கர்நாடகா தேர்தல்: பாஜக, காங்-க்கு இப்பவே துண்டு போட்டு வைக்கும் தேவகவுடா.. எப்படி எல்லாம் நழுவுறாரு!
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் ஜேடிஎஸ் தனித்தே ஆட்சி அமைக்கும் என இப்போதும் நம்பிக்கையுடன் இருக்கிறார் அதன் நிறுவனரான முன்னாள் பிரதமர் தேவகவுடா. அதேநேரத்தில் தொங்கு சட்டசபை அமைந்தால் பாஜக அல்லது காங்கிரஸுடன் கை கோர்க்கவும் தயார் என்ற அடிப்படையில் இரு கட்சிகளுக்கும் எதிராக விமர்சனங்களை முன்வைக்கவும் தயங்குகிறார் தேவ கவுடா.
கர்நாடகா மாநிலத்தில் 1999-ம் ஆண்டு ஜேடிஎஸ் கட்சி உதயமானது முதல் 60 இடங்களைக் கூட அந்த கட்சி இதுவரை பெற்றது இல்லை. பழைய மைசூர் மாகாணத்தில் ஒக்கலிகா கவுடா ஜாதி ஓட்டுகளை மட்டுமே நம்பி இருக்கக் கூடிய கட்சியாகத்தான் ஜேடிஎஸ் இருந்து வருகிறது. ஒக்கலிகா கவுடா ஜாதியினரின் கண்மூடித்தனமான ஆதரவால் கணிசமான இடங்களும் அந்த கட்சிக்கு தொடர்ந்து கிடைத்து வருகிறது. இதனால் பாஜக அல்லது காங்கிரஸுடன் இணைந்து எளிதாக முதல்வர் பதவியை ஜேடிஎஸ் கட்சியால் பெறவும் முடிகிறது.

இத்தேர்தலில் 123 இடங்களை வெல்வதை இலக்காக வைத்திருக்கிறது ஜேடிஎஸ் கட்சி. 123 இடங்களைக் கைப்பற்றி தனித்தே ஆட்சி அமைக்கப் போகிறோம் என்பது ஜேடிஎஸ்-ன் கொள்கை. இதுவரை 93 வேட்பாளர்களை அறிவித்துள்ளது. நாளை ஜேடிஎஸ் கட்சியின் 2-வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு தேவகவுடா பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், கர்நாடகாவில் ஜேடிஎஸ் கட்சி தனித்தே சொந்தமாக ஆட்சி அமைக்கும். இது கற்பனை கிடையாது. ஜேடிஎஸ் கட்சிக்கு பழைய மைசூர் மாகாணத்தையும் தாண்டி கர்நாடகா மாநிலத்தின் பல பகுதிகளிலூம் ஆதரவு இருக்கிறது; எம்.எல்.ஏக்கள் உள்ளனர் என்கிறார் தேவகவுடா.
மேலும் பாஜக காங்கிரஸ் தொடர்பாக பல கேள்விகள் கேட்கப்பட்ட போதும் பொத்தாம் பொதுவாகவே பட்டும்படாமலும் பதிலளித்துள்ளார் தேவ கவுடா. ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டது பற்றிய கேள்விக்கும் கூட, இதை பற்றி பேசவிரும்பவில்லை என பதில் சொல்லி இருக்கிறார் தேவகவுடா. ஆனால் இந்த நிகழ்வு எதிர்பாராத ஒன்று என்கிறார்.
பிரதமர் மோடியின் செயல்பாடுகள் குறித்து கேள்வி கேட்டால், ராஜ்யசபாவில் தாம் பல்வேறு விவாதங்களில் பங்கேற்றதை பட்டியல் போட்டு சொல்கிறார் தேவகவுடா. காங்கிரஸ் கட்சி மட்டுமே இந்த நாட்டில் எதிர்க்கட்சி அல்ல; 91 வயதிலும் நான் என் கடமையை செய்கிறேன் என்கிறார்.
மேலும் கர்நாடகா மாநில தேர்தல் பிரசாரத்தில் தேசிய கட்சிகள் இரண்டுமே ஜேடிஎஸ்_க்கு எதிராக பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றன. இந்த பொய்களை மக்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். தேர்தலில் தக்க பாடம் புகட்டுவார்கள் எனவும் கூறி இருக்கிறார் தேவகவுடா. பிடிஐக்கு தேவ கவுடா அளித்த பேட்டியானது தொங்கு சட்டசபை அமைந்தால் பாஜக அல்லது காங்கிரஸுடன் கை கோர்க்க ஜேடிஎஸ் தயார் என துண்டு போட்டு வைப்பதையே வெளிப்படுத்துகிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications