நாளை வாக்குப்பதிவு.. ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று கோஷமிட்ட கர்நாடகா முதல்வர்.. மத ரீதியாக பிரச்சாரம்?
பெங்களூர் : கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்த நிலையில், இன்று ஆஞ்சநேயர் கோவிலுக்குச் சென்று ஹனுமன் சாலிசா பாராயணம் செய்தார் கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை. இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா சட்டசபை தேர்தல் நாளை நடைபெறும் நிலையில் நேற்றுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது. இந்நிலையில், ஆஞ்சநேயர் கோயில்களுக்கு பாஜக தலைவர்கள் படையெடுத்துள்ளனர். ஹூப்ளியில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை வழிபாடு நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, "நாங்கள் ஹனுமர், ராமர் மீது நம்பிக்கை வைத்துள்ளோம். அவர்கள் தான் எங்களின் பலம். கர்நாடக மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்க முடிவு செய்து விட்டார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
224 தொகுதிகளை கொண்ட கர்நாடகா சட்டப்பேரவைக்கு நாளை தேர்தல் நடைபெற உள்ளது. அதனைத்தொடர்ந்து மே 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. கர்நாடகா தேர்தல் களத்தில் 2,613 வேட்பாளர்கள் உள்ளனர். கர்நாடகா தேர்தலில் பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளிடையே மும்முனை போட்டிகள் நிலவி வருகிறது.
தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளில் பெரும்பாலானவற்றில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. ஆட்சியைத் தக்க வைக்க பாஜகவும், ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியும் தீவிர முனைப்புடன் பரப்புரையில் ஈடுபட்டனர்.
பாஜக சார்பில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, காங்கிரஸ் தரப்பில் ராகுல் காந்தி, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ஜனதா தளம் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் தெவகவுடா உள்ளிட்ட தலைவர்கள் சூறாவளி பரப்புரையில் ஈடுபட்டனர். இந்த நிலையில், சட்டசபை தேர்தலுக்கான பரப்புரை நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.
இந்நிலையில், இன்று கர்நாடக பாஜக முதல்வர் பசவராஜ் பொம்மை, மத்திய அமைச்சரும் பாஜக எம்பியுமான ஷோபா கரந்த்லாஜே உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் அனுமன் கோவிலுக்குச் சென்று ஹனுனன் சாலிசா கோஷமிட்டனர்.
பஜ்ரங் தள் அமைப்பை தடை செய்வோம் என காங்கிரஸ் கட்சி அளித்த தேர்தல் வாக்குறுதி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிராக விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் அதன் இளைஞர் அமைப்பான பஜ்ரங் தள் ஆகியவை, மே 9ஆம் தேதியான இன்று நாடு முழுவதும் "ஹனுமான் சாலிசா" கோஷமிட முடிவு செய்தன.

இந்நிலையில், கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை தனது ஆதரவாளர்களுடன் ஹூப்ளியின் விஜய் நகரில் உள்ள ஹனுமான் மந்திரில் ஹனுமன் சாலிசா பாராயணம் செய்தார். மத்திய அமைச்சரும், மாநில பாஜக தேர்தல் நிர்வாகக் குழுத் தலைவருமான ஷோபா கரந்த்லாஜே பெங்களூருவில் உள்ள வீர் ஆஞ்சநேயா கோவிலுக்குச் சென்று ஹனுமன் சாலிசா பாடி 'ஜெய் ஸ்ரீ ராம்' என்று கோஷமிட்டார்.
கர்நாடகா மாநிலம் முழுவதும் உள்ள கோயில்களில் மக்கள் "ஹனுமன் சாலிசா" என்று கோஷமிடுகிறார்கள் என்றும், தர்மத்தைக் காப்பாற்ற ஆஞ்சநேயரிடம் பிரார்த்தனை செய்வதாகவும் மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே கூறியுள்ளார்.
கர்நாடகாவில் நாளை சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நேற்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்துவிட்டாலும், இன்று மதரீதியாக மறைமுக பிரச்சாரத்தை பாஜகவினர் மேற்கொண்டு வருவதாக சர்ச்சை எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications