தமிழகம், மகாராஷ்டிரா, குஜராத் மாநில மக்கள் கர்நாடகாவில் நுழைய மே 31வரை தடை.. எடியூரப்பா தடாலடி
பெங்களூர்: மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இருந்து கர்நாடகா வரும் மக்களை மே 31-ஆம் தேதி வரை அனுமதிப்பதில்லை என்று முடிவு எடுத்துள்ளதாக அந்த மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
Recommended Video
நான்காவது கட்ட ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள நிலையில், எந்த மாதிரியான விதிமுறை தளர்வுகளை கொண்டு வர வேண்டும் என்பது பற்றி மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் பெங்களூரில் இன்று முதல்வர் எடியூரப்பா ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு பிறகு, நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில், கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருப்பதால் அந்த மாநிலத்தில் இருந்து வரும் மக்களுக்கு வரும் 31ம் தேதி வரை கர்நாடகாவிற்கு அனுமதி வழங்கப்படாது அதற்கு பிறகு நிலைமையை பரிசீலித்து அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும்.
கர்நாடகாவில் அனைத்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படும் சிவப்பு மண்டலம் மற்றும் கண்டைன்மெண்ட் பகுதிகளில் மட்டும் இந்த உத்தரவு அமலாகாது. வெளி மாநிலங்களில் இருந்து வருவோருக்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவது என்பது கட்டாயம் தொடரும்.
ஆம்பன் புயலே வந்தாலும் இதுதான் நிலை.. சென்னையை தாக்கும் வெப்ப காற்று.. நாளையிலிருந்து புது சிக்கல்!
மக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு, பஸ் போக்குவரத்து எந்த அளவுக்கு அதிகரிக்கப்படும் என்பது வருங்காலத்தில் முடிவு செய்யப்படும். அதேநேரம் கர்நாடகாவில் இருந்து எந்த மாநிலத்துக்கு வேண்டுமானாலும் செல்லலாம். அதற்கு தடை கிடையாது. வெளிமாநிலங்களில் இருந்து வருவோருக்கு தனிமைப்படுத்தல் கட்டாயம். அதை செய்தே தீருவோம். இதில் விதிவிலக்கு கிடையாது.
பிற மாநிலங்களில் இருந்து வருவோர்களால்தான், கொரோனா பாதிப்பு கர்நாடகாவில், அதிகரித்து கொண்டு இருக்கிறது. இதை எப்படி கட்டுபடுத்துவது என்பது பற்றி தீவிர ஆலோசனை நடத்தி உள்ளோம். இவ்வாறு எடியூரப்பா தெரிவித்தார்.