மகன் பாசம் கண்ணை மறைத்தது.. கூட்டணி கட்சி காங்கிரசையே விட்டு விளாசிய குமாரசாமி.. சுமலதா செம குஷி!
பெங்களூர்: தனது மகன் நிகில் கவுடாவுக்கு எதிராக சதி செய்வதாக, கூட்டணி கட்சியான, காங்கிரசுக்கு எதிராகவே குமுறியுள்ளார் கர்நாடக முதல்வர் ஹெச்.டி.குமாரசாமி.
குடும்ப அரசியலுக்கு பெயர் போனது மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி. அக்கட்சியின் தலைவர் தேவகவுடாவின் மகன் குமாரசாமி கர்நாடக முதல்வராக உள்ளார். காங்கிரசுடன் கூட்டணி அமைத்து மதசார்பற்ற ஜனதா தளம் சார்பில், முதல்வர் நாற்காலியில் அமர்ந்து உள்ளார்.
பவர்ஃபுல் பொதுப்பணித்துறை அமைச்சராக குமாரசாமியின் மூத்த சகோதரர் ரேவண்ணா பதவி வகிக்கிறார். குமாரசாமியின் மனைவி அனிதா எம்எல்ஏவாக உள்ளார்.
களம் வந்த கேஜிஎப் யஷ்.. கலக்கத்தில் குமாரசாமி டீம்.. சுமலதாவை வீழ்த்த எடுத்தாச்சு அந்த ஆயுதத்தை
ஒரே குடும்பம்
இதெல்லாம் போதாது என்று குமாரசாமி-அனிதா தம்பதியின் மகன் நிகில் கவுடா, மண்டியா லோக்சபா தொகுதியில் இருந்து களமிறக்கப்பட்டுள்ளார். மற்றொரு பக்கம் ரேவண்ணா மகன், ஹாசன் தொகுதியில் களம் காண்கிறார். ஹாசன் தொகுதியில் எம்பியாக இருந்த தேவகவுடா, தும்கூர் தொகுதியிலிருந்து, போட்டியிடுகிறார். ஒரு குடும்பத்தில் இத்தனை பேருக்கு பதவியும், தேர்தலில் போட்டியிட வாய்ப்பும் கிடைத்துள்ளது என்றால் அது தேவகவுடா குடும்பமாகத் தான் இருக்க முடியும்.
மண்டியா தொகுதி
அது ஒரு பக்கம் இருக்கட்டும். நாம் மண்டியா களத்திற்கு, வருவோம். இந்த தொகுதியில், ஒக்கலிகர் ஜாதியினர் அதிகம். எனவே, மண்டியா தொகுதியில் எளிதாக வெற்றி பெற்று விடலாம் என்றுதான் குமாரசாமி தனது மகனை களமிறங்கினார். ஆனால் காங்கிரசை சேர்ந்த முன்னாள் அமைச்சரும், பிரபல நடிகருமான அம்பரீஷ், மறைந்துவிட்ட நிலையில், அவர் மனைவி சுமலதா சுயேச்சையாக இந்த தொகுதியில் போட்டியிடுகிறார்.
நடிகர் யஷ் ஆதரவு
காங்கிரஸ் சார்பில் களமிறங்க அவர் விரும்பினாலும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு, இந்த சீட்டை ஒதுக்கி விட்டதால் அவருக்கு வாய்ப்பு தரப்படவில்லை. எனவே, சுயேச்சையாக சுமலதா களமிறங்கியுள்ளார். அவருக்கு பாஜக ஆதரவு அளித்து தனது வேட்பாளரை நிறுத்தவில்லை. மற்றொரு பக்கம் கேஜிஎப் திரைப்பட நடிகர் யஷ், மற்றொரு பிரபல திரைப்பட நடிகர் தர்ஷன் ஆகியோரும் சுமலதாவுக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நெருக்கடி போதாது என்று காங்கிரஸ் கட்சியில் உள்ள சில தலைவர்களும் கூட சுமலதாவிற்கு, மறைமுகமாக ஆதரவு அளிப்பதாக கூறப்படுகிறது. இதனால் கண்ணீரும் கம்பலையுமாக கொதித்து எழுந்து விட்டார் குமாரசாமி.
குமாரசாமி குற்றச்சாட்டு
இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில், மண்டியாவில் எல்லாம் கைமீறிப் போய்க்கொண்டு உள்ளது. ஒரு சுய வேட்பாளருக்கு அபரிமிதமான ஆதரவு கிடைத்து வருகிறது. இதற்கெல்லாம் காரணம் அவர் சுயேச்சை கிடையாது. காங்கிரசும், பாஜகவும் அவருக்கு ஆதரவு அளிக்கிறது. விவசாய சங்கம் அவருக்குத்தான் ஆதரவு. அனைவருமே மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு எதிராக கைகோர்த்துக் கொண்டு உள்ளனர். எனது மகனுக்கு எதிராக சக்கரவியூகம் வகுக்கப்பட்டுள்ளது. மண்டியா, மக்கள் இந்த வியூகத்தை உடைத்து எறிந்து நிகிலை வெற்றி பெற செய்வார்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு குமாரசாமி பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
தொண்டர்கள் ஆதரவு
இந்த நிலையில் குமாரசாமி குற்றச்சாட்டு குறித்து சுமலதாவிடம் கேட்டபோது, அவர் கூறுவது உண்மைதான். ஆனால் காங்கிரஸின் உண்மையான தொண்டர்கள் எனக்கு ஆதரவாக தான் உள்ளனர். மற்றபடி வேறு யாரும் ஆதரவு கிடையாது. ஒட்டு மொத்த அரசாங்கமும், அமைச்சர்களும் மண்டியாவில்தான் குழுமியுள்ளனர். ஆனால் குமாரசாமி, அவரது மகனுக்காக சக்கரவியூகம் வகுத்துள்ளதாக பிரச்சாரம் செய்கிறார் என்று கேலியாக கூறினார் சுமலதா.