‛‛கிளம்பிய சந்தேகம்’’ .. ராமேஸ்வரம் கஃபேயில் வெடிகுண்டு வெடித்தது எப்படி? நிறுவனரின் முதல் ரியாக்சன்
பெங்களூர்: பெங்களூரில் உள்ள பிரபல உணவகமான ராமேஸ்வரம் கஃபேயில் இன்று வெடிகுண்டு வெடித்தது. இதில் ஒரு பெண், 3 ஊழியர்கள் உள்பட 9 பேர் படுகாயமடைந்துள்ளனர். அங்கு வெடிகுண்டு எப்படி வந்தது? என்பது இன்னும் தெரியாத நிலையில் கஃபேயின் நிறுவனரான திவ்யா சந்தேகம் கிளப்பி உள்ளார்.
பெங்களூரில் ஐடி நிறுவனங்கள் உள்பட பல முன்னணி நிறுவனங்கள் உள்ளன. இதனால் நகரின் முக்கிய இடங்களிலும், ஐடி நிறுவனங்கள் உள்ள பகுதிகளிலும் பிரபலமான டீ ஷாப், ஓட்டல்கள் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் பெங்களூர் ஒயிட்பீல்ட்டில் உள்ள ப்ரூக்பீல்ட் பகுதியில் ராமேஸ்வரம் கஃபே எனும் பிரபலமான உணவகம் உள்ளது.

இந்த உணவகத்தில் பல துறை பிரபலங்கள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் தான் இன்று மதியம் உணவகத்தில் வாடிக்கையாளர்களுக்கு வழக்கம்போல் உணவுகள் பரிமாறப்பட்டன. அப்போது திடீரென்று மர்மபொருள் வெடித்தது. ஓட்டலில் கைகழுவும் இடத்தின் அருகே இருந்து மர்மபொருள் வெடித்தது.
இதில் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் என மொத்தம் 9 பேர் காயமடைந்தனர். வெடிகுண்டு நிபுணர்கள், போலீசார் மற்றும் தடயவியல் துறையினர், என்ஐஏ எனும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் உணவகத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். இருப்பினும் வெடித்தது எந்த பொருள், இல்லாவிட்டால் அது வெடிகுண்டா என்பதில் சந்தேகம் நீடித்து வந்தது. இந்த குழப்பத்துக்கு முதல்வர் சித்தராமையா முற்றுப்புள்ளி வைத்தார்.
பயங்கரம்.. பெங்களூர் ராமேஸ்வரம் கஃபேயில் குண்டு வெடிப்பு.. உறுதி செய்த கர்நாடக முதல்வர்
அதாவது ராமேஸ்வரம் கஃபேயில் வெடித்தது வெடிகுண்டுதான் என சித்தராமையாவாக தெரிவித்துள்ளார். மேலும் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னணி குறித்த விபரம் சேகரிக்கப்பட்டு விஷமிகள் கைது செய்யப்படுவார்கள் என கூறியுள்ளார். அதேபோல் மக்கள் யாரும் பயப்பட வேண்டாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தான் ராமேஸ்வரம் கஃபேயில் குண்டு வெடித்தது பற்றி அதன் நிறுவனரான திவ்யா ராகவேந்திர ராவ் கூறுகையில், ‛‛ எங்களுக்கு எதிரிகள் இல்லை. தொழில் ரீதியாகவும் எதிரியாக மாறும் வகையில் போட்டியாளர்களாக இல்லை. இதனால் இந்த சம்பவத்தின் பின்னணியில் வேறு காரணம் இருக்கலாம்.
நான் இப்போது ஹைதராபாத்தில் இருக்கிறேன். எனக்கு 2 மாதத்துக்கு முன்பு தான் குழந்தை பிறந்தது. இதனால் ஓய்வில் இருக்கிறேன். நான் இப்போது பெங்களூரில் இல்லை. ஆனால் அங்குள்ள எனது ஊழியர்கள் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுத்து வருகின்றனர். மேலும் கண்காணிப்பு கேமரா பதிவுகள் போலீசாரிடம் வழங்கப்பட்டுள்ளது’’ என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications