ஐடி ஊழியர்களே.. ஊருக்கு டிக்கெட் போட்டாச்சா.. மீண்டும் Work From Home.. முன்னணி நிறுவனங்கள் பிளான்!
பெங்களூர்: கொரோனா மூன்றாவது அலை தொடங்கிவிட்டதாகத் தமிழக சுகாதாரத்துறை அமைச்சரே அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டார். பிரதமர் மோடியும் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்குங்கள் என்றும் கண்டிப்பாகக் கூறிவிட்டார்.
Recommended Video
விடாக் கண்டன்..கொடாக் கண்டணாக கொரோனா ஒவ்வொரு முறையும் உருமாறி வருகிறது. ஒமிக்ரான் என்றார்கள்..இப்போது ப்ளோரோனா என்கிறார்கள். புத்தாண்டுக்குப் பிறகு இந்தியாவின் தினசரி கொரோனா பாதிப்பு மின்னல் வேகத்தில் ஏறிக்கொண்டிருக்கிறது. கட்டுப்பாடுகள் விதித்தாக வேண்டும், இல்லையென்றால் இரண்டாவது அலையைப் போல் விளைவுகளை சந்திக்க நேரிடும்.
பல மாநிலங்கள் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கி வருகின்றன. திரையரங்கு, ஜிம், இரவு நேரக் கட்டுப்பாடு என மாநிலங்களின் தன்மைக்கு ஏற்ப கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டுவருகின்றன. மூன்றாவது அலை ஆரம்பித்திருக்கும் இந்த நேரத்தில், இந்தியாவில் சில மாநிலங்கள் சட்டசபைத் தேர்தலை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றன.

ஐ.டி நிறுவனங்கள்
கொரோனா இந்தியாவில் அதிகரிக்கத் தொடங்கி, மொத்த இந்தியாவும் லாக்டவுனில் சென்றபோது முதலில் வொர்க் ப்ரம் ஹோமை (WFH) துவங்கி வைத்தது ஐ.டி நிறுவனங்கள் தான். ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பி, அதற்குத் தேவையான உபகரணங்களையும் கொடுத்து ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை பார்க்கச் சொன்னது ஐ.டி நிறுவனங்கள் தான். நிறைய ஐ.டி ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்வது முதலில் சிரமத்தைக் கொடுத்தாலும், பிறகு அவர்கள் அதற்குத் தகுந்தமாதிரி தங்களை மாற்றிக்கொண்டார்கள்.

மூன்றாவது அலை
தற்போது மூன்றாவது அலை தொடங்கி இருக்கும் இந்த நேரத்தில், மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம் திட்டத்தைக் கையில் எடுத்திருக்கின்றன இந்த நிறுவனங்கள். சில ஐ.டி நிறுவனங்கள் கொரோனா ஓயும்வரை வீட்டிலிருந்தே வேலை பார்க்கச் சொன்னது. சில நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை மீண்டும் அழைத்துக் கொண்டது. அப்படி சென்னை, பெங்களூரு, மும்பை உள்ளிட்ட ஐ.டி நகரங்களில் இரண்டாவது அலைக்குப் பின் மீண்டும் அலுவலகம் வந்து வேலையில் ஈடுபட்டுவந்தனர். தற்போது கொரோனாவின் மூன்றாவது அலை அதிகரித்து வரும் நிலையில் ஐ.டி நிறுவனங்கள் மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளன.

அறிவுறுத்திய சுகாதார அமைச்சகம்
TCS, Infosys மற்றும் HCL டெக்னாலஜிஸ் போன்ற ஐடி நிறுவனங்கள்,தற்போது ஊழியர்களைத் திரும்ப அழைக்க வேண்டாம் என்றும், முடிந்தவரை வீட்டிலிருந்து வேலை செய்வதை நடைமுறைப்படுத்தவும் திட்டமிட்டுள்ளன. இதையே மத்திய சுகாதார அமைச்சகம் ஐ.டி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறையில் செயல்படும் நிறுவனங்கள், வீட்டிலிருந்து வேலையைத் தொடரவிருப்பதாக தங்கள் நோக்கத்தை ஏற்கனவே மத்திய அரசிடம் வெளிப்படுத்தியுள்ளன.

10 சதவிகிதம் மட்டுமே
ஐ.டி நிறுவனங்களில் பணிபுரியும் மூத்த நிர்வாகிகள் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் அலுவலகத்துக்குத் திரும்புவது குறித்து எச்சரிக்கையாக இருப்பதாக எகனாமிக் டைம்ஸின் அறிக்கைத் தெரிவித்துள்ளது. தொழிலாளர் எண்ணிக்கையில் இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்), நிறுவனத்தின் ஊழியர்களில் 10 சதவீதத்திற்கும் குறைவானவர்களே தற்போது தங்கள் அலுவலகங்களிலிருந்து பணிபுரிகின்றனர் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இன்ஃபோசிஸ்
கொரோனா இரண்டாம் அலை குறைந்ததும், இன்ஃபோசிஸ் நிறுவனம் தங்களது ஊழியர்களை அலுவலகத்துக்குத் திரும்ப அழைத்திருந்தது. இந்நிலையில், மத்திய அமைச்சகத்தின் அறிவுறுத்தலையடுத்து 'மாறி வரும் சுகாதார நிலையைக் கருத்தில் கொண்டு எச்சரிக்கையான அணுகுமுறையை எடுத்துள்ளோம்' என இன்ஃபோசிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தமிழகம், கர்நாடகா, மும்பை என ஐ.டி நிறுவனங்கள் அதிகமிருக்கும் மாநிலங்களில் தற்போது கொரோனாவின் எண்ணிக்கை தினசரி ஆயிரத்தைக் கடந்துள்ளது. அதோடு ஒமிக்ரான் அச்சுறுத்தலும் அதிகரித்திருக்கிறது. இந்த நிலையில் ஐ.டி நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்வதே சிறப்பாக இருக்கும் என சுகாதார ஆய்வாளர்களும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications