சத்தமில்லாமல் வேலையை காட்டிய ஏர்டெல்.. HDFC வங்கி முதலீட்டாளர்கள் ஷாக்.. எதிர்பார்க்காத ட்விஸ்ட்!
இந்தியப் பங்குச் சந்தையில் வரலாற்று நிகழ்வு நடந்துள்ளது, இந்திய பங்குச்சந்தையில் பல ஆண்டுகளாக வங்கி துறை நிறுவனங்கள் தான் முதலீட்டாளர்களின் நம்பிக்கையின் மையமாக இருந்து வந்தது. முதல் முறையாக பெரும் வங்கிகளை கடந்து டெலிகாம் நிறுவனமான ஏர்டெல் இந்தியாவின் 2வது மதிப்புமிக்க நிறுவனமாக வளர்ந்துள்ளது.
டிஜிட்டல் கட்டமைப்பு, டேட்டா பொருளாதாரம் மற்றும் 5ஜி சேவைகளின் வளர்ச்சி காரணமாக, தொலைத்தொடர்பு துறைக்கு முதலீட்டாளர்கள் அதிக மதிப்பீடு வழங்கத் தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக தற்போது பார்தி ஏர்டெல், ஹெச்டிஎஃப்சி வங்கியை முந்தி இந்தியாவின் இரண்டாவது மதிப்புமிக்க நிறுவனமாக உயர்ந்துள்ளது.

ஏர்டெல் Vs ஹெச்டிஎப்சி
இன்றைய வர்த்தகத்தில் பார்தி ஏர்டெல் நிறுவனம் HDFC வங்கியை பின்னுக்கு தள்ளி, நாட்டின் இரண்டாவது அதிக மதிப்பு கொண்ட பட்டியலிடப்பட்ட நிறுவனமாக உயர்ந்துள்ளது.
இந்த மாற்றம், இந்தியப் பொருளாதாரத்தில் டிஜிட்டல் துறைக்கு முதலீட்டாளர்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தையும், இதே நேரத்தில் ஹெச்டிஎப்சி வங்கி மீதான சமீபத்திய குற்றச்சாட்டுகள் முதலீட்டு சந்தையில் எந்தளவுக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்பதை காட்டியுள்ளது.
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இன்னும் இந்தியாவின் மிக உயர்ந்த சந்தை மதிப்பைக் கொண்ட நிறுவனமாக தொடர்கிறது. ஆனால் இரண்டாவது இடத்தில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இன்றைய வர்த்தகத்தில் ஏர்டெல் பங்கு விலை 2 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்ந்த நிலையில், ஹெச்டிஎஃப்சி வங்கி பங்கு சரிவை சந்தித்தது. இதன் மூலம் ஏர்டெல்லின் சந்தை மதிப்பு சுமார் ரூ.11.8 லட்சம் கோடியை எட்டியது. இதே நேரத்தில் ஹெச்டிஎஃப்சி வங்கியின் சந்தை மதிப்பு ரூ.11.7 லட்சம் கோடி அளவுக்கு குறைந்தது.
இந்த மாற்றம் சாதாரண பங்கு விலை ஏற்றத்தாழ்வாக மட்டும் பார்க்கப்படவில்லை. இந்திய பொருளாதாரத்தில் முதலீட்டாளர்கள் எந்த துறைக்கு எதிர்காலத்தில் வளர்ச்சி அதிகம் இருக்கும் என்பதை தீர்மானித்துவிட்டதை காட்டுகிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏர்டெல் மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கியின் பங்கு செயல்பாடுகளை ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த மாற்றத்தின் பின்னணி தெளிவாக தெரிகிறது. ஏர்டெல் பங்குகள் இந்த காலகட்டத்தில் சுமார் 270 சதவீதம் உயர்ந்துள்ளன. ஆனால் ஹெச்டிஎஃப்சி வங்கி பங்குகள் சுமார் 49 சதவீத வருமானம் மட்டுமே வழங்கியுள்ளன.
முன்பு வங்கிகள் வளர்ச்சியின் பிரதான சின்னமாக இருந்த நிலையில், தற்போது டிஜிட்டல் சேவைகள், மொபைல் டேட்டா, கிளவுட் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த கட்டமைப்புகளுக்கு அதிக மதிப்பு கிடைக்கத் தொடங்கியுள்ளது.
ஏர்டெல் ஏன் இவ்வளவு வேகமாக உயர்கிறது?
ஏர்டெல்லின் வளர்ச்சிக்கு பல முக்கிய காரணங்கள் உள்ளன. இந்தியாவில் 5ஜி சேவைகள் வேகமாக விரிவடைவது, உயர்ந்த கட்டண திட்டங்களுக்கு வாடிக்கையாளர்கள் மாறுவது மற்றும் சராசரி பயனர் வருமானம் அதிகரிப்பது ஆகியவை நிறுவனத்தின் வருவாயை தொடர்ந்து உயர்த்தி வருகிறது.
மேலும், ஏர்டெல் தற்போது மொபைல் சேவையை தாண்டி டேட்டா சென்டர், கிளவுட் சேவைகள் மற்றும் எண்டர்பிரைஸ் டிஜிட்டல் சேவைகளிலும் கவனம் செலுத்தி வருகிறது. செயற்கை நுண்ணறிவு மற்றும் கிளவுட் கணினி பயன்பாடு உலகளவில் அதிகரித்து வரும் நிலையில், டேட்டா சென்டர் வணிகம் எதிர்காலத்தில் மிகப்பெரிய வருவாய் வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
இதனால் உலகளாவிய முதலீட்டு நிறுவனங்களும் ஏர்டெல்லுக்கு சாதகமான மதிப்பீடுகளை வழங்கி வருகின்றன. பல பன்னாட்டு தரகு நிறுவனங்கள் ஏர்டெல் பங்கிற்கு அதிக இலக்கு விலைகளை நிர்ணயித்துள்ளன.
உலகளாவிய முதலீட்டு நிறுவனங்கள் ஏர்டெல் மீது அதிக நம்பிக்கை கொண்டுள்ளன. BofA செக்யூரிட்டீஸ் ரூ.2,320 என்ற இலக்கு விலையையும், JP மார்கன் ரூ.2,250 என்ற இலக்கையும் நிர்ணயித்துள்ளன.
ஹெச்டிஎஃப்சி வங்கிக்கு என்ன பிரச்சனை?
ஒருகாலத்தில் இந்தியாவின் மிகவும் நிலையான மற்றும் அதிக நம்பிக்கை பெற்ற வங்கியாக இருந்த ஹெச்டிஎஃப்சி வங்கி, தற்போது பல சவால்களை எதிர்கொண்டு வருகிறது. குறிப்பாக ஹெச்டிஎஃப்சி லிமிடெட் மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கி இணைப்பு மிகப்பெரிய மாற்றமாக இருந்தாலும், அதன் ஒருங்கிணைப்பு பணிகள் குறுகிய காலத்தில் வங்கியின் செயல்திறனை பாதித்துள்ளதாக சந்தை கருதுகிறது. இதைவிட முக்கியமாக சமீபத்தில் இவ்வங்கியில் இருந்து வெளியேறிய மூத்த அதிகாரிகள் குற்றச்சாட்டுகள் பெரும் தாக்கத்தை பங்குச்சந்தையில் ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல் பொதுத்துறை வங்கிகள் மீண்டும் வலுவாக வளரத் தொடங்கியுள்ளன. இதனால் வைப்பு மற்றும் கடன் சந்தையில் போட்டி அதிகரித்துள்ளது. சமீபத்திய நிர்வாக மாற்றங்கள் மற்றும் தலைமை தொடர்பான விவகாரங்களும் முதலீட்டாளர்களிடம் சிறிய அளவிலான கவலையை ஏற்படுத்தியுள்ளன.
என்ன சொல்கிறது இந்த மாற்றம்?
ஏர்டெல் ஹெச்டிஎஃப்சி வங்கியை முந்தியிருப்பது, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எந்த திசையில் நகர்கிறது என்பதை காட்டும் முக்கிய சிக்னலாக பார்க்கப்படுகிறது. இந்தியப் பொருளாதாரத்தில் டிஜிட்டல் மற்றும் தகவல் தொடர்பு துறைக்கு முதலீட்டாளர்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியுள்ளனர் என்பதை உறுதிப்படுத்துகிறது.
இந்த மாற்றம் இந்திய சந்தையில் புதிய யுகத்தின் தொடக்கமாகவும் பார்க்கப்படுகிறது.















Click it and Unblock the Notifications