ரோஜாவுக்கு நடுவராக இருக்க என்ன தகுதி இருக்கு? CWCயில் நான் இருக்க வேண்டிய இடம்! வனிதா ஆதங்கம்
சென்னை: நடிகை வனிதா விஜயகுமார் குக் வித் கோமாளி நிகழ்ச்சி பற்றி வெளிப்படையாக பேசியது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது அதிலும் நடிகை ரோஜா அந்த நிகழ்ச்சியில் நடுவராக இருப்பதை விமர்சித்து ஓபன் ஆக பேசியிருக்கிறார்.
நடிகை வனிதா விஜயகுமார் குடும்ப பிரச்சனையாக இருந்தாலும் சரி, சினிமாவாக இருந்தாலும், தொலைக்காட்சியாக இருந்தாலும், சமூக வலைதள விவாதமாக இருந்தாலும் எந்த விஷயத்திலும் தயக்கமின்றி தன்னுடைய கருத்தை வெளிப்படையாக சொல்லக்கூடியவர். அதனால்தான் அவர் பேசும் ஒவ்வொரு விஷயமும் சமூக வலைதளங்களில் உடனடியாக பேசுபொருளாக மாறிவிடுகிறது.

நடிகை வனிதா பேட்டி
ரசிகர்கள் அவருக்கு "வைரல் ஸ்டார்" என்ற பெயரையே வைத்திருப்பதற்குக் காரணமும் அதுதான். இந்த நிலையில் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சி குறித்து வனிதா விஜயகுமார் பேசியிருக்கும் கருத்துகள் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் வனிதா, குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு வெற்றி பெற்றதை பற்றி பேசினார். "அந்த நிகழ்ச்சியில் நான் வெற்றி பெற்றிருக்கிறேன். அந்த ஷோவின் ஃபார்மேட் என்ன, அதில் என்ன நடக்கிறது, போட்டியாளர்கள் என்ன எதிர்கொள்கிறார்கள் என்பதெல்லாம் எனக்கு நன்றாக தெரியும். அந்த வகையில் பார்த்தால் அந்த நிகழ்ச்சியில் நடுவராக அமர்வதற்கான தகுதி எனக்குத்தான் இருக்கிறது" என்று கூறியுள்ளார்.
ரோஜா பற்றி வனிதா கருத்து
அதோடு, "ரோஜா என்னுடைய பிரண்டு தான். அதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் அந்த இருக்கையில் அமர்வதற்கான தகுதி அவருக்கு இருக்கிறதா? என்ற கேள்வி எனக்கு இருக்கிறது. செஃப் தாமுவுக்கு அடுத்தபடியாக அந்த சீட்டில் அமர தகுதியானவர் நான்தான்" என்று வெளிப்படையாக பேசியுள்ளார்.
இதில் நிற்காமல், "இதுகுறித்து விஜய் டிவியில் தொடர்புடைய ஒருவரிடமும் கேட்டேன். ஆனால் அவர்கள் 'இதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை அக்கா, என்னை மன்னிச்சிடுங்க' என்று சொல்லிவிட்டார்கள்" என்றும் வனிதா கூறியுள்ளார்.
வனிதாவின் அதிருப்தி
மேலும் தற்போதைய நிகழ்ச்சி குறித்தும் அதிருப்தி தெரிவித்துள்ளார். "முன்பு இருந்த சுவாரஸ்யம் இப்போது இல்லை. அந்த நிகழ்ச்சியின் இயல்பான காமெடி, கலகலப்பு, போட்டியாளர்களின் இயல்பான ரியாக்ஷன்-அதுதான் மக்களை ஈர்த்தது. ஆனால் இப்போது அந்த ஃபீல் இல்லை" என்று கூறியுள்ளார்.
"எதற்காக ஜோடி ஜோடியாக அழைத்து சமையல் நிகழ்ச்சியை நடத்துகிறார்கள் என்று புரியவில்லை. முன்னாடி இருந்த ஃபன் இப்போ இல்லை. சிரிப்பு குறைந்துவிட்டது" என்றும் தெரிவித்துள்ளார்.
விஜய் டிவி மெட்டீரியல்
அதுமட்டுமல்லாமல், "நான் தான் விஜய் டிவி மெட்டீரியல். ஆனால் வேறு தொலைக்காட்சியில் இருந்து வந்த ஒருவர் எப்படி விஜய் டிவி மெட்டீரியல் ஆக முடியும்? அவரை ஏன் இந்த நிகழ்ச்சியில் நடுவராக வைத்தார்கள் என்பதும் புரியவில்லை" என்று கௌசிக் பற்றியும் பேசியுள்ளார்.
இது முதல் முறை அல்ல, குக் வித் கோமாளி குறித்து வனிதா இப்படி பேசுவது. இதற்கு முன்பும் பல முறை இந்த நிகழ்ச்சியைப் பற்றிய தனது அதிருப்தியை வெளிப்படையாக கூறியிருக்கிறார். குறிப்பாக, நிகழ்ச்சியின் தரம் மாறிவிட்டது, பழைய போட்டி மனப்பான்மை இல்லை, பல விஷயங்கள் scripted போல தெரிகிறது என்ற வகையிலும் கருத்து தெரிவித்திருந்தார்.
வனிதாவின் பின்னணி
வனிதா பற்றி பேசும்போது, அவர் எப்போதுமே சர்ச்சைகளில் இருக்கும் நபர் என்றாலும் அதே நேரத்தில் நேர்மையாக மனதில் பட்டதை பேசுபவர் என்றும் ரசிகர்கள் சொல்வார்கள். நடிகர் விஜயகுமார் - மஞ்சுளா தம்பதியின் மகளாக இருந்தாலும், சினிமாவில் தனக்கென போராடி இடம் பிடித்தவர். ஹீரோயினாக அறிமுகமாகி பின்னர் டிவி ரியாலிட்டி ஷோக்கள், பேட்டிகள், சமூக வலைதளங்கள் மூலமாக தனக்கென தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கியுள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகுதான் அவரது பெயர் இன்னும் பெரிய அளவில் பேசப்பட்டது. அதன்பிறகு யூடியூப் சேனல், சமையல் வீடியோக்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வருகிறார்.
ரசிகர்கள் கருத்து
இப்போது குக் வித் கோமாளி குறித்து அவர் பேசியிருக்கும் இந்த கருத்துகள் சமூக வலைதளங்களில் இரண்டு வகையான எதிர்வினைகளை உருவாக்கியுள்ளன. சிலர் "வனிதா மனதில் பட்டதை நேராக சொல்றாங்க" என்று ஆதரிக்க, இன்னும் சிலர் "ஒவ்வொரு விஷயத்திலும் சர்ச்சை கிளப்ப வேண்டிய அவசியமா?" என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.













Click it and Unblock the Notifications