கர்நாடகாவில் கனமழை தொடர்கிறது... காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு
பெங்களூரு: காவிரியில் இருந்து தமிழகத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு 7,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 2,500 கனஅடி திறக்கப்பட்டு வந்த நிலையில், தொடர் மழையால் 7,500 கனஅடியாக நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதே போல் கே.ஆர்.எஸ். அணையில் நீர் திறப்பு 2,000 கன அடியில் இருந்து 2,511 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆனையத்தின் கூட்டத்தில் காவிரி படுகையில் மழையின் அளவை பொறுத்தும், அணைக்கான நீர் வரத்தை பொறுத்து தமிழகத்திற்கு ஜூன் மாதம் வழங்க வேண்டிய 9.19டி.எம்.சியும், ஜூலை மாதம் வழங்க வேண்டிய 31.24 டி.எம்.சியையும் சேர்த்து மொத்தமாக 40.43 டி.எம்.சி நீரை கர்நாடகா திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.
இந்நிலையில் கடந்த மாதம் காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பெய்த கனமழை காரணமாக கே.ஆர்.எஸ், கபினி, ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய அணைகளுக்கு வரும் நீரின் அளவு 15 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது. இதனால் 13 டிஎம்சி இருந்த அணைகளின் கொள்ளளவு தற்பொழுது 30 டிஎம்சி ஆக உயர்ந்துள்ளது.
இந்தநிலையில், கேரள மாநிலத்தின் வயநாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்த பருவ மழை இன்னும் ஒரு சில தினங்களில் தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அவ்வாறு பருவமழை தீவிரம் அடையும் பட்சத்தில் கபினி அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கக்கூடும். அதன் மூலம் தமிழகத்திற்கு திறக்கக் கூடிய நீரின் அளவும் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications