சசிகலாவை சந்திக்க வந்தார் கர்நாடகா அதிமுக செயலாளர் யுவராஜ்
பெங்களூர்: சசிகலாவை சந்திக்க கர்நாடகா அதிமுக செயலாளர் யுவராஜ் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த 27ஆம் தேதி பரப்பன அக்ரஹார சிறையிலிருந்து வெளியே வந்த சசிகலா நேற்றைய தினம் விக்டோரியா மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவர் அதிமுக கொடி வைக்கப்பட்ட ஜெயலலிதாவின் காரில் பயணம் செய்தார்.
இதை அதிமுகவினர் கடுமையாக எதிர்த்தனர். எனினும் சில நிர்வாகிகள் சசிகலாவை வரவேற்று போஸ்டர் ஒட்டினர். இந்த நிலையில் அவருக்கு கொரோனா நீங்கிவிட்டாலும் அவர் ஒரு வார காலத்திற்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
தாக்கம்
இதையடுத்து அவர் பெங்களூர் புறநகர் பகுதியில் உள்ள தேவனஹள்ளியில் கோடாகுருக்கி பண்ணை வீட்டில் தங்கியுள்ளார். ஒரு வாரம் கழித்து அவர் சென்னைக்கு வருவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இவரது வருகையால் அதிமுகவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறது.
பரபரப்பு
மேலும் அதிமுக இரண்டாக கூட உடைய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இத்தனை நாட்களாக சசிகலாவிடம் மனதிற்குள்ளேயே விசுவாசமாக இருந்த நிர்வாகிகள் இன்று வெளிப்படையாக பேசத் தொடங்கிவிட்டனர். அந்த வகையில் சசிகலாவை சந்திக்க கர்நாடகா அதிமுக செயலாளர் யுவராஜ் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கொரோனா
சசிகலா தங்கியிருக்கும் பண்ணை வீட்டுக்கு அமமுக செயலாளர் சம்பத்துடன் யுவராஜும் வந்தார். கொரோனாவை தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்ட சசிகலாவை சந்திக்க யாரும் அனுமதிக்கப்படவில்லை. சம்பத்தும் யுவராஜும் அங்கு சிறிதுநேரம் காத்திருந்துவிட்டு திரும்பிச் சென்றனர்.
சசிகலா
பெங்களூரில் இருக்கும் சசிகலாவுக்கு இத்தனை வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து வரும் நிர்வாகிகள் அவரது தனிமைப்படுத்துதல் காலம் முடிந்த பிறகு அவர் சென்னை வந்தால் எப்படி இருக்கும் என தெரியவில்லை. சசிகலாவால் அரசியல் களத்தில் மாற்றம் ஏற்படும் என சொல்லப்படுகிறது. எதுவாக இருந்தாலும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.