சென்னபட்டணாவில் தேவகவுடா குடும்பத்துக்கு நோஸ் கட் கொடுக்கும் பாஜக? அனல் பறக்கும் கர்நாடகா
பெங்களூர்: கர்நாடகா மாநிலம் சென்னபட்டணா சட்டசபை தொகுதி இடைத் தேர்தலில் களமிறங்குவதற்கு பாஜக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. பாஜகவில் தம்மை வேட்பாளராக அறிவிக்க வலியுறுத்தி கலகக் குரல் எழுப்பி வரும் யோகேஸ்வரை, டெல்லிக்கு வர மேலிடம் உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் மத்திய அமைச்சர் குமாரசாமி வென்ற சென்னபட்டணாவில் அவரது சகோதரியை களமிறக்கலாம் என்ற ஜேடிஎஸ்-க்கு நோஸ் கட் கொடுத்துவிட்டது பாஜக என்கிற ஆதங்கமும் வெளிப்படுகிறது.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் சென்னபட்டணாவில் போட்டியிட்டு வென்றவர் முன்னாள் முதல்வர் குமாரசாமி. லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு எம்பியானதால் சென்னபட்டணா எம்.எல்.ஏ. பதவியை குமாரசாமி ராஜினாமா செய்தார். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இணை அமைச்சராகி இருக்கிறார் குமாரசாமி.

இதனால் சென்னபட்டணா சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இத்தொகுதியில் தம்மையே பாஜக வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என தொடக்கம் முதலே குரல் கொடுத்து வருகிறவர் சிபி யோகேஸ்வர். சென்னபட்டணா தொகுதியில் 2013-ம் ஆண்டு சமாஜ்வாதி கட்சியின் சார்பில் போட்டியிட்டு வென்று எம்.எல்.ஏ.வானவர் யோகேஸ்வர். அத்தேர்தலில் குமாரசாமி மனைவி அனிதாவை 6,464 வாக்குகள் வித்தியாசத்தில் யோகேஸ்வர் தோற்கடித்தார். காங்கிரஸ் கட்சிக்கு 3-வது இடம்தான் கிடைத்தது.
ஆனால் 2018-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பாஜக வேட்பாளராக களம் கண்ட சிபி யோகேஸ்வரை குமாரசாமி வீழ்த்தினார். 21,530 வாக்குகள் வித்தியாசத்தில் குமாரசாமி வெற்றி பெற்றார். 2023-ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் பாஜகவின் சிபி யோகேஸ்வரை 15,915 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார் குமாரசாமி.
தற்போது குமாரசாமி மத்திய அமைச்சராகிவிட்டதால் சென்னபட்டணாவில் தம்மால் எளிதாக வெல்ல முடியும் என்பது யோகேஸ்வரின் நம்பிக்கை. அப்படி தமக்கு போட்டியிட வாய்ப்பு தராவிட்டால் 'அடுத்த' கட்ட முடிவு எடுப்பேன் எனவும் மிரட்டி வந்தார் யோகேஸ்வர்.
இதனிடையே சென்னபட்டணா தொகுதியில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகளும் குமாரசாமியின் சகோதரியுமான அனசுயாவை சென்னபட்டணாவில் நிறுத்துவது தொடர்பாக ஜேடிஎஸ் தீவிரமாக ஆலோசனை நடத்தி வந்தது.
இந்த பின்னணியில் தற்போது யோகேஸ்வரை டெல்லிக்கு வருமாறு பாஜக மேலிடம் அழைத்துள்ளதாம். இதனையடுத்து ஓரிரு நாட்களில் டெல்லிக்கு செல்லும் யோகேஸ்வர், சென்னபட்டணா தொகுதி நிலவரம் குறித்து மேலிடத் தலைவர்களிடம் விவரிக்க இருக்கிறாராம். இதனால் பாஜகவே சென்னபட்டணாவில் போட்டியிடும் என்றும் ஜேடிஎஸ் கட்சிக்கு நோஸ் கட்தான் கிடைக்கும் என்றும் கர்நாடகா அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications