கர்நாடகா மாஜி முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் பாஜகவுக்கு முழுக்கு.. எடியூரப்பாவுக்கு வந்ததே கோபம்!அட்டாக்
பெங்களூர்: கர்நாடகா தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜகவில் போட்டியிட சீட் மறுக்கப்பட்டதால் முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் அக்கட்சியில் இருந்து விலகி உள்ளார். இதனால் பாஜக மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான எடியூரப்பா அவர் மீது கோபத்தின் உச்சிக்கு சென்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகாவில் மே மாதம் 10ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது. மொத்தம் 224 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் 212 இடங்களுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதில் உப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதி எம்எல்ஏவும், முன்னாள் முதல்வருமான ஜெகதீஷ் ஷெட்டருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் அதிருப்தியடைந்த அவர் டெல்லி சென்று மேலிட தலைவர்களை சந்தித்து பேசினார். ஆனால் அங்கிருந்து பாசிட்டிவ் பதில் வரவில்லை என கூறப்படுகிறது.
இதனால் ஜெகதீஷ் ஷெட்டர் பாஜகவில் இருந்து விலகியுள்ளார். இது பாஜகவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதற்கிடையே ஜெகதீஷ் ஷெட்டரை காங்கிரஸ் கட்சியில் சேர மாநில தலைவர் டிகே சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா உள்ளிட்டவர்கள் நேரடியாக அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்நிலையில் தான் பாஜக சார்பில் முன்னாள் முதல்வர் எடியூரப்பா இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் ஜெகதீஷ் ஷெட்டர் மீது கடும் கோபமடைந்து விமர்சனங்களை முன்வைத்தார். இதுகுறித்து எடியூரப்பா கூறியதாவது: ஜெகதீஷ் ஷெட்டரை கர்நாடக மக்கள் மன்னிக்க மாட்டார்கள். பாஜக தேர்தல் பொறுப்பாளர் தர்மேந்திர பிரதான், ஜெகதீஷ் ஷெட்டருக்கு அமைச்சரவையில் அமைச்சர் பதவி வழங்க முன்வந்தார். மேலும் ஜெகதீஷ் ஷெட்டரின் குடும்பத்திற்கு டிக்கெட் வழங்கினோம். ஆனால் அவர் அதற்கு பதில் எதுவும் கூறவில்லை.
நாங்கள் ஜெகதீஷ் ஷெட்டருக்கு முதல்வர் பதவி வழங்கினோம். மேலும் மாநில தலைவர் பதவியையும் கொடுத்தோம். தற்போது அவரது செயல்பாடு எனக்கு மகிழ்ச்சியானதாக இல்லை. ஜெகதீஷ் ஷெட்டர் என்பவரை பாஜக மூலம் தான் மக்களுக்கு தெரியும்'' என விமர்சனம் செய்தார். மேலும் ஜெகதீஷ் ஷெட்டர் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகிறதே? என்பது பற்றி எடியூரப்பாவிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு எடியூரப்பா, ‛‛இதை நான் ஜெகதீஷ் ஷெட்டரிடம் கேட்டே ஆகவேண்டும். எதற்காக அவர் காங்கிரஸில் இணைய வேண்டும்?. அவர் பாஜகவுக்கு மீண்டும் வந்தால் நாங்கள் வரவேற்போம்'' எனவும் கூறினார்.












Click it and Unblock the Notifications