முன்னாள் மத்திய அமைச்சர் ஜாபர் ஷெரீப் காலமானார்... கர்நாடகத்தில் இன்னொரு சோகம்!
பெங்களூரு: முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான ஜாபர் ஷெரீப் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 85.
பெங்களூருவில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில், கடந்த ஒரு வாரமாக தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த, முன்னாள் மத்திய அமைச்சர் ஜாபர் ஷெரீப் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இரங்கல் தெரிவித்து டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ஜாபர் ஷெரீப்பின் மறைவு காங்கிரஸ் கட்சிக்கு சோகமான நாள் என்று குறிப்பிட்டுள்ளார்.
'India Wins Freedom' என்ற புத்தகத்தின் உருது மொழிப்பெயர்ப்பு புத்தகத்தை நவம்பர் 28 ம் தேதி, வெளியிடுவதில் ஜாபர் ஷெரீப் தீவிரமாக இருந்தார். இதற்காக முன்னாள் குடியரசுத் தலைவர் பிரனாப் முகர்ஜிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அதற்கு முன்னர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு ஜாபர் ஷெரீப் உயிரிழந்தது. அவரது குடும்பத்தாரை மட்டுமின்றி கட்சி தொண்டர்களையும் கவலையில் ஆழ்த்தி உள்ளது.
1991- 95 ஆண்டுகளில் ரயில்வே துறை அமைச்சராக ஜாபர் ஷெரீப் இருந்த போது, ரயில் பாதைகள் அகலப்பாதைகளாக மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்றுதான் கர்நாடகத்தின் பிரபல நடிகர் அம்பரீஷ் மரணமடைந்தார். இந்த நிலையில் இன்று ஜாபர் ஷெரீப் மரணமடைந்துள்ளது அந்த மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications