அங்க மூணாவதா ஒருத்தன் இருப்பானே.. முதலமைச்சர் ரேஸில் நியூ என்ட்ரி.. அதிரும் கர்நாடகா
பெங்களூர்: கர்நாடகா மாநிலத்தின் முதலமைச்சர் பதவிக்காக காங்கிரஸ் கட்சியில் சித்தராமையா, டி.கே. சிவக்குமார் இடையே உச்சகட்ட அதிகார போட்டி நிலவி கொண்டிருக்கிறது. இருவரும் டெல்லி தலைமையில் லாபி செய்து பதவியை பிடிக்க காய் நகர்த்தி வருகின்றனர். எப்போது வேண்டுமானாலும் மாற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சித்தராமையா, டிகே. சிவக்குமாருக்கு போட்டியாக சீனியர் அமைச்சர் ஒருவரும் முதலமைச்சர் ரேஸில் இறங்கியுள்ளார்.
கர்நாடகா மாநிலத்திற்கு கடந்த 2023 ஆம் ஆண்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் வெற்றி பெற்றது. தேர்தலில் வெற்றி பெற்றாலும் ஆட்சியை தக்க வைப்பதில் சிக்கல் நிலவுகிறது. காங்கிரஸ் கட்சியில் முதலமைச்சர் பதவியை பிடிப்பதற்கு சித்தராமையா, டி.கேசிவக்குமாருக்கும் இடையே போட்டி நிலவியது. அப்போது தலைமை சித்தராமையாவை முதலமைச்சராக தேர்வு செய்தது.

கர்நாடகா அரசியல்
டி.கே. சிவக்குமார் துணை முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். இதில் கர்நாடகா காங்கிரஸ் கமிட்டி தலைவராக ஆக்டிவாக பணியாற்றிய டி.கே சிவக்குமார் அப்செட் ஆனார். அதையறிந்து காங்கிரஸ் தலைமை முதலமைச்சர் பதவிக்கு ஒரு ஒப்பந்தம் போட்டது. அதன்படி 5 வருட ஆட்சியில் முதல் 2.5 வருடங்கள் சித்தராமையா, அடுத்த 2.5 வருடங்கள் டி.கே சிவக்குமார் முதலமைச்சர் பதவியில் இருப்பார்கள் என முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் 2025 நவம்பர் மாதத்துடன் காங்கிரஸ் ஆட்சியின் முதல் 2.5 வருடங்கள் நிறைவடைந்துவிட்டது. இதன்மூலம் சித்தராமையாவுக்கான காலம் முடிந்து, டி.கே. சிவக்குமாருக்கான காலம் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இது கர்நாடகா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக அரசியலில் நவம்பர் புரட்சி, பெரிய மாற்றம் இருக்க போகிறது என்று கடந்த சில வாரங்களாக கர்நாடகா அரசியல் அனல் பறந்து கொண்டிருக்கிறது.
சித்தராமையா Vs டி.கே சிவக்குமார்
முதலமைச்சர் பதவியை பிடிப்பதற்காக டி.கே சிவக்குமாரும், முதலமைச்சர் பதவியை தக்க வைப்பதற்காக சித்தராமையாவும் தீவிரமாக காய் நகர்த்தி வருகிறார்கள். சிவக்குமாரின் ஆதரவு எம்எல்ஏக்கள் டெல்லி சென்று காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வை சந்தித்து சிவக்குமாரை எம்எல்ஏ ஆக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இதில் கடுப்பான சித்தராமையா, நவம்பர் புரட்சி எல்லாம் ஒன்றுமில்லை. இது ஊடகங்கள் கட்டமைத்த கட்டுக்கதை என்று கூறினார். பெங்களூர் வந்த காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சித்தராமையா சந்தித்து தன்னை முதலமைச்சராக தொடர அனுமதிக்க வேண்டும் என்று கோரியுள்ளார். முதலமைச்சர் பதவிக்காக சிவக்குமார் தன்னுடைய கட்சி பதவியை துறக்க தயாராகியுள்ளார்..
ரேஸில் சீனியர் அமைச்சர்
சித்தராமையாவும் தன் வசமுள்ள முதலமைச்சர் பதவியை விட்டுக் கொடுக்க தயாராக இல்லை. இவர்களிடையே போட்டி தீவிரமடைந்து வரும் நிலையில், கர்நாடகா முதலமைச்சர் ரேஸில் மேலும் சிலர் இணைந்துள்ளனர். அதில் அம்மாநில உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா வெளிப்படையாகவே தான் முதலமைச்சர் ரேஸில் இருப்பதாக கூறியுள்ளார்.
கர்நாடகாவில் முதலமைச்சரை மாற்ற வேண்டும் என்றால் அந்த பதவியில் தலித் ஒருவரை அமர வைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. அந்த அடிப்படையில் பரமேஸ்வரா பெயர் அடிபட்டு வருகிறது. இதுகுறித்து பரமேஸ்வரா கூறுகையில், "நான் கர்நாடகா காங்கிரஸ் தலைவராக இருந்த கடந்த 2013 இல் காங்கிரஸ் ஆட்சி பெற உதவினேன். ஆனால் அதை எந்த இடத்திலும் சொல்லவில்லை.
டிவிஸ்டோ டிவிஸ்ட்
அதை கட்சியின் வெற்றியாக தான் பார்த்தேன். அந்த தேர்தலில் துரதிர்ஷ்டவசமாக நான் தோல்வியடைந்துவிட்டேன். வெற்றி பெற்றிருந்தால் அப்போதே முதலமைச்சர் ஆனாலும் ஆகியிருப்பேன். நான் எப்போதுமே முதலமைச்சர் ரேஸில் இருக்கிறேன்." என்று கூறியுள்ளார். இது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மறுபக்கம் டி.கே. சிவக்குமாருக்கு செக் வைப்பதற்காக சித்தராமையாவின் தூண்டுதலில் தான் பரமேஸ்வரா செயல்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications