கர்நாடகாவில் கோயில் நிதி “ரூ.20 கோடி” சுருட்டிய 5 பூசாரிகள்.. போலி இணையதளம் நடத்தி ”சதுரங்க வேட்டை”
பெங்களூரு: கர்நாடகா மாநிலம் கலபுர்கியில் போலி இணையதளம் நடத்தி பக்தர்கள் அளித்த பல கோடி நிதியை மோசடி செய்த 5 கோயில் பூசாரிகள் மீது போலீசார் வழக்கப்பதிவு செய்துள்ளனர்.
கலபுர்கி மாவட்டம் அஃப்சல்பூரில் உள்ள தாத்தரேயா கோயில் தென்னிந்தியாவிலேயே பிரசித்திபெற்ற ஒன்றாக உள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினசரி வருகை தந்து வழிபட்டு செல்வது வழக்கம்.
தமிழகத்தை சில்லென மாற்றும் வானிலை! அடுத்த 5 நாட்களுக்கு மழை இருக்காம்.. சென்னை வானிலை மையம்
இந்த நிலையில், இந்த கோயிலில் பூசாரியாக பணிபுரிந்த 5 இளம் பூசாரிகள், பக்தர்களிடம் கோயிலுக்காக ஆன்லைன் மூலம் நிதி வசூல் செய்து இருக்கின்றனர்.
போலி இணையதளம்
அதேபோல் சிறப்பு பூஜைக்கு எனவும் தனியாக ரூ.10,000 முதல் ரூ.50,000 வரை கட்டணம் நிர்ணயித்து வசூலித்து உள்ளனர். இவ்வாறு நிதியுதவி மற்றும் சிறப்பு பூஜை கட்டணம் வழங்கும் பக்தர்களிடம் ஆன்லைனில் பணம் செலுத்த பூசாரிகள் அறிவுறுத்தி இருக்கின்றனர். ஆனால், கோயிலுக்கு என்று இருக்கும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் லிங்கை பகிராமல், அதேபோல் இவர்கள் தனியாக உருவாக்கி இணையதளத்தின் லிங்கை பகிர்ந்து இருக்கின்றனர்.
பல கோடி மோசடி
பக்தர்களும் அதை உண்மை என்று நம்பி பல கோடிக்கணக்கில் நிதியை அதில் செலுத்தி இருக்கின்றனர். யாரும் கண்டுபிடிக்கவில்லை என்று நினைத்து 5 பூசாரிகளும் போலி இணையதளத்தின் லிங்கை பகிர்ந்து சதுரங்க வேட்டை ஆடி இருக்கின்றனர். கர்நாடகா அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த கோயிலுக்கு வழங்கப்படும் நிதி நியாயமாக அரசுக்கு செல்ல வேண்டியது. ஆனால், அது இந்த 5 பேரின் வங்கிக் கணக்குகளுக்கு சென்றிருக்கிறது.
சிக்கியது எப்படி?
இந்த நிலையில், கோயில் நிர்வாகியான கலபுர்கி இணை ஆணையர் யஷ்வந்த் குருகர் கோயில் மேம்பாடு தொடர்பாக கூட்டம் நடத்தி இருக்கிறார். அந்த கூட்டத்தில் கோயிலுக்கு வரும் நிதி தொடர்பாக விவாதிக்கப்பட்டபோது இந்த மோசடி வெட்டவெளிச்சமாகி இருக்கிறது. இது குறித்து தீவிர விசாரணை நடத்திய அவர், 7 ஆண்டுகளாக போலி இணையதளம் மூலம் பூசாரிகள் நிதி மோசடி செய்வதை கண்டறிந்தார்.
8 போலி இணையதளங்கள்
இதுகுறித்து பேசிய அவர், "7 முதல் 8 இணையதளங்களை போலியாக தொடங்கி சட்டவிரோதமாக சிறப்பு பூஜைகளை நடத்தி பணம் வசூலித்து இருக்கின்றனர். இதுகுறித்து காவல்துறையில் புகாரளித்துள்ளோம். விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. கோயில் என்பது அரசின் சொத்து. எனவே கோயிலின் சேவைகள் அனைத்தும் அரசு இணையதளம் வாயிலாகவே நடைபெற வேண்டும். 6 முதல் 7 ஆண்டுகளாக இந்த போலி இணையதளங்கள் செயல்பாட்டில் உள்ளன.
5 பூசாரிகள் மீது வழக்கு
இது தொடர்பாக கோயில் பூசாரிகள், வல்லப் பூஜாரி, அன்குர் பூஜாரி, பிரதிக் பூஜாரி, கங்காதர் பூஜாரி மற்றும் சரத் பட் ஆகியோர் மீது காவல்துறை 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருக்கிறது. இந்த நிலையில் மோசடி அம்பலமானவுடன் 5 பூசாரிகள் தப்பிச்சென்று வருவதாகவும், அவர்களை தேடும் பணி துரிதப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர். போலி இணையதளம் மூலமாக மட்டும் சுமார் ரூ.20 கோடி மோசடி நடைபெற்று இருக்கலாம் என போலீசார் தெரிவிக்கின்றனர்.