4-வது இடத்தில் இருக்கும் கர்நாடகவுக்கு வந்த சோதனை- நோயாளிகளே வரலையாம்.. மிகப் பெரிய கொரோனா மைய மூடல்
பெங்களூரு: கர்நாடகாவின் பெங்களூருவில் உள்ள நாட்டிலேயே மிகப் பெரிய கொரோனா மையம் வரும் 15-ந் தேதி முதல் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தனைக்கும் நாட்டிலேயே கொரோனா பாதிப்பில் 4-வது இடம்; கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் -ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கையில் 3-வது இடத்தில் இருக்கிறது கர்நாடகா.
கர்நாடகாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,98,551. இதில் சிகிச்சை பெற்று குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2,92,873. இதுவரை மொத்தம் 6,393 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

கர்நாடகா பாதிப்பு
கொரோனாவுக்கு தற்போது சிகிச்சை பெறும் நோயாளிகள் எண்ணிக்கை- ஆக்டிவ் கேஸ்கள் 99,266. இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கர்நாடகா 4-வது இடத்தில் இருக்கிறது. கொரோனா ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கையில் 3-வது இடம் கர்நாடகா; கொரோனா மரணங்களில் 3-வது இடம். இவ்வளவு பாதிப்புகளை எதிர்கொண்டிருக்கிறது கர்நாடகா.

கொரோனா சிகிச்சை மையம்
ஆனால் பெங்களூருவில் செயல்பட்டு வரும் நாட்டிலேயே மிகப் பெரிய கொரோனா சிகிச்சை மையத்தை செப்டமர் 15-ந் தேதி முதல் மூடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு சொல்லப்பட்டுள்ள காரணம் அதிர்ச்சி தருகிறது. ஏனெனில் இந்த கொரோனா மையத்துக்கு நோயாளிகளே வருவதில்லை என்பதால் மூட முடிவு செய்துவிட்டார்களாம். இப்படி ஒரு திடீர் முடிவை எடுத்திருக்கிறது பெங்களூரு மாநகராட்சி.

பெங்களூரு மாநகராட்சி விளக்கம்
கொரோனா அறிகுறி இருப்பவர்கள் வீடுகளிலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளலாம் என அரசு அறிவித்தது. இதனால் கொரோனா மையத்துக்கு யாரும் வரவில்லை என்பதாலேயே மூட முடிவு செய்திருக்கிறோம்.. இதுதான் பெங்களூரு மாநகராட்சி சொல்லும் விளக்கம்.

10,படுக்கைகள் கொண்ட மையம்
பெங்களூரு சர்வதேச கண்காட்சி மையத்தில் அமைக்கப்பட்ட இந்த கொரோனா மையத்தில் மொத்தம் 10,000 படுக்கைகள் உள்ளன. தற்போது இந்த மையத்தை மூட முடிவு செய்திருப்பதால் இங்குள்ள படுக்கைகள், ஃபேன்கள், குப்பை தொட்டிகள், நாற்காலிகள் உள்ளிட்ட அனைத்தையும் பல்வேறு அரசு மருத்துவமனைகளுக்கு இலவசமாகவே தருவதற்கும் முடிவு செய்திருக்கின்றனர்.

அரசு மருத்துவமனைகளிடம் ஒப்படைப்பு
கர்நாடகா சமூக வளர்ச்சித்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஹாஸ்டல்களுக்காக 2,500 நாற்காலிகளும் பாகல்கோட் தோட்டக்கலை பல்கலை., பெங்களூரு சிறுபான்மை நலவாரிய ஹாஸ்டல் ஆகியவற்றுக்கு தலா 1,000 நாற்காலிகளும் கொடுக்கப்பட இருக்கின்றன. எஞ்சியவை அரசு மருத்துவமனைகளிடம் ஒப்படைக்கப்படும்.












Click it and Unblock the Notifications