கர்நாடகாவில் காங்கிரஸ் மேஜிக்...அமோக முன்னிலை..அனுமனை வழிபட்ட பிரியங்கா. சங்கு ஊதும் தொண்டர்கள்
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மெஜாரிடிக்குத் தேவையான மேஜிக் நம்பருடன் முன்னிலையில் உள்ளதால் தொண்டர்கள் கொண்டாட்டத்தை ஆரம்பித்து விட்டனர். பாஜக ஆட்சிக்கு சங்கு ஊதி விட்டதாக கூறி ஆட்டம் பாட்டத்துடன் அமர்களப்படுத்தி வருகின்றனர். பிரியங்கா காந்தி அனுமனை வழிபட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு கடந்த 10ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த நிலையில், கர்நாடக சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்படுகிறது. காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாகவே இருந்தது. பாஜகவிற்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று கூறி இருந்தாலும், இந்த தேர்தலில் தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்போம் என்று பாஜக தலைவர்கள் நம்பிக்கையுடன் கூறி வந்தனர்.
கர்நாடக மாநிலத்தில் ஆட்சி அமைக்க மொத்தம் 113 சட்டசபை தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். தற்போதய நிலவரப்படி காங்கிரஸ் கட்சி மேஜிக் நம்பரான 113 தொகுதிகளில் முன்னணியில் உள்ளது. இதனையடுத்து காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் உற்சாகத்துடன் கொண்டாட்டத்தை ஆரம்பித்து விட்டனர்.
ஆட்டம் பாட்டத்துடன் உற்சாகமாக நடனமாடி வரும் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் கைகளில் சங்கு வைத்து ஊதி பாஜக ஆட்சியை வீட்டிற்கு அனுப்பிவிட்டோம் என்று சொல்லாமல் கூறியுள்ளனர்.
டெல்லியிலும், பெங்களூருவிலும் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் கூட்டம் கூட்டமாக வரத்தொடங்கியுள்ளனர். காங்கிரஸ் கட்சி முன்னிலை பெறத்தொடங்கியுள்ளதை அடுத்து அனுமன் ஆலயத்தில் பிரியங்கா காந்தி வழிபாடு நடத்தினார். அங்கிருந்த தொண்டர்கள் பலரும் பிரியங்கா காந்திக்கு மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications