நாட்டிலேயே 2-வது மாநிலம்!ஜாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களை எதிர்ப்புகளுக்கு இடையே வெளியிடும் கர்நாடகா?
பெங்களூர்: கர்நாடகாவில் பெரும்பான்மை ஜாதிகளான லிங்காயத், ஒக்கலிகர் எதிர்ப்புகளுக்கு இடையே ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்கள் அம்மாநில முதல்வர் சித்தராமையாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட தடை கோரும் வழக்கும் இன்று கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
ஆங்கிலேயர் ஆட்சியில்தான் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அந்த புள்ளி விவரங்கள் அடிப்படையில்தான் தற்போதும் இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் தற்போதைய ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது பொதுவான கோரிக்கை.

நாட்டிலேயே பீகார் மாநிலம்தான் முதல் முறையாக ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி விவரங்களை வெளியிட்டது. இந்த புள்ளி விவரங்கள் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசும், மத்திய அரசானது ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. அதேநேரத்தில் தமிழ்நாடு அரசே முன்வந்து ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
கர்நாடகாவில் சித்தராமையாக முதல்வராக பதவி வகித்த 2013-18-ம் ஆண்டு காலத்தில் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 2015-ம் ஆண்டு கர்நாடகா பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் இந்த ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி இருந்தது. ஆனால் இந்த அறிக்கை விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்து மீண்டும் சித்தராமையா முதல்வரான நிலையில் ஜாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களை வெளியிடுவேன் என்றார். இதற்கு ஆளும் காங்கிரஸிலேயே கடும் எதிர்ப்பு எழுந்தது. கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமாரும் எதிர்ப்பு தெரிவித்தார். கர்நாடகாவின் பெரும்பான்மை ஜாதிகளான லிங்காயத் மற்றும் ஒக்கலிகா ஜாதி தலைவர்களும் ஜாதிவாரி கணக்கெடுப்பு, அறிவியல் பூர்வமானது இல்லை ,ஆகையால் வெளியிடக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் கர்நாடகா பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் ஜெயப்பிரகாஷ் ஹெக்டே நேற்று முதல்வர் சித்தராமையாவிடம் 9 ஆண்டுகளுக்கு முன்னர் நடத்தப்பட்ட ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்களை முழுமையாக ஒப்படைத்தார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த முதல்வர் சித்தராமையா, அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த விவரங்கள் முன்வைக்கப்பட்டு பரிசீலனை செய்யப்படும் என்றார்.
அதேநேரத்தில் கர்நாடகா மாநில அரசு, ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட தடை விதிக்கக் கோரி அம்மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற இருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகா அரசு தடைகளை மீறி ஜாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட்டால் பீகாரைத் தொடர்ந்து ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு வெளியிட்ட 2-வது மாநிலமாக இருக்கும்.












Click it and Unblock the Notifications