நடக்காத நம்பிக்கை வாக்கெடுப்பு.. அதிர்ச்சியில் பாஜக.. சட்டசபையில் படுத்து தூங்கும் எம்எல்ஏக்கள்
Recommended Video
பெங்களூர்: குமாரசாமி அரசு தாக்கல் செய்த நம்பிக்கை தீர்மானத்தின் மீது இன்று வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை. ஆளும் கட்சியினர் வேண்டுமென்றே நாள் முழுக்க இழுத்தடித்ததாக பாஜக குற்றம்சாட்டி வருகிறது. இதையடுத்து, இன்று இரவு சட்டசபையிலேயே படுத்து தூங்குவது என பாஜக எம்எல்ஏக்கள் முடிவு செய்துள்ளனர்.
காங்கிரஸ் மற்றும் மஜதவை சேர்ந்த 16 எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்த நிலையில், கர்நாடக முதல்வர் குமாரசாமி அரசு பெரும்பான்மையை இழந்ததாக பாஜக குற்றம்சாட்டியது.
இதையடுத்து, நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தயாராக இருப்பதாக கடந்த வெள்ளிக்கிழமை முதல்வர் குமாரசாமி சட்டசபையில் திடீரென அறிவித்தார். இதையடுத்து, வியாழக்கிழமையான இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சபாநாயகர் அனுமதித்தார்.

நம்பிக்கை வாக்கெடுப்பு
இந்த ஒரு வார இடைவெளியில் எவ்வளவோ முயன்றும், அதிருப்தி எம்எல்ஏக்களை காங்கிரஸ், தலைவர்களால் சமாதானப்படுத்த முடியவில்லை. எனவே இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால் அரசு கவிழுவது உறுதி என்ற நிலையில், காலை 11 மணிக்கு திட்டமிட்டபடி, நம்பிக்கை தீர்மானத்தை அவையில் தாக்கல் செய்தார் குமாரசாமி.

சித்தராமையா ஆட்சேபனை
குமாரசாமி தனது உரையை ஆரம்பித்தபோது காங்கிரஸ் தலைவரும், சட்டசபை குழு தலைவருமான சித்தராமையா, எழுந்து, "விப் உத்தரவை பிறப்பித்து அனைத்து காங்கிரஸ் எம்எல்ஏக்களையும் சட்டசபைக்கு வர வைக்கும் உரிமையை சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு பறித்துள்ளது. இதற்கு ஒரு தீர்வு வரும்வரை நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த கூடாது" என்றார்.

குற்றச்சாட்டு
இதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இப்படியாக மதியம் வரை அவை நடவடிக்கை நீடித்தது. பிற்பகல், உணவு இடைவேளை முடிந்து, மீண்டும் அவை கூடியபோது, காங்கிரஸ் எம்எல்ஏ ஸ்ரீமந்த் பாட்டீலை பெங்களூரிலிருந்து மும்பைக்கு பாஜகவினர் கடத்தி சென்றுவிட்டதாக ஒரு குற்றச்சாட்டை காங்கிரஸ் முன் வைத்தது.

நாளை ஒத்திவைப்பு
இது பற்றி விவாதம் தொடர்ந்தபோது, காங்கிரஸ்-பாஜக உறுப்பினர்கள் நடுவே வாக்குவாதம் ஏற்பட்டது. பாஜகவினரை கண்டித்து காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர் கோஷம் எழுப்பி தர்ணா நடத்தினர். இதனால் அவையை நாளை காலை 11 மணிக்கு சபாநாயகர் ஒத்தி வைத்தார்.

இரவெல்லாம் சட்டசபையில் உறக்கம்
இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பு நிறைவடையும், அரசு கலையும் என்ற ஆர்வத்தில் வந்த பாஜகவினர், இந்த இழுபறியால் அதிருப்தியடைந்துள்ளனர். எனவே இன்று இரவு முழுக்க சட்டசபைக்குள்ளேயே தங்கியிருக்க போகிறோம் என எடியூரப்பா அறிவித்துள்ளார். இரவு முழுக்க பாஜக எம்எல்ஏக்கள் அங்கேயே தங்கியிருக்க உள்ளனர். இதன் மூலம், நாளையாவது நம்பிக்கை தீர்மானத்தை நிறைவேற்றியே தீர வேண்டும் என்ற நெருக்கடியை, பாஜக உருவாக்கியுள்ளது.












Click it and Unblock the Notifications