தமிழ்நாடு பாணியில் கர்நாடகா.. தலித்துகளில் உள் இடஒதுக்கீடு வழங்க தயார்: சித்தராமையா பரபர அறிவிப்பு!
பெங்களூர்: கர்நாடகாவிலும் தமிழ்நாட்டைப் போல தலித் பிரிவினரில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்க மாநில அரசு தயாராக உள்ளதாக அம்மாநில முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார். அண்மையில் தலித், பழங்குடிகள் பிரிவில் மாநில அரசுகள் உள் இடஒதுக்கீடு வழங்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததை சுட்டிக்காட்டி சித்தராமையா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி தமது ஆட்சிக் காலத்தில் தலித்துகளுக்கான 18% இடஒதுக்கீட்டில் அருந்ததியருக்கு 3% உள் இடஒதுக்கீடு வழங்கினார். இதேபோல பஞ்சாப், ஹரியானா மாநில அரசும் தலித்துகள்- பழங்குடிகளில் ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கு உள் இடஒதுக்கீடு வழங்கின.

இதற்கு எதிரான வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், தலித்- பழங்குடி பிரிவுகளின் இடஒதுக்கீட்டில் ஒடுக்கப்பட்ட ஜாதிகளுக்கு உள் இடஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு என வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை வழங்கியது. அதேநேரத்தில் தலித்- பழங்குடியினர் இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோலான கிரீமிலேயரையும் அமல்படுத்த யோசனை தெரிவித்தது. இதன் மூலம் தமிழ்நாட்டில் அருந்ததியருக்கான 3% உள் இடஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில் கர்நாடகா அரசும் தலித் உள் இடஒதுக்கீட்டை அமல்படுத்த முடிவு செய்துள்ளது. பெங்களூரில் தமது இல்லத்தில் மாதிக ஜாதி பிரதிநிதிகளை முதல்வர் சித்தராமையா சந்தித்துப் பேசினார். அப்போது, தமது அரசு தலித் ஜாதிகளில் உள் இடஒதுக்கீட்டை அமல்படுத்த தயாராக உள்ளது; உச்சநீதிமன்றமும் அண்மையில் மாநில அரசுகளுக்கு இந்த இடஒதுக்கீட்டை அமல்படுத்த அதிகாரம் உண்டு என தீர்ப்பளித்திருக்கிறது. இதனடிப்படையில் காங்கிரஸ் அரசு, உள் இடஒதுக்கீட்டை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது என உறுதி அளித்தார்.
மேலும் இது தொடர்பாக காங்கிரஸ் மேலிடத் தலைவர்களுடனும் அமைச்சரவையிலும் விவாதிக்கப்படும். இதன் பின்னர் தலித் உள் இடஒதுக்கீடு குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பாணியில் கர்நாடகா!












Click it and Unblock the Notifications