வாக்கு திருட்டு குற்றச்சாட்டு.. ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! ஆவணங்களை தரணுமாம்!
பெங்களூர்: கடந்த மக்களவை தேர்தலில் வாக்கு திருட்டு நடந்திருப்பதாக குற்றம்சாட்டியிருந்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இதற்கு உதாரணமாக பெங்களூரை குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் அவர் குற்றம் சாட்டியதற்கு பயன்படுத்திய ஆவணங்களை விசாரணைக்கு வழங்க கோரி தேர்தல் ஆணையம் ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
போலி வாக்காளர்கள், போலி முகவரி, ஒரே முகவரியில் அதிக வாக்காளர்கள், தவறான புகைப்படங்கள், படிவம் 6 தவறாக பயன்படுத்தப்பட்டு இருப்பது என மக்களவை தேர்தலில் வாக்கு திருட்டு நடந்திருப்பதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியிருந்தார்.

கர்நாடகாவின் பெங்களூர் மத்திய மக்களவைத் தொகுதியில் மட்டும் சுமார் 1,00 ,250 வாக்குகள் திருடப்பட்டுள்ளன என்றும், இந்த தொகுதியில் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள சுமார் 40,009 வாக்காளர்களின் முகவரிகள் போலியானவையாக இருப்பதாகவும் கூறி சில டேட்டாக்களை ஆதாரமாக முன்வைத்திருந்தார். இது அரசியல் தளத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. பாஜக தலைமையிலான மத்திய அரசுடன் சேர்ந்துக்கொண்டு வாக்கு திருட்டுக்கு தேர்தல் ஆணையம் உதவுவதாக கூறியிருந்தார்.
இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்காத தேர்தல் ஆணையம், ராகுல் காந்தியின் புகார் உண்மைதான் என்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அல்லது தவறான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாக கூறி மன்னிப்பு கோர வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் கூறியிருந்தது.
இதனையடுத்து இந்த விவகாரம் குறித்து ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. அதில், கர்நாடகாவில் ஒரு பெண் வாக்காளர் இரண்டு முறை வாக்களித்திருப்பதாக ராகுல் காந்தி கூறியிருந்ததை சுட்டிக்காட்டியிருந்த ஆணையம், அப்படி எதுவும் நடக்கவில்லை என்று விசாரணையில் தெரிய வந்திருப்பதாக கூறியது. மட்டுமல்லாது ஆணையம் மீது குற்றம் சாட்ட ராகுல் காந்தி பயன்படுத்திய ஆவணங்கள் தேர்தல் அதிகாரியால் வெளியிடப்பட்டதல்ல என்றும் மறுத்துள்ளது. எனவே ராகுல் காந்தி பயன்படுத்திய ஆவணங்களை விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டு கர்நாடக தேர்தல் ஆணைய அதிகாரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அதேபோல மகாராஷ்டிராவின் தலைமைத் தேர்தல் அதிகாரி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், ராகுல் காந்தியின் வாக்கு திருட்டு குற்றச்சாட்டு குறித்து நடவடிக்கை எடுக்க, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1950 மற்றும் வாக்காளர்கள் பதிவு விதிகள், 1960 ஆகியவற்றின் விதிகளின்படி கையொப்பமிட்ட உறுதிமொழி/பிரமாணப் பத்திரத்தை 10 நாட்களுக்குள் அலுவலகத்திற்குத் அனுப்புமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications