பெங்களூர் ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு! சென்னையில் தங்கிய குற்றவாளிகள்? சென்ட்ரலில் வாங்கிய தொப்பி!
பெங்களூர்: கடந்த மார்ச் 1 ஆம் தேதி பெங்களூரையே பீதியில் உறைய வைத்த ராமேஸ்வரம் கஃபேயில் குண்டு வைத்த குற்றவாளிகள் சென்னையில் தங்கியிருந்ததாக ஒரு அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. அந்த குற்றவாளிகள் எதற்காக ஒரு பையில் வெடிகுண்டை கொண்டு வந்து வெடிக்கச் செய்தனர் என்ற விவரம் ஏதும் தெரியவில்லை.
கர்நாடக மாநிலம் பெங்களூர் ஒயிட்பீல்டு அருகே புரூக்பீல்டு பகுதியில் உள்ள குந்தலஹள்ளியில் ராமேஸ்வரம் கஃபே என்ற பெயரில் ஹோட்டல் செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த மார்ச் 1 ஆம் தேதி குண்டுவெடித்தது. இதில் பலர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தி வருகிறது.

சிசிடிவியில் இருந்து எடுக்கப்பட்ட குற்றவாளிகளின் படத்தை கொண்டு அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தினர். இந்த நிலையில் குண்டுவெடிப்பு சம்பந்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இருவர் பற்றிய விவரங்களை என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளது.
அதன்படி குற்றவாளிகளாக கருதப்படும் அந்த இருவர் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் சென்னையில் திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் தங்கியிருந்தது தெரியவந்தது. குண்டுவெடிப்பிற்கு பிறகு, குற்றவாளிகள் கர்நாடகாவிலிருந்து கேரளாவிற்கு தப்பிச் சென்றுள்ளனர்.
பின்னர் அங்கிருந்து மீண்டும் தமிழகம் வந்துள்ளனர். இதையடுத்து ஆந்திரா, நெல்லூர் சென்றுள்ளனர். மேலும் அவர்கள் சென்னை சிட்டி சென்டருக்கும் சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் அடிப்படையில் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை என்ஐஏ அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
2022-ம் ஆண்டு மங்களூரில் நடந்த குக்கர் குண்டு வெடிப்புக்கும் பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்புக்கும் தொடர்பு இருக்கலாம் என்பது புலனாய்வு துறை அதிகாரிகளின் சந்தேகம். தற்போதுவரை எந்த ஒரு பயங்கரவாத இயக்கமும் இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்கவில்லை.
குண்டுவெடிப்பின் போது அந்த நபர் அணிந்திருந்த தொப்பி சென்னை சென்ட்ரலில் வாங்கப்பட்டதாம். இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த மார்ச் 1 ஆம் தேதி ராமேஸ்வரம் கஃபேவுக்கு வந்த மப்ஃளர் ஆசாமி அங்கு ரவா இட்லியை டோக்கன் போட்டு ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார்.
பின்னர் அவர் கையில் இருந்த பையை அந்த இடத்திலேயே வைத்துவிட்டு அந்த நபர் வெளியே சென்றுவிட்டார். சரியாக 1 மணி நேரம் கழித்து அந்த குண்டை வெடிக்கச் செய்துள்ளார். இது திறன் குறைந்த குண்டு என்றாலும் சிலருக்கு காயங்களை ஏற்படுத்தியது. முதலில் கஃபேயில் இருந்த சிலிண்டர் வெடித்தது என நினைத்தனர். பின்னர்தான் தெரிந்தது, அது குண்டுவெடிப்பு என்பது!
இந்த குண்டுவெடிப்புக்கு பிறகு சென்னை மண்ணடி, முத்தையால்பேட்டை உள்ளிட்ட இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தியிருந்தனர்.












Click it and Unblock the Notifications