Thug Life படத்துக்கு கர்நாடகாவில் சிக்கல்? கமல்ஹாசன் பேச்சால் கடுப்பில் கன்னட அமைப்புகள்
பெங்களூர்: தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் பேசுகையில் தமிழில் இருந்து பிறந்ததுதான் கன்னடம் என கூறியிருந்த நிலையில் அவருடைய பேச்சுக்கு கன்னட அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதனால் கர்நாடகாவில் தக் லைஃப் படம் வெளியாவதில் சிக்கல் எழும் நிலை உள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன், அபிராமி, த்ரிஷா நடித்துள்ள படம் தக் லைஃப். இந்த படத்தின் மூலம் 38 ஆண்டுகளுக்கு பிறகு கமலும் மணிரத்னமும் இணைந்துள்ளனர். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த சனிக்கிழமை சென்னையில் நடந்தது.

அப்போது கமல், கன்னட நடிகர் சிவராஜ்குமார் குறித்து பேசுகையில், " ராஜ்குமாருடைய குடும்பம் அந்த ஊரில் இருக்கும் எனது குடும்பம். அதனால்தான் அவர் இங்கு வந்திருக்கிறார். எனது பேச்சை தொடங்கும் போது உயிரே உறவே தமிழே என தொடங்கினேன். தமிழிலிருந்து பிறந்ததுதான் கன்னடம். அதை நீங்களும் (சிவராஜ்குமார்) ஒப்புக் கொள்வீர்கள்" என பேசியிருந்தார்.
இதற்கு சிவராஜ்குமாரும் தலையசைத்தார். ஆனால் இந்த கருத்துக்கு கன்னட ரக்ஷன வேதிகே உள்ளிட்ட அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இதுகுறித்து கன்னட ரக்ஷன வேதிகே தலைவர் பிரவீன் ஷெட்டி கூறுகையில், தமிழ் பிறந்த பிறகுதான் கன்னடம் பிறந்தது, கன்னடத்தை விட தமிழ்தான் சிறந்தது என கமல்ஹாசன் கூறியுள்ளார்.
நாங்கள் கமலை எச்சரிக்கிறோம். உங்களுக்கு கர்நாடகாவில் வியாபாரம் வேண்டும். ஆனாலும் கன்னடத்தை அவமதிக்கிறீர்களா? இன்று (நேற்று) நீங்கள் எங்கள் மாநிலத்தில் இருந்தீர்கள். உங்கள் மீது கருப்பு மை பூச நாங்கள் தயாராக இருந்தோம்.
ஆனால் நீங்கள் ஓடிவிட்டீர்கள். கர்நாடகாவிற்கும் அதன் மக்களுக்கும் எதிராக பேசினால் உங்களுக்கு எதிரான போராட்டங்கள் நடத்தப்படும் என எச்சரிக்கிறோம். உங்கள் படம் கர்நாடகாவில் தடை செய்யப்படும் என எச்சரிக்கிறோம் என தெரிவித்தனர்.
சமூகவலைதளங்களிலும் கன்னட அமைப்புகள் கமலுக்கு எதிராக கருத்துகளை தெரிவித்து வருகின்றன. இதனால் கர்நாடகாவில் தக் லைஃப் படம் வெளியாவதில் சிக்கல் எழும் என தெரிகிறது. பெங்களூரில் தக் லைஃப் பட புரமோஷனுக்காக கமல்ஹாசன் வந்திருந்தார். அவர் மீது மை பூச போராட்டக்காரர்கள் முயற்சித்தனர். ஆனால் இதுகுறித்து தகவல் அறிந்த கமல் அந்த இடத்தை விட்டு சென்றார்.
இதுகுறித்து கர்நாடக மாநிலம் பாஜக தலைவர் வி.ஒய். விஜயேந்திரா கூறுகையில், கன்னடம் குறித்து கமல்ஹாசனின் பேச்சு அவரது ஆவணத்தையே காட்டுகிறது. நாகரீகமற்ற நடத்தையை காட்டுகிறது. நடிகர்கள் எல்லா மொழிகளையும் மதிக்க வேண்டும். தமிழை பாராட்ட நடிகர் கமல், கன்னடத்தை அவமதித்துள்ளார். கன்னடம் 2500 ஆண்டுகள பழமையானது. கமல்ஹாசனின் இந்த பேச்சு 6.5 கோடி கன்னடர்களின் மனதை புண்படுத்திவிட்டது. அவர் இந்து மதத்தையும் ஆன்மீக சடங்குகளையும் அவமதித்துவிட்டார். எனவே நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications