபாநாயகர் அப்பாவு விளக்கமும் தந்தார். தமிழ்நாடு சட்டசபைக்கு என ஒரு மரபு உள்ளது. ஆளுநர் உரையின் தொடக்கத்தின் தமிழ்த் தாய் வாழ்த்தும் நிறைவில்தான் தேசிய கீதமும் இசைக்கப்படும். கடந்த ஆண்டே இது தொடர்பாக ஆளுநர் ரவி குறிப்பிட்டதற்கு பதிலும் தரப்பட்டது என்றார் சபாநாயகர் அப்பாவு. ஆனால் ஆளுநர் ரவியோ இதனை ஏற்க மறுத்து சட்டசபையில் இருந்து தேசிய கீதம் இசைப்பதற்கு முன்னரே வெளிநடப்பும் செய்ய பெரும் சர்ச்சையாக வெடித்தது.
திமுக பதிலடி: ஆளுநர் ஆர்.என்.ரவியின் இந்த போக்குக்கு கண்டனமும் எதிர்ப்பும் தெரிவிக்கும் வகையில் தமிழ்நாட்டில் திமுகவின் அனைத்து பொதுக் கூட்டங்களும் இனி தமிழ்த் தாய் வாழ்த்துடனேயே தொடங்கும் என அதிரடியாக அறிவித்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். இதன்படியே திமுக பொதுக் கூட்டங்கள், தமிழ்த் தாய் வாழ்த்து பாடலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
பாஜகவினரால் அமளி: இதேபோல கர்நாடகாவில் கன்னட வாழ்த்துத் தாய் பாடல் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. கர்நாடகா சட்டசபையில் நேற்று பேசிய எதிர்க்கட்சித் தலைவரான பாஜகவின் அசோக், கன்னடத் தாய் வாழ்த்துப் பாடல் தொடர்பாக மாநில அரசின் உத்தரவில் தனியார் பள்ளிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. தனியார் பள்ளிகளில் கன்னடத் தாய் வாழ்த்த் பாடுவது கட்டாயமில்லை என்கிறது அந்த உத்தரவு.அப்படியானால் கன்னட்த் தாய் வாழ்த்தை தனியார் பள்ளிகள் பாடக் கூடாதா? இதற்காக கன்னட வளர்ச்சித்துறை அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும். கர்நாடகாவில் நடப்பது துக்ளக் தர்பார் அரசு என கடுமையாக கொந்தளித்தார். இதனைத் தொடர்ந்து பாஜக எம்.எல்.எக்கள் ஆவேசமாக முழக்கங்கள் எழுப்ப அமளி ஏற்பட்டது.
அமைச்சர் விளக்கம்: ஆனால் இதற்கு பதிலளித்த கன்னட வளர்ச்சித் துறை அமைச்சர் சிவராஜ் தங்கடகி பதிலளிக்கையில், நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு ஒன்றுக்காக அரசின் உத்தரவு தாக்கல் செய்யப்பட்டது. அதில் தனியார் பள்ளிகள் என்பது விடுபட்டுவிட்டது. அது அச்சுப் பிழைதான். அதனை சரி செய்து புதிய உத்தரவும் வழங்கப்பட்டுவிட்டது என்றார்.
அதிகாரிகள் மீது நடவடிக்கை: இருந்தபோதும் இதனை விட்டுவிடாத பாஜக எம்.எல்.ஏக்கள், தனியார் பள்ளிகளை சேர்க்காமல் உத்தரவு தயாரித்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். இதனால் மீண்டும் அமைச்சர் சிவராஜ் தங்கடகி, தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதன் பின்னரே கர்நாடகா சட்டசபையில் அமளி ஓய்ந்தது. அண்மையில்தான் கன்னட அறிஞர் குவெம்பு பொன்மொழிகள் நீக்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications