பெங்களூரில் மாரடைப்பால் சரிந்த டிரைவர்.. அடுத்த நொடி தாவிக்குதித்து பயணிகளை காப்பாற்றிய கண்டக்டர்
பெங்களூர்: பெங்களூரில் மாரடைப்பால் ஓட்டுநர் உயிரிழந்து கீழே சரிந்த நிலையில் மாநகர அரசு பேருந்து தறிகெட்டு ஓடியது. அப்போது நடத்துனர் உடனடியாக தாவிக்குதித்து ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து பேருந்தை பத்திரமாக நிறுத்தி பயணிகளின் உயிரை பாதுகாத்தார். இது தொடர்பாக சிசிடிவி வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் மாநகரப் போக்குவரத்து கழகப் பேருந்து ஒன்று காலை 11 மணியளவில் நீலமங்கலாவில் இருந்து தாசனபுராவிற்கு சென்றது. இந்த பேருந்தை கிரண்குமார் (40 வயது) என்ற ஓட்டுநர் ஓட்டி சென்று கொண்டிருந்தார். பேருந்து ஓடிக் கொண்டிருந்த போதே ஓட்டுநர் கிரண்குமாருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அப்போது கிரண்குமார் பேருந்தை ஓட்டிக் கொண்டபடியே திடீரென இருக்கையில் சாய்ந்து விழுந்தார்

இதைக் கண்ட நடத்துநரும், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டனர். அப்போது கண் இமைக்கும் நேரத்தில் அருகில் இருந்த பேருந்து மீது லேசாக மோதி முன்னால் சென்று கொண்டிருந்தது. இதையடுத்து உடனடியாக நடத்துநர் ஓபலேஷ் தாவிகுதித்து ஓட்டுரின் இருக்கையில் அமர்ந்தார். அதன்பின்னர் ஸ்டியரிங்கை பிடித்து, பேருந்தை சாலையோரம் திருப்பி பிரேக் போட்டார். பேருந்து எந்த விபத்தும் இன்றி நின்று விட்டது. நடத்துனரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த காட்சி பேருந்தில் பொருந்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் அந்த காட்சிகள் பதிவாகி இருந்தது. அது தற்போது வேகமாக பரவி வருகிறது.
இதற்கிடையில் மாரடைப்பால் சரிந்து விழுந்த ஓட்டுநர் கிரண் குமாரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முயற்சியில் நடத்துநர் ஓபலேஷ் இறங்கினார். உடனடியாக மருத்துவமனைக்கு கிரண்குமார் கொண்டு செல்லப்பட்டார். அங்கு கிரண்குமாரை மருத்துவர்கள் சோதித்து பார்த்தனர். ஆனால் ஏற்கனவே உயிரிழந்துவிட்டது தெரியவந்தது. பேருந்து விபத்தில் சிக்காமல் காப்பாற்றிய நடத்துநர் ஓபலேஷ்க்கு பயணிகள் நன்றி தெரிவித்தனர். அதேநேரம் ஓட்டுநர் கிரண்குமார் இறந்ததை எண்ணி வெகுவாக வருந்தினர்.

இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக பெங்களூரு மாநகரப் போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எங்களுடன் பணியாற்றி வந்த ஓட்டுநர் கிரண் குமார் அகால மரணம் அடைந்தது மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. நவம்பர் 6ம் தேதி அன்று வேலை செய்து கொண்டிருக்கும் போதே கிரண் குமார் உயிர் பிர்ந்தது. கிரண் குமாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம். அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம் " என்று குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் உயிரிழந்த ஓட்டுநர் கிரண் குமாரின் இல்லத்திற்கு பெங்களூரு போக்குவரத்து கழக அதிகாரிகள் நேரில் சென்று ஆறுதல் கூறியதுடன், உரிய உதவிகள் செய்து தரப்படும் என்றும் இழப்பீடு வழங்கப்படும் என்றும் கூறினார்கள்.












Click it and Unblock the Notifications