நான் அயோத்தி ராமர் கோவிலுக்கு செல்வேன்! சோனியா, கார்கே மறுத்த நிலையில் சித்தராமையா அறிவிப்பு
பெங்களூர்: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா அழைப்பிதழை காங்கிரஸ் கட்சியின் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி ஆகியோர் நிராரித்துள்ளனர். இந்நிலையில் தான் கர்நாடகா முதல்வர் சித்தராமையா ராமர் கோவிலுக்கு செல்ல உள்ளதாக அறிவித்துள்ளதோடு, காங்கிரஸ் கட்சி ராமருக்கு எதிரானது அல்ல என விளக்கமளித்துள்ளார்.
உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி கடந்த 2019ல் தொடங்கியது. பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார். மொத்தம் 3 அடுக்குகளாக நாகரா கட்டக்கலையில் பிரமாண்டமாக கோவில் கட்டப்பட்டு வருகிறது.

தற்போது முதற்கட்ட பணிகள் என்பது முடிவடைந்துள்ளது. இந்நிலையில் தான் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது. ஒவ்வொரு நாடாளுமன்ற தேர்தலின்போதும் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவோம் என தொடர்ந்து பாஜக தெரிவித்து வந்த நிலையில் தற்போது கோவில் திறக்கப்பட உள்ளது.
வரும் 22ம் தேதி நடக்கும் கும்பாபிஷேக விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். மேலும் 3 ஆயிரம் விவிஐபிக்கள் பங்கேற்க உள்ளனர். மொத்தமாக 10,000 பேர் வரை விழாவில் பங்கேற்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் விழாவில் பங்கேற்க வரும்படி அரசியல் கட்சி தலைவர்கள், மடாதிபதிகள், சாமியார்கள், தூதரக அதிகாரிகள் உள்பட பல்வேறு துறை பிரபலங்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி காங்கிரஸ் கட்சியின் தற்போதைய தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, லோக்சபா காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரிக்கும் ராமர் கோவில் கும்பாபிஷேகத்துக்கான அழைப்பிதழ் வழங்கப்பட்டது.
இந்நிலையில் தான் 3 பேரும் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்கமாட்டார்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது பாஜகவின் விழா என காங்கிரஸ் கட்சி விமர்சித்து உள்ளதோடு, கோவில் பணிகளை முழுமையாக முடிக்காமல் பாஜக தேர்தல் லாபத்துக்காக அவசர கதியில் ராமர் கோவிலை திறக்கிறது. இதனால் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி உள்ளிட்டோர் அழைப்பை நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் இந்த செயலை பாஜகவினர் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர். இந்து மக்களுக்கு எதிரான நிலைப்பாட்டில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து இருப்பதாக பாஜக மற்றும் இந்து அமைப்புகளின் தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தான் கர்நாடகா முதல்வர் சித்தராமையா ராமர் கோவிலுக்கு செல்ல உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சிவமொக்கா விமான நிலையத்தில் அவர் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது: நாங்கள் கடவுள் ராமருக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் அரசியல் லாபத்துக்காக கடவுளை பாஜக பயன்படுத்துவதை எதிர்க்கிறோம். மாநிலம் முழுவதும் எங்களின் கட்சி தலைவர்கள் கோவில்களுக்கு செல்கின்றனர். ராமரை வழிபடுகின்றனர். ஜனவரி 22ம் தேதிக்கு பிறகு அயோத்தி ராமர் கோவிலுக்கு நான் செல்ல உள்ளேன்'' என தெரிவித்துள்ளார்.
சோனியா, கார்கே உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கோவில் கும்பாபிஷேக அழைப்பை நிராகரித்துள்ளதோடு, கும்பாபிஷேக பிறகு கோவிலுக்கு செல்வார்களா? இல்லையா? என்பது பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இத்தகைய சூழலில் தான் சித்தராமையா கும்பாபிஷேக விழாவுக்கு பிறகு ராமர் கோவிலுக்கு செல்ல உள்ளதாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications