கஸ்தூரி ரங்கன் காலமானார்.. இஸ்ரோ தலைவர் முதல் கல்வியாளர் வரை.. பன்முகம் கொண்டவர்
பெங்களூர்: முன்னாள் இஸ்ரோ தலைவரான கஸ்தூரி ரங்கன் தனது 84 வது வயதில் வயது மூப்பு காரணமாக பெங்களூரில் உள்ள தனது இல்லத்தில் இன்று காலமானார். விஞ்ஞானி, கல்வியாளர், இயற்கை ஆர்வலர் என்று பன்முகம் கொண்ட கஸ்தூரி ரங்கன் தலைமையிலான வரைவுக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் தான் தேசிய கல்வி கொள்கை 2020 உருவாக்கப்பட்டது.
இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன். இவருக்கு வயது 84. இவர் கடந்த 1993ம் ஆண்டு முதல் 2003ம் ஆண்டு வரை இஸ்ரோ தலைவராக செயல்பட்டார். கஸ்தூரி ரங்கன் பெங்களூரில் வசித்து வந்தார்.

இந்நிலையில் தான் வயது மூப்பு காரணமாக கஸ்தூரி ரங்கன் இன்று காலமானார். பெங்களூரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை 10.43 மணிக்கு உயிர் பிரிந்தது. அவரது உடுல் ராமன் ஆராய்ச்சி நிறுவனத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
கஸ்தூரி ரங்கன் பன்முக திறமையாளராக உள்ளார். விஞ்ஞானியாகவும், இயற்கை ஆர்வலராகவும், கல்வியாளராகவும் வலம் வந்தார். இவர் கடந்த 1994 முதல் 2003ம் ஆண்டு வரை இஸ்ரோ தலைவராக இருந்தார். அந்த சமயத்தில் கிரையோஜெனிக் இன்ஜின் பிரச்சனை, இந்தியாவின் அணுஆயுத திட்டத்தால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி உள்ளிட்டவற்றை சமாளித்து இஸ்ரோவை முன்னேற்ற பாதையில் கொண்டு சென்றார். இவர் தலைவராக இருந்தபோது தான் சந்திரயான் திட்டம் என்பது வகுக்கப்பட்டது.
அதன்பிறகு கடந்த 2003 முதல் 2009ம் ஆண்டு வரை ராஜ்யசபா எம்பியாகவும் இருந்தார். மேலும் திட்டக்குழு உறுப்பினராகவும் இருந்தார். தொழில்நுட்பம், உயர்கல்வி துறை சார்பில் பல குழுக்களில் அவர் இடம்பெற்றிருந்தார். குறிப்பாக உயர் கல்வி துறைக்கும், அவருக்கும் நெருக்கமான தொடர்பு என்பது உண்டு. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழத்தின் வேந்தராக பொறுப்பு வகித்தார். கர்நாடகா அறிவு ஆணையத்தின் தலைவராக இருந்தார்.
இயற்கை ஆர்வலர் என்பதால் மேற்கு தொடர்ச்சி மலையில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் கஸ்தூரி ரங்கன் குழு விரிவான அறிக்கையை வழங்கி இருந்தது. அதுமட்டுமின்றி தற்போது தேசிய கல்வி கொள்கை 2020 என்பது விவாதத்தை உருவாக்கி வருகிறது. இந்த கல்வி கொள்கை மூலம் இந்தி மொழியை மத்திய அரசு 3வது மொழியாக திணிப்பதாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்த தேசிய கல்வி கொள்கையில் கஸ்தூரி ரங்கனின் பங்கு முக்கியமானது. அதாவது கஸ்தூரி ரங்கன் தலைமையில் உருவாக்கப்பட்ட வரைவு குழுவின் பரிந்துரைகளின்படி தான் புதிய கல்வி கொள்கை என அழைக்கப்படும் தேசிய கல்வி கொள்கை 2020 உருவாக்கப்பட்டு பல மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மறைந்த கஸ்தூரி ரங்கன் நாட்டின் பல்வேறு உயரிய விருதுகளை வாங்கி உள்ளார். அதன்படி பத்மஸ்ரீ, பத்ம பூஷண், பத்மவிபூஷன் உள்ளிட்ட விருதுகளை அவர் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications