முஸ்லீம்ஸ் தொழுகை நடத்தும் ஹூப்பள்ளி மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி விழா.. கர்நாடக ஹைகோர்ட் அனுமதி
பெங்களூர்: கர்நாடக மாநிலம் ஹூப்பள்ளியில் இஸ்லாமியர்கள் பாரம்பரியமாக தொழுகை நடத்தும் ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நடத்த, சிலைகள் வைக்க அம்மாநில உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. பெங்களூரில் உள்ள ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி மறுத்தது.
பெங்களூரில் நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி மறுத்த அதே நேரத்தில் ஹூப்பள்ளியில் விநாயகர் சதுர்த்தி நடத்த கர்நாடக உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
ஈத்கா மைதானம் என்பது பொதுவாக திறந்தவெளி மைதானம் ஆகும். வக்பு வாரியத்தின் கட்டுபாட்டிலோ அல்லது வேறு இஸ்லாமிய அமைப்புகளின் கட்டுப்பாட்டிலோ, அல்லது மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து லீஸுக்கு எடுத்தோ இந்த திறந்த வெளி மைதானத்தை இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த பயன்படுத்துவார்கள்.
ரம்ஜான், பக்ரீத் விழாக்களின் போது இஸ்லாமியர்கள் ஒன்றாக சேர்ந்து தொழுகை நடத்த இந்த மைதானம் பயன்படுத்தப்படும். பெரிய அளவில் பல நூறு பேர் ஒன்றாக சேர்ந்து இங்கே தொழுகை நடத்துவது வழக்கம்.

என்ன உத்தரவு
இந்த நிலையில்தான் பெங்களூரில் உள்ள சம்ராஜ்பேட் ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நடத்த மாநகராட்சி நிர்வாகம் அனுமதி அளித்தது. ஆனால் இதை எதிர்த்து வக்பு வாரியம் வழக்கு தொடுத்தது. உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்து வந்தது. இந்த நிலம் தங்களுக்கு சொந்தம், இங்கே இந்து விழா நடத்த கூடாது என்று வழக்கில் வகுப்பு வாரியம் கூறியது. அதே சமயம் அரசு தரப்பு இந்த நிலத்தின் உரிமையாளர் யார் என்பதில் குழப்பம் உள்ளது என்று வாதம் வைத்தது.

உத்தரவு என்ன
இதனால் வழக்கு விசாரணை தீவிரமாக நடந்து வந்தது. நிலத்தின் உரிமையாளர் யார் என்பதில் மோதல் உள்ளதால் இங்கே விநாயகர் சதுர்த்தி நடத்த கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, ஏஎஸ் ஓகா, எம்எம் சுந்தரேஷ் அமர்வு தீர்ப்பு வழங்கியது. அதோடு இந்த நிலத்திற்கு உரிமையாளர் யார் என்பதை கர்நாடக ஹைகோர்ட் முடிவு செய்ய வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இது விநாயகர் சதுர்த்தி ஏற்பாட்டாளர்களுக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்பட்டது.

பின்னடைவு
பெங்களூரில் நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி மறுத்த அதே நேரத்தில் ஹூப்பள்ளியில் விநாயகர் சதுர்த்தி நடத்த கர்நாடக உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. கர்நாடக மாநிலம் ஹூப்பள்ளியில் இஸ்லாமியர்கள் பாரம்பரியமாக தொழுகை நடத்தும் ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நடத்த, சிலைகள் வைக்க அம்மாநில உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. நேற்று நடு இரவு வரை இந்த வழக்கில் விசாரணை நடைபெற்றது. நீதிபதி அசோக் எஸ் கினாகி வழங்கிய தீர்ப்பில்.. பெங்களூரில் நிலவியது போல இந்த வழக்கில் நில மோதல் இல்லை.

நிலம் யாருக்கு
ஹூப்பள்ளியில் உள்ள நிலம் ஈத்கா மட்டும் நடத்துவதற்கான நிலம் கிடையாது, அது மாநகராட்சிக்கு சொந்தமான நிலம். அவர்கள் இங்கே என்ன வேண்டுமானாலும் நடத்தலாம். இதை அஞ்சுமான் இ இஸ்லாம் அமைப்பு லீசுக்கு மட்டுமே எடுத்துள்ளது. அதனால் ஹூப்பள்ளியில் உள்ள ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி அளிக்கலாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதை எதிர்த்த அஞ்சுமான் இ இஸ்லாம் அமைப்பு, இந்த நிலத்தில் நாங்கள் தொழுகை நடத்தி வருகிறோம்.

பல ஆண்டுகள்
பல ஆண்டுகளாக நாங்கள் இங்கே தொழுகை நடத்தி வருகிறோம். இத்தனை ஆண்டுகளாக பிரச்சனை இல்லை. ஆனால் இப்போது திடீரென இங்கே விநாயகர் சதுர்த்தி நடத்த அனுமதிக்க கூடாது என்று வாதம் வைத்தது. இதை கேட்ட நீதிபதி, நீங்கள் தொழுகை நடத்தும் பக்ரீத், ரம்ஜான் நாட்களில் உங்களை யாரும் தடுக்க கூடாது. அதே சமயம் மற்ற நாட்களில் இங்கே என்ன விழா வேண்டுமானாலும் நடக்கலாம். அது மாநகராட்சிக்கு சொந்தமான நிலம். அவர்கள் இங்கே என்ன வேண்டுமானாலும் நடத்தலாம், என்று உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications