மத்திய அமைச்சர் குமாரசாமியை 'பன்றியுடன்' ஒப்பிட்ட கர்நாடகா லோக் ஆயுக்தா கூடுதல் டிஜிபி-புது சர்ச்சை!
பெங்களூர்: மத்திய இணை அமைச்சர் குமாரசாமியை 'சாக்கடையில் புரளும் பன்றி' என ஒப்பிட்டு கர்நாடகா லோக் ஆயுக்தா கூடுதல் டிஜிபி சந்திரசேகர் விமர்சித்தது பெரும் சர்ச்சையாகி இருக்கிறது. மத்திய அமைச்சர் குமாரசாமியை விமர்சித்த கூடுதல் டிஜிபி சந்திரசேகர் மீது உரிய நடவடிக்கை பாயும் என மற்றொரு மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி மிரட்டல் விடுத்துள்ளார்.
கர்நாடகா முன்னாள் முதல்வரும் மத்திய இணை அமைச்சருமான குமாரசாமி மீதும் நில முறைகேடு புகார் ஒன்று நிலுவையில் உள்ளது. பெங்களூர் கங்கேனஹள்ளியில் அரசு நிலத்தை ஆக்கிரமித்துள்ளார் குமாரசாமி என்பது புகார். இந்தப் புகார் தொடர்பாக கர்நாடகா லோக் ஆயுக்தாவில் உள்ள சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது.

குமாரசாமி மீதான புகார் குறித்து விசாரணை நடத்தும் சிறப்பு புலனாய்வுக் குழுவின் தலைவர் கூடுதல் டிஜிபி சந்திரசேகர். இந்த விசாரணைக் குழு முன்பாக மத்திய இணை அமைச்சர் குமாரசாமி ஆஜராகி இருந்தார். அப்போது, கூடுதல் டிஜிபி சந்திரசேகருக்கும் மத்திய அமைச்சர் குமாரசாமிக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் குமாரசாமி, கூடுதல் டிஜிபி சந்திரசேகர் ஒரு ஊழல் பேர்வழி என்பதில் தொடங்கி ஏராளமான குற்றச்சாட்டுகளை அடுக்கினார். இதற்கு பதிலடி தந்த கூடுதல் டிஜிபி சந்திரசேகர், நில முறைகேடு வழக்கின் குற்றவாளிதான் மத்திய அமைச்சர் குமாரசாமி. என்னை மிரட்டும் நோக்கத்தில் இத்தகைய அவதூறுகளை அள்ளி வீசுகிறார். பன்றிகள் சாக்கடையில் புரண்டு எழும். பன்றிகளோடு சண்டையிட்டால் நாமும் சாக்கடையில் புரளவேண்டியதுதான் எனவும் காட்டமாக விமர்சித்திருந்தார்.
இதனால் மத்திய இணை அமைச்சர் குமாரசாமியை பன்றியுடன் ஒப்பிட்டு விமர்சித்துவிட்டார் கர்நாடகா கூடுதல் டிஜிபி சந்திரசேகர் என பாஜகவினரும் ஜேடிஎஸ் கட்சியினரும் கொந்தளிக்கின்றனர். காங்கிரஸ் கட்சியின் தூண்டுதலில்தான் கூடுதல் டிஜிபி சந்திரசேகர் இப்படி விமர்சிக்கிறார் என்கின்றன ஜேடிஎஸ், பாஜக கட்சிகள்.
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, ஒரு ஐபிஎஸ் அதிகாரி மத்திய அமைச்சரை பன்றியுடன் ஒப்பிட்டு எப்படி விமர்சிக்கலாம்? உடனடியாக கூடுதல் டிஜிபி சந்திரசேகர் மன்னிப்பு கேட்டாக வேண்டும். இதை எல்லாம் பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் சகித்துக்கொண்டும் இருக்கமுடியாது. கூடுதல் டிஜிபி சந்திரசேகர் மீது நடவடிக்கை பாயத்தான் செய்யும் என மிரட்டல் விடுத்துள்ளார்.











Click it and Unblock the Notifications