பெங்களூர் ரயில் நிலையத்தை சூழ்ந்த புகை.. அலறி ஓடிய மக்கள்! ரயில் பெட்டியில் தீ பிடித்ததால் பதற்றம்
பெங்களூர்: கர்நாடகாவின் பெங்களூர் ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த உத்யன் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையிலிருந்து தினமும் காலை 8.10 மணிக்கு உத்யன் எக்ஸ்பிரஸ் புறப்பட்டு அடுத்த நாள் காலை 6 மணியளவில் பெங்களூருவுக்கு வந்து சேரும். நேற்றிரவும் குறிப்பிட்ட நேரத்தில் ரயில் புறப்பட்டு 33 நிறுத்தங்கள், 1,136 கி.மீ தூரத்தை கடந்து 21 மணி நேரம் 50 நிமிடங்களுக்கு பின்னர் பெங்களூருவுக்கு வந்து சேர்ந்திருக்கிறது.

பெங்களூர் வந்து நின்ற பின்னர் சுமார் 2 மணி நேரம் கழித்து பி1 மற்றும் பி2 பெட்டிகளிலிருந்து புகை வெளியேறியிருக்கிறது. சந்தேகமடைந்த பயணிகள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்திருக்கின்றனர். அதற்குள் புகை நெருப்பாக எரிந்திருக்கிறது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ரயில் ஸ்டேஷனுக்கு வந்து சேர்ந்து இரண்டு மணி நேரம் கழித்துதான் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது என்பதால் பயணிகள் யாரும் இதில் காயமடையவில்லை. அதேபோல முதற்கட்ட விசாரணையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் பெங்களூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டிருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.












Click it and Unblock the Notifications