முதியவர் வயிற்றில் என்ன இது? கல்லா பெட்டியா? 187 நாணயங்களை எடுத்த மருத்துவர்கள்.. ஷாக் காரணம்
பெங்களூர்: கர்நாடகாவில் ஒரு முதியவரின் வயிற்றில் இருந்து 187 நாணயங்களை மருத்துவர்கள் எடுத்த சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ஒன்றரை கிலோவுக்கு மேல் எடைக்கொண்டிருந்த அந்த நாணயங்களை 2 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் விழுங்கி வந்தது தெரியவந்துள்ளது.
இவ்வாறு நாணயங்களை விழுங்கியதற்கான காரணத்தை அந்த முதியவர் சொன்ன போது மருத்துவர்களே சற்று கலங்கிவிட்டனர்.
முடிவே கிடையாதா? ஆன்லைன் ரம்மியால் 33வது பலி! எப்போது வரும் தடை சட்டம்.. அனல் காட்டிய பாமக அன்புமணி!
கவனிக்காமல் விட்ட பிள்ளைகள்
கர்நாடகா மாநிலம் ராய்ச்சூர் மாவட்டத்தில் பாகல்கோட் பகுதியைச் சேர்ந்தவர் திம்மப்பா ஹரிஜன் (60). இவருக்கு 4 மகன்கள் ஒரு மகள் உள்ளனர். இவரது மனைவி 7 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அன்று முதலாக திம்மப்பாவை எந்த பிள்ளைகளும் கவனிக்கவில்லை எனத் தெரிகிறது. மகள் மட்டும் எப்போதாவது சிறிது பணம் தந்துவிட்டு செல்வாராம். அந்தப் பணத்தை கூட அவரது இளைய மகன் எடுத்துவிட்டு சென்றுவிடுவார் எனக் கூறப்படுகிறது. இதனால் பல நேரங்களில் சாப்பாட்டுக்கே வழி இல்லாமல் திம்மப்பா இருந்திருக்கிறார்.
கடும் வயிற்று வலி
பிள்ளைகளை கஷ்டப்பட்டு வளர்த்து படிக்க வைத்தும், ஒருவர் கூட தன்னை கடைசி காலத்தில் கவனிக்கவில்லையே என மனம் வெதும்பி வந்திருக்கிறார் திம்மப்பா ஹரிஜன். இதனால் ஒருகட்டத்தில் மது அருந்தும் பழக்கத்துக்கும் அவர் ஆளாகி இருக்கிறார். இந்நிலையில், கடந்த வாரம் திம்மப்பாவுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டு அலறி துடித்துள்ளார். இவரது அலறல் சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் அவரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர்.
187 நாணயங்கள்
அங்கு அவரது வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்த போது மருத்துவர்கள் அதிர்ந்துவிட்டனர். ஏனெனில், அவரது வயிறு முழுவதும் நாணயங்கள் இருந்திருக்கின்றன. இதனைத் தொடர்ந்து, அவரது வயிற்றில் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள், 187 நாணயங்களை வெளியே எடுத்தனர். அவற்றில் 5 ரூபாய் நாணயங்கள் 56-ம், 2 ரூபாய் நாணயங்கள் 51-ம், 1 ரூபாய் நாணயங்கள் 80-ம் இருந்தன.இதை எடைப்போட்டு பார்த்த போது ஒன்றரை கிலோ இருந்திருக்கிறது.
"ஏன் விழுங்கினேன்?"
ஓரிரு நாணயங்களை விழுங்கினாலே உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழலில், அவர் இத்தனை நாணயங்களை விழுங்கியும் எப்படி உயிருடன் இருந்தார் என்பது வியப்பாகவே உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், ஏன் இத்தனை நாணயங்களை விழுங்கினீர்கள் என மருத்துவர்கள் கேட்ட போது, "நான்கு ஆண் பிள்ளைகள் இருந்தும் என்னை ஒருவர் கூட கவனிக்கவில்லை. மகள்தான் என்றாவது பணம் தந்துவிட்டு செல்வாள். அந்த பணத்தையும் எனது கடைசி மகன் மது குடிப்பதற்காக வீட்டில் இருந்து எடுத்துச் சென்றுவிடுவான். எனவே, காலையில் யாராவது கதவை தட்டினால், பணத்தை எடுக்கதான் மகன் வந்திருக்கிறான் என பயந்து வீட்டில் உள்ள நாணயங்களை விழுங்கிவிடுவேன்" என முதியவர் திம்மப்பா கூறினார். இதைக் கேட்ட மருத்துவர்களே சற்று கண் கலங்கிவிட்டனர்.