கைநழுவிய முதல்வர் பதவி? டிகே சிவக்குமாருக்கு என்னென்ன பதவிகள் தெரியுமா? காங்கிரஸ் பிளான் இதுதான்
பெங்களூர்: கர்நாடகா முதல்வர் பதவிக்கு காங்கிரஸ் மேலிடம் சித்தராமையாவின் பெயரை இறுதி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்னும் சற்று நேரத்தில் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது. இந்நிலையில் தான் டிகே சிவக்குமாருக்கு வழங்கப்படும் பதவி பற்றிய முக்கிய விபரம் வெளியாகி உள்ளது.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. காங்கிரஸ் மாநில தலைவர் டிகே சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே , ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரின் உழைப்புக்கு இந்த அங்கீகாரம் கிடைத்தது.

இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் காங்கிரஸ் வென்று மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடித்துள்ளது. பாஜக 66 தொகுதிகளில் மட்டும் வென்றுள்ளது. ஜேடிஎஸ் 19 இடங்களிலும், மற்றவர்கள் 4 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர். மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 113 இடங்களில் வென்றால் போதும் என்ற நிலையில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளை தட்டித்தூக்கி உள்ளது.
இந்நிலையில் தான் கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார்? என்பதில் டிகே சிவக்குமார் மற்றும் சித்தராமையா இடையே கடும் போட்டி நிலவி வந்தது. நேற்றைய தினத்தை தொடர்ந்து அவர்கள் 2 பேரும் டெல்லியில் மேலிட தலைவர்களை சந்தித்துள்ளனர். அப்போது இருவரும் தங்களுக்கு தான் முதல்வர் பதவி வழங்க வேண்டும் என்பதை கூறினர்.
இந்நிலையில் தான் கர்நாடகா முதல்வர் பதவிக்கு சித்தராமையாவின் பெயரை காங்கிரஸ் மேலிடம் இறுதி செய்துள்ள தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றி அறிவிப்பு இன்னும் சற்று நேரத்தில் வெளியாக இருக்கிறது. அதேநேரத்தில் டிகே சிவக்குமாரை சமாதானப்படுத்தும் முயற்சியையும் கட்சி மேலிட தலைவர்கள் தொடங்கி உள்ளனர்.
இந்த வேளையில் தொடர்ந்து காங்கிரஸ் மாநில தலைவராக செயல்பட வேண்டும். அதோடு துணை முதல்வர் பதவியை ஏற்று கொள்ள வேண்டும். இது துவக்கம் தான். உரிய காலத்தில் முதல்வர் பதவி வழங்கப்படும். மேலும் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அந்த தேர்தலிலும் கர்நாடகாவில் இதேபோன்ற வெற்றி காங்கிரஸ் கட்சிக்கு தேவையான ஒன்றாகும்.
இத்தகைய சூழலில் முதல்வர் மற்றும் மாநில தலைவர் பதவியை ஒருசேர திறம்பட நிர்வகிக்க முடியாது. இதனால் தான் இந்த முடிவு. இதன் பின்னணியில் வேறு எந்த காரணமும் இல்லை. மேலும் கட்சியில் அவரது ஆதரவாளர்களுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படும். துணை முதல்வர் பதவியோடு டிகே சிவக்குமாருக்கு முக்கியமான 2 துறைகள் ஒதுக்கீடு செய்வதாக கூறப்படுகிறது.
அதன்படி துணை முதல்வர் பதவியோடு டிகே சிவக்குமார் மின்சாரம், நீர்ப்பாசனத்துறை அல்லது பொதுப்பணித்துறை ஆகியவற்றில் 2 துறைகளை காங்கிரஸ் சார்பில் ஒதுக்கீடு செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இதற்கு முன்பு 2013 -2018 காலக்கட்டத்தில் டிகே சிவக்குமார் மின்சாரத்துறை அமைச்சராக இருந்தார். அதன்பிறகு 2019 ல் காங்கிரஸ்-ஜேடிஎஸ் கூட்டணி ஆட்சியின்போது நீர்ப்பாசனத்துறை அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications