கர்நாடகா தேர்தல்:6 மாவட்டங்களின் 40 தொகுதிகளில் சர்வே படையை களமிறக்கிய தெலுங்கானா முதல்வர் கேசிஆர்!
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலுக்காக 6 மாவட்டங்களின் 40 தொகுதிகளை இலக்கு வைத்து மெகா சர்வே டீமை தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் களமிறக்கி உள்ளாராம். கர்நாடகா சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. கர்நாடகாவில் ஜேடிஎஸ் கட்சியுடன் தெலுங்கானா முதல்வர் கேசிஆரின் பிஆர்எஸ் கட்சி கூட்டணி அமைப்பதாக அறிவித்துள்ளது. பிஆர்எஸ் தேசிய கட்சியாக அறிவிக்கப்பட்ட நிலையில் கர்நாடகா தேர்தலை முதல் முறையாக எதிர்கொள்கிறது.
கர்நாடகா மாநில சட்டசபை தேர்தல் 2023-ம் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்கான பணிகளில் ஆளும் பாஜக, காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் கட்சிகள் தீவிரமாக களமிறங்கி உள்ளன.

ஜேடிஎஸ் வேட்பாளர்கள் பட்டியல்
குமாரசாமியின் ஜேடிஎஸ் கட்சி 93 வேட்பாளர்களுடனான முதல் கட்ட பட்டியலையும் அறிவித்துவிட்டது. குமாரசாமியின் குடும்பத்தில் அவரும் அவரது மகன் நிகிலும் இம்முறை தேர்தலில் போட்டியிடுகின்றனர். கடந்த சில தேர்தல்களில் ஜேடிஎஸ் கட்சியின் வாக்கு வங்கியான ஒக்கலி கவுடாக்கள், காங்கிரஸ் பக்கம் சாய்ந்து வரும் நிலையில் இழந்த செல்வாக்கை மீட்பதில் அக்கட்சி முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

ஜேடிஎஸ் பிஆர்எஸ் கூட்டணி
இதனிடையே குமாரசாமியின் ஜேடிஎஸ் கட்சியுடன் கூட்டணி அமைப்பதாக தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார். தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி என்ற தமது கட்சியின் பெயரை அண்மையில் பிஆர்எஸ்- பாரத் ராஷ்டிரிய சமிதி என மாற்றினார் கேசிஆர். பிஆர்எஸ் கட்சியை தேசிய கட்சியாக வளர்த்தெடுப்பதில் தீவிரமாக உள்ளார் கேசிஆர். பிஆர்எஸ் கட்சியின் டெல்லி தலைமை அலுவலக திறப்பு விழாவில் பாஜக அல்லாத பல எதிர்க்கட்சிகளின் தலைவர்களையும் கேசிஆர் அழைத்திருந்தார்.

டார்கெட் ஹைதராபாத் கர்நாடகா
கர்நாடகாவைப் பொறுத்தவரையில் ஹைதராபாத் கர்நாடகா என்ற இன்றைய கல்யாண் கர்நாடகாவில் 6 மாவட்டங்களில் தெலுங்கானா மக்கள் கணிசமான எண்ணிக்கையில் வசிக்கின்றனர். பிதார், யாத்கிர், ராய்ச்சூர், கொப்பல் உள்ளிட்ட இந்த 6 மாவட்டங்களில் மொத்தம் 40 சட்டசபை தொகுதிகள் உள்ளன. கடந்த சட்டசபை தேர்தலின் போது இந்த 40-ல் காங்கிரஸ் கட்சி 21; பாஜக 15; ஜேடிஎஸ் 4 தொகுதிகளை கைப்பற்றின.

கூட்டணி ஆட்சிக்கான வியூகம்
கடந்த 2017-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஜேடிஎஸ் கட்சி 40 இடங்களில் வென்றது. இதனைத் தொடர்ந்டு காங்கிரஸுடன் இணைந்து ஜேடிஎஸ்-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்தது. எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கிதான் ஜேடிஎஸ்- காங்கிரஸ் கூட்டணியை ஆட்சியை பாஜக கவிழ்த்தது. இந்த தேர்தலிலும் ஜேடிஎஸ்- பிஆர்எஸ் இணைந்து குறைந்தபட்சம் 40 தொகுதிகளில் வென்றுவிட்டால் காங்கிரஸ் ஆதரவுடன் கூட்டணி ஆட்சி அமைக்க முடியும்; கர்நாடகா ஆட்சியிலும் பிஆர்எஸ் பங்கேற்கும் என்பதுதான் கேசிஆரின் வியூகம்.

மெகா சர்வே டீம்
அதாவது ஒக்கலிகா கவுடா வாக்குகளின் செல்வாக்குடன் ஜேடிஎஸ் கணிசமான இடங்களைப் பெறும்; ஹைதராபாத் கர்நாடகா பகுதியில் தெலுங்கானா மக்களின் வாக்குகளுடன் ஜேடிஎஸ்- பிஆர்எஸ் கூட்டணி கணிசமான இடங்களைப் பெற முடியும்; இதனடிப்படையில் கிங் மேக்கராக கர்நாடகா அரசியலில் உருவெடுக்க முடியும் என கணக்குப் போட்டு காத்திருக்கிறாராம் கேசிஆர். இதற்காகவே இந்த 6 மாவட்டங்களில் மெகா சர்வே டீம் ஒன்றை இறக்கிவிட்டுள்ளாராம் கேசிஆர். இந்த சர்வே டீம் தரும் ரிப்போர்ட்டுகளின் அடிப்படையில் அடுத்த வியூகங்கள், வேட்பாளர்கள் அறிவிப்பு இருக்கும் என்கின்றன பிஆர்எஸ் வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications