ஒரே ஒரு கடிதம் தான்.. டோட்டலாக சிக்கல்.. நிர்மலா சீதாராமனையே அதிர வைத்த சித்தராமையா
பெங்களூர்: டெல்லியில் நாளை நடைபெறும் மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்குமாறு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார். இதேபோல் பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா, ராஜீவ் சந்திரசேகர், ஹெச்டி தேவகவுடா உள்ளிட்டோருக்கும் சித்தராமையா கடிதம் எழுதி இருக்கிறார்.
மத்திய பட்ஜெட் குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா பெங்களூரில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும் போது, மத்தியில் உள்ள பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த 10 ஆண்டுகளாக கர்நாடகத்திற்கு அநீதி இழைத்து வருகிறது. மத்திய அரசின் இந்த போக்கை கண்டித்தும், கர்நாடகத்தின் நலனை காக்கும் நோக்கத்திலும் நாளை (பிப்ரவரி 7ம் தேதி) டெல்லி ஜந்தர் மந்தரில் கர்நாடக காங்கிரஸ் அரசு போராட்டம் நடத்த உள்ளது. இது பாஜகவிற்கு எதிராக நடைபெறும் போராட்டம் அல்ல. மாநில மக்களுக்கு நியாயம் பெற்று தருவதற்கு நடத்தப்படும் போராட்டம்.

நாங்களும் மிகவும் பொறுமையாக காத்திருந்தோம். ஆனால் இதுவரை எங்களுக்கு நடந்து வரும் அநீதியை சரிசெய்யவில்லை. எனவே அநீதிக்கு எதிராக குரல் எழுப்பியே தீர வேண்டும். கன்னடர்களுக்கு நீதியை பெற்றுத்தர வேண்டியது கட்டாயம் ஆகும். பத்ரா மேலணை திட்டத்திற்கு ரூ.5 ஆயிரத்து 300 கோடி வழங்குவதாக 2023-24-ம் ஆண்டு பட்ஜெட்டில் மத்திய அரசு அறிவித்திருந்தது. அந்த நிதியை இதுவரை மத்திய பாஜக அரசு வழங்கவில்லை.
எனவே இந்த விஷயங்களில் நாட்டின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் நாங்கள் போராட்டத்தை நடத்த போகிறோம். மாநிலங்களிடம் இருந்து வரியாக பெறப்படும் வருவாயில் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்க நிதி ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை 15 நிதி ஆணையங்கள் அமைக்கப்பட்டன. தற்போது 16-வது நிதி ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
நிதி ஆணையம் நிதி ஒதுக்கீட்டை குறைத்ததால் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.45 ஆயிரம் கோடி அளவிற்கு கர்நாடகா மாநிலத்திற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் மட்டும் கர்நாடகத்திற்கு ரூ.62 ஆயிரத்து 98 கோடி நிதி ஒதுக்கீடு குறையும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.. நிதி இழப்பை ஈடுகட்ட ரூ.5 ஆயிரத்து 495 கோடி கர்நாடகத்திற்கு சிறப்பு நிதியாக வழங்குமாறு நிதி ஆணையம் பரிந்துரை செய்தது. ஆனால் இந்த பரிந்துரையை மத்திய அரசு ஏற்கவில்லை.
இதேபோல் கர்நாடகாவில் புறவழிச்சாலைகள், ஏரி குளங்களை சீர்படுத்த ரூ.6 ஆயிரம் கோடி நிதி ஒதுக்க சிபாரிசு செய்யப்பட்டிருக்கிறது. அந்த நிதியையும் வழங்கவில்லை. மொத்தத்தில் 15-வது நிதி ஆணையத்தில் கர்நாடகத்திற்கு ரூ.73 ஆயிரத்து 593 கோடி நிதி குறைக்கப்பட்டிருக்கிறது. கர்நாடகத்தில் இருந்து மத்திய அரசுக்கு ரூ.100 கொடுத்தால் அங்கிருந்து நமக்கு ரூ.12 முதல் ரூ.13 வரை தான் திரும்பத் தருகிறது. கர்நாடகத்தில் இருந்து ஆண்டுக்கு ரூ.4 லட்சத்து 30 ஆயிரம் கோடி வரி மத்திய அரசுக்கு செல்கிறது. ஆனால் கர்நாடகத்திற்கு வெறும் ரூ.50 ஆயிரத்து 257 கோடி தான் திரும்ப கிடைக்கிறது. ஆண்டுக்கு ஆண்டு கர்நாடகத்திற்கு அநீதி ஏற்படுவது தொடர்கிறது.
பட்ஜெட் அளவு இரண்டு மடங்காக அதிகரிக்கும்போது நமக்கான நிதி ஒதுக்கீடும் அதிகரித்திருக்க வேண்டும். ஆனால் மத்திய அரசின் நிதி உதவி குறைந்துள்ளது. 15-வது நிதி ஆணையம் அமைத்த பிறகு கர்நாடகத்திற்கு ரூ.1 லட்சத்து 87 ஆயிரத்து 867 கோடி கிடைக்காமல் நமக்கு நிதி இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனால் கர்நாடகத்திற்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டிக்கிறது. மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனால் தான் கர்நாடகத்திற்கு அதிக அநீதி ஏற்பட்டிருக்கிறது. கர்நாடக பாஜக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் கர்நாடகா மாநிலத்திற்கு ஆதரவாக குரல்கள் எழுப்பவில்லை. டெல்லியில் நடைபெறும் போராட்டத்திற்கு கட்சி பேதமின்றி அனைத்து கட்சி எம்.பி.க்களுக்கும் கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளோம். இதில் பங்கேற்காவிட்டால் கன்னடர்களுக்கு துரோகம் இழைத்தது போல் ஆகும்" இவ்வாறு சித்தராமையா கூறியிருந்தார்.
இதனிடையே மத்திய அரசின் நிதி அட்டூழியங்களுக்கு எதிராக நாளை டெல்லியில் நடைபெற உள்ள போராட்டத்தில் பங்கேற்க வர வேண்டும் என, கர்நாடக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிர்மலா சீதாராமன், எச்.டி.தேவேகவுடா, தேஜஸ்வி சூர்யா, ராஜீவ் சந்திரசேகர், மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோருக்கு முதல்வர் சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார்.












Click it and Unblock the Notifications