ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு 51 சதவீதமாக உயர்த்தணும்... கர்நாடக அரசுக்கு ஆணையம் பரிந்துரை
பெங்களூர்: கர்நாடகத்தில் பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களின் இட ஒதுக்கீட்டை 51 சதவீதமாக உயர்த்துவதற்கு அரசுக்கு, சாதி வாரி கணக்கெடுப்பு தொடர்பாக நடத்தப்பட்ட ஜெயபிரகாஷ் ஹெக்டே ஆணையம் சிபாரிசு செய்திருப்பது தெரியவந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு அப்போது ஆட்சியில் இருந்த பாஜக சாதி வாரி கணக்கெடுப்பு ஆணைய தலைவராக ஜெயபிரகாஷ் ஹெக்டேவை நியமித்தது. ஜெயபிரகாஷ் ஹெக்டே தலைமையில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு ரூ.160 கோடி செலவில் நடத்தப்பட்டது.

இடஒதுக்கீட்டை அதிகரிக்க பரிந்துரை
அந்த அறிக்கையை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சித்தராமையாவிடம் ஆணைய தலைவர் ஜெயபிரகாஷ் ஹெக்டே வழங்கி இருந்தார். அந்த அறிக்கையானது நேற்று முன்தினம் கர்நாடக கேபினட்டில் தாக்கல் செய்யப்பட்டது. இது குறித்து வரும் 17 ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் விரிவாக ஆலோசனை செய்யப்பட உள்ளது.
இதற்கிடையே, சாதி வாரி கணக்கெடுப்பு நடத்திய ஜெயபிரகாஷ் ஹெக்டே தலைமையிலான ஆணையம் பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களின் இடஒதுக்கீட்டை அதிகரிக்கவும் பரிந்துரை செய்து இருக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
51 சதவீதமாக உயர்த்த
சாதிவாரியாக நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் போது ஒவ்வொரு சாதி மக்களின் பொருளாதார நிலை உள்ளிட்டவை குறித்தும் ஆய்வு நடத்தப்பட்டு இருந்தது. எனவே, ஜெயபிரகாஷ் ஹெக்டே தாக்கல் செய்து இருக்கும் அறிக்கையில், பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களின் (ஓபிசி) ரிஷர்வேஷனை அதிகரிக்கும்படி சிபாரிசு செய்திருப்பதற்கான தகவல்களும் கசிந்து உள்ளது.
லிங்காயத், ஒக்கலிகா உள்ளிட்ட சாதிகளின் பிற்படுத்தப்பட்ட சாதிகளின் பட்டியலில் உள்ளன. இதனால், இந்த சாதிகளின் இட ஒதுக்கீடுவை 32 சதவீதத்தில் இருந்து 51 சதவீதமாக உயர்த்தும்படி அரசுக்கு ஜெயபிரகாஷ் ஹெக்டே பரிந்துரை செய்திருப்பது தெரியவந்துள்ளது. பிற்படுத்தப்பட்ட சமுதாய பட்டியலில் இஸ்லாமியர்களும் சேர்க்கப்பட்டு அவர்களுக்கும் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
லிங்காயத், ஒக்கலிகா சமுதாயம்
தற்போது உள்ள 32% இட ஒதுக்கீட்டை 51 ஆக உயர்த்தும் போது, பிற்படுத்தப்பட்ட சமுதாயங்கள் கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடையும் என்றும் கூறப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்ட சமுதாயங்கள் ஒவ்வொரு வர்க்கமாக பிரிக்கப்பட்டு, அவர்களுக்கு இடஒதுக்கீடு அதிகரிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கர்நாடகத்தில் மிகவும் செல்வாக்காக இருக்கும் 2 முக்கிய சமுதாயங்களான லிங்காயத் மற்றும் ஒக்கலிகா சமுதாயங்களின் இடஒதுக்கீடும் தலா 3 சதவீதம் அதிகரிக்கும். சாதிவாரி கணக்கெடுப்பில் அந்த 2 சமுதாயத்தினர் தலா 75 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உள்ளதால், அவர்களின் இடஒதுக்கீடுவை தலா 3 சதவீதமாக உயர்த்த சிபாரிசு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சிபாரிசை அரசு ஏற்குமா?
இதற்கு முன்பு காந்தராஜ் தலைமையிலான ஆணையம் நடத்திய ஆய்வின் அடிப்படையிலேயே, ஜெயபிரகாஷ் ஹெக்டே தலைமையிலான ஆணையமும் கணக்கெடுப்பு நடத்தி அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. எனவே, இந்த சிபாரிசை அரசு ஏற்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதே வேளையில், பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களின் இடஒதுக்கீட்டை அதிகரிக்க எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பிற்படுத்தப்பட்ட சமுதாயத்துடன் முஸ்லிம்களை சேர்த்திருப்பதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.












Click it and Unblock the Notifications