காதலர்களுக்கிடையே 5 ஆண்டுகள் உடலுறவு.. பலாத்காரமாக கருத முடியாது.. கர்நாடகா ஹைகோர்ட் தீர்ப்பு
5 ஆண்டுகள் பெண்ணின் சம்மதத்துடன் உடலுறவு கொண்டது பலாத்காரம் ஆகாது என கர்நாடகா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பெங்களூர்: 5 ஆண்டுகளாக ஆணும் பெண்ணும் பரஸ்பர சம்மதத்துடன் உடலுறவில் இருந்ததை பலாத்காரம் என கருதமுடியாது என கர்நாடகா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பெங்களூரை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஒரு பெண்ணை 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்பிய போது சாதி வேறுபாடு காரணமாக அவர்களால் திருமணம் செய்து கொள்ள முடியவில்லை.
ஆனாலும் திருமணம் செய்து கொள்வதாக சத்தியம் செய்து அந்த பெண்ணுடன் பல முறை அந்த இளைஞர் உடலுறவு கொண்டுள்ளார். இந்த நிலையில் திருமணம் செய்து கொள்ளுமாறு அந்த நபரை அந்த பெண் பல முறை கேட்டும் அவர் முடியாது என கூறிவிட்டார்.

கர்நாடகா உயர்நீதிமன்றம்
இதனால் அந்த பெண் கர்நாடகா உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளார். அங்கு அந்த பெண் அளித்த மனுவில் என்னை திருமணம் செய்து கொள்வதாக நம்ப வைத்து பலமுறை பாலியல் பலாத்காரத்துக்குட்படுத்தியுள்ளார். மேலும் என்னை நம்ப வைத்து ஏமாற்றி அடிக்கடி அவரது இச்சையை தீர்த்துக் கொண்டுள்ளார் என அந்த பெண் புகார் அளித்தார்.

நீதிபதி
இந்த வழக்கை விசாரித்த கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி நாகபிரசன்னா கூறுகையில், ஒன்றிரண்டு முறையோ அல்லது நாள் கணக்கிலோ மாதக் கணக்கிலோ கூட அல்ல, பல ஆண்டுகளாக இருவருக்கும் பழக்கம் இருந்துள்ளது. துல்லியமாக சொல்ல போனால் 5 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த நிலையில் பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக அந்த இளைஞர் உறவு கொண்டிருப்பார் என சொல்ல முடியாது.

துரோகம்
ஏனென்றால் இருவருக்கும் இடையேயான அத்தகைய உறவின் காலம் குற்றச்சாட்டுகளின் கடுமையை போக்கிவிடுகிறது. இருவருக்கும் இடையிலான பணபரிமாற்றங்கள் மட்டுமே இந்திய தண்டனை சட்டம் 406 இன் பிரிவின் கீழ் நம்பிக்கை துரோகம் செய்த குற்றம் ஆகாது, ஆனால் சட்டப்பிரிவு 323, 506 ஆகியவற்றின் கீழ் உள்ள குற்றச்சாட்டுகள் குறித்து அந்த நபரிடம் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும்.

பலாத்காரம் ஆகாது
சட்டப்பிரிவு 375 இன் படி பெண்ணின் சம்மதம் இல்லாமலும் பெண்ணின் விருப்பத்திற்கு எதிராகவும் உடலுறவு கொள்வதை பாலியல் பலாத்காரம் ஆகும். ஆனால் 376 சட்டம் பாலியல் பலாத்காரத்திற்கான தண்டனைகளை விளக்குகிறது. 5 ஆண்டுகால உடலுறவின் போது இருவருக்கும் ஒருமித்த கருத்து இருந்ததால் எந்த வகையிலும் அதை பலாத்காரம் என சொல்ல முடியாது என நீதிபதி கூறினார். அது போல் இதே கருத்தை குற்றம்சாட்டப்பட்ட நபரின் வழக்கறிஞரும் வாதிட்டார். ஆனால் அந்த பெண்ணோ தனது சம்மதத்துடன் உடலுறவு கொண்டாலும் திருமணம் செய்து கொள்வதாக பொய்யான வாக்குறுதியின் அடிப்படையில் நடந்ததால் இது பலாத்காரம் தான் என வாதங்கள் முன் வைக்கப்பட்டன.












Click it and Unblock the Notifications