தேவகவுடா குடும்பத்தையே சாய்ச்சிபுட்டாங்க.. பெங்களூரை மொத்தமாக கைப்பற்றியது பாஜக
Recommended Video
பெங்களூர்: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கர்நாடக லோக்சபா தேர்தல் முடிவுகள் தேவகவுடா குடும்பத்திற்கு கடும் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளன.
மதசார்பற்ற ஜனதாதளத்தின் கோட்டை என வர்ணிக்கப்படுவது ஹாசன் தொகுதி. அங்கு அக்கட்சியின் தலைவர் ஹெச்.டி.தேவகவுடா சிட்டிங் எம்பியாக இருந்தவர்.
ஹாசன் தொகுதியில் இருந்து தொடர்ச்சியாக 5 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர் தேவகவுடா. ஆனால் அவர் கெட்ட நேரம், இந்த தேர்தலில் தும்கூர் தொகுதியில் போட்டியிட்டார்.

பேரன் பலே
ஹாசன் தொகுதியை தேவகவுடா விட்டுக் கொடுக்க காரணம், தனது மகன் ரேவண்ணா (கர்நாடக பொதுப் பணித்துறை அமைச்சர்) மகன் பிரஜ்வல்லுக்கு அந்த சீட்டை விட்டுக் கொடுப்பதற்காகத்தான். பிரஜ்வல்லுக்கு இது முதல் தேர்தல். பேரனை பாதுகாப்பான தனது கோட்டையில் போட்டியிட வைத்தார் தேவகவுடா. அதேபோல பிரஜ்வல் நல்ல முன்னிலை பெற்றுள்ளார். ஆனால் தேவகவுடா கதிதான், அதோ கதியாகிவிட்டது.

தும்கூரில் கசப்பு மருந்து
பெங்களூருக்கு வடக்கே, அடுத்த மாவட்டமாக அமைந்துள்ளதுதான் தும்கூர். ஹாசனை போலவே கணிசமாக ஒக்கலிகர் ஜாதியினர் உள்ள பகுதி. ஆனால் ஹாசன் அளவுக்கு அதிகம் இல்லை. இருப்பினும், ஒக்கலிகர்களை நம்பி களமிறங்கிய தேவகவுடாவுக்கு, தும்கூர் கசப்பு மருந்தை கொடுத்துள்ளது. தும்கூரில் பாஜக வேட்பாளர் பசவராஜ் தேவகவுடாவை வீழ்த்தி வெற்றி பெற்றார். பசவராஜ் பெற்றது, 215304 ஓட்டுக்கள். தேவகவுடா பெற்றது, 196090 ஓட்டுக்கள்.

குமாரசாமி மகன்
தேவகவுடா குடும்ப அரசியலுக்கு மற்றொரு அடி மண்டியாவில் விழுந்துள்ளது. அங்கு தேவகவுடாவின் பேரன் நிகில் கவுடா, அதாங்க, முதல்வர் குமாரசாமி மகன், சுயேச்சை வேட்பாளர் ஹேமலதாவிடம் சிக்கி திணறி 80,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். காங்கிரஸ் பிரமுகரான மறைந்த நடிகர் அம்பரீஷின் மனைவிதான் ஹேமலதா. இவருக்கு காங்கிரஸ் பின்னணியில் சப்போர்ட் செய்தது. பாஜகவும் தனது வேட்பாளரை அங்கு நிறுத்தாமல், நிகில் கவுடாவின் முதல் அரசியல் என்ட்ரிக்கே முட்டுக்கட்டை போட்டது. இதற்கு கை மேல் பலன் கிடைத்துள்ளது.

பெங்களூர் நிலைமை
இன்னொருபக்கம், ஆரம்பத்தில், பெங்களூர் மத்தியில் காங்கிரஸ் முன்னிலை வகித்தது. அங்கு சிட்டிங் பாஜக எம்பி மோகன் பின்னடைவை சந்தித்த நிலையில், காங்கிரசின் ரிஸ்வான் அர்ஷத் முன்னிலை வகித்தார். பாஜகவின் கோட்டை பெங்களூர். 3 தொகுதிகளிலும் பாஜக எம்பிக்களே அங்கு உள்ளனர். அதில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் மத்திய பெங்களூர் இம்முறை காங்கிரஸ் பாக்கெட்டுக்கு மாறுமோ என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாஜக வேட்பாளரும் சிட்டிங் எம்.பி.யுமான பி.சி.மோகன், 70,000 வாக்குகளுக்கு மேலான வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தெற்கு பெங்களூரில் தேஜஸ்வி, வடக்கு பெங்களூரில் சதானந்தகவுடா ஆகிய பாஜக வேட்பாளர்களும் வெற்றி பெற்று, மீண்டும் பெங்களூரை கைப்பற்றினர்.












Click it and Unblock the Notifications