கர்நாடக முதல்வர் பதவி எனக்கு கிடைக்காமல் போக காரணம் இதான்.. ஆனால்.. டிகே சிவக்குமார் சூசகம்! ஆஹா!
பெங்களுர் : கர்நாடகாவில் முதலமைச்சர் பதவிக்கான ரேஸில் இருந்து வந்த டிகே சிவக்குமார் பின்னர் துணை முதலமைச்சர் பதவியை ஏற்றார். இந்நிலையில், தனக்கு முதல்வர் பதவி கிடைக்காததன் காரணத்தை மனம் திறந்து பேசியுள்ள அவர், இன்னொரு விஷயத்தையும் சூசகமாக கூறியுள்ளார்.
கர்நாடகாவில் கடந்த மே மாதம் 10ஆம் தேதி நடைபெற்ற சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை 13ஆம் தேதி நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. டி.கே. சிவக்குமார் மாநிலத்திலேயே அதிகபட்சமாக 1 லட்சத்து 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதையடுத்து முதலமைச்சர் யார் என்பதில் பெரும் போட்டி நிலவியது.

கர்நாடகா முன்னாள் முதல்வர் சித்தராமையா மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட முதல்வர் பதவி யுத்தத்தால், ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்தது. காங்கிரஸ் மேலிடம் தலையிட்டு, இருவரையும் அழைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, சித்தராமையா முதல்வராகவும், டி.கே.சிவக்குமார் துணை முதல்வராகவும் பதவியேற்றுக் கொண்டனர்.
இந்நிலையில், தமக்கு முதல்வர் பதவி கிடைக்காமல் போனதற்கு என்ன காரணம் என்பது குறித்து கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். மேலும், முதலமைச்சர் பதவி தனக்குக் கிடைக்கும் என்பதையும் சூசகமாக வெளிப்படுத்தியுள்ளார்.
கர்நாடகாவின் ராமநகர் மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய டிகே சிவக்குமார், "முதல்வர் பதவி பெறும் நோக்கத்துடன் இருந்த எனக்கு, கட்சியின் முன்னாள் தலைவர்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி சில அறிவுரைகளை வழங்கினர். அதன்பின், அந்த இலக்கை கைவிட்டு விட்டேன். கட்சியின் தலைமைக்கு தலைவணங்க வேண்டியிருந்தது. அதனால், துணை முதல்வர் பதவியை ஏற்றேன்.
நான் முதலமைச்சர் ஆவதற்காக நீங்கள் அதிக வாக்களித்து என்னை வெற்றி பெற வைத்தீர்கள். ஆனால், கட்சியின் மேலிடம் ஒரு முடிவு எடுத்தது. மூத்த தலைவர்கள் கூறிய அறிவுரையை ஏற்றுக்கொண்டேன். தற்போது, நான் பொறுமையாக காத்திருக்கவேண்டியுள்ளது. ஆனால், நீங்கள் விரும்பிய விஷயங்கள் வீணாய்ப் போகாது" என்று தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் தான் கர்நாடக முதலமைச்சர் ஆகும் ஆவலை வெளிப்படுத்தி உள்ளதோடு, முதலமைச்சர் பதவி நிச்சயம் தனக்குக் கிடைக்கும் என்பதையும் சூசகமாகத் தெரிவித்துள்ளார் டி.கே.சிவக்குமார். டிகே சிவக்குமாரின் இந்தப் பேச்சு கர்நாடகா காங்கிரஸ் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications