கர்நாடகா.. ஹிஜாப்புடன் தேர்வெழுத மாணவிகளுக்கு அனுமதியளித்த 7 ஆசிரியர்கள் அதிரடியாக சஸ்பெண்ட்!
பெங்களூர்: கர்நாடகத்தில் எஸ்எஸ்எல்சி தேர்வு நடைபெற்று வரும் நிலையில் தடையை மீறி ஹிஜாப் அணிந்து மாணவிகளை தேர்வெழுத அனுமதித்த 7 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
கர்நாடக கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. இதை கர்நாடக உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது. இதை எதிர்த்து டெல்லி உச்சநீதிமன்றத்தில் மாணவிகள் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுக்களை அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இருப்பினும் முறைப்படி மனுக்கள் பட்டியலிடப்பட்டு விசாரணைக்கு வர உள்ளது.

எஸ்எஸ்எல்சி தேர்வு
இந்நிலையில் கர்நாடகத்தில் நேற்று முன்தினம் முதல் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்வு ஏப்ரல் 11 வரை நடைபெற உள்ளது. மொத்தம் 8 லட்சத்து 69 ஆயிரத்து 399 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். மாணவ-மாணவிகளின் வசதிக்காக 3 ஆயிரத்து 400 இடங்களில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான தேர்வு அறைகள் ஏற்படுத்தப்பட்டன.

ஹிஜாப்புக்கு தடை
கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத தடை நீடிக்கிறது. இருப்பினும் சில இடங்களில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து தேர்வெழுத வந்தனர். அவர்களுக்கு தேர்வறை கண்காணிப்பாளர்களாக உள்ள ஆசிரியர்கள் அனுமதி மறுத்தனர். மேலும் உயர்நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி ஹிஜாப்பை அகற்றி தேர்வெழுதும்படி அறிவுறுத்தினர். இதையடுத்து சில மாணவிகள் ஹிஜாப்பை அகற்றி தேர்வெழுதினர். பலர் தேர்வை புறக்கணித்து வீடு திரும்பினர்.

வீடியோ வெளியானது
இந்நிலையில் கர்நாடகத்தின் சில பள்ளிகளில் ஹிஜாப்புடன் மாணவிகள் தேர்வெழுத அனுமதிக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுகுறித்த வீடியோக்களும் சமூக வலைதளங்களில் பரவியது. இதற்கு சிலர் ஆதரவும், சிலர் எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

7 பேர் சஸ்பெண்ட்
அப்போது கதக்கில் 2 பள்ளிகளில் ஹிஜாப் அணிந்த மாணவிகளை 7 ஆசிரியர்கள் தேர்வெழுத அனுமதித்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 7 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவை பசவலிங்கப்பா( Deputy Director Of Public Instruction) பிறப்பித்துள்ளார். அதன்படி கதக்கில் உள்ள சிஎஸ் பட்டீல் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சிஎஸ் பட்டீல் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கண்காணிப்பாளராக பணியில் இருந்த ஹாக்கலாட், எஸ்எம் பட்டார், எஸ்ஜி கோட்கோ, எஸ்எஸ் குஜாமகாடி, விஎன் கிவுடார் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும் அந்த பள்ளிகளின் தலைமை தேர்வு கண்காணிப்பாளர்களான கேபி பஜாந்திரி, பிஎஸ் கொனோகுரி ஆகியோரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

பணியில் இருந்து விடுவிப்பு
முன்னதாக நேற்று முன்தினம் ஹிஜாப் விவகாரத்தில் பெங்களூரில் உள்ள சித்தகங்கா பள்ளியில் தேர்வறை கண்காணிப்பாளரான நூர் பாத்திமா பணியில் இருந்து விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications