ஓட்டு போடுமாறு ஊரெல்லாம் பிரச்சாரம் செய்த டிராவிட் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம்
பெங்களூரு: ஓட்டு போடுமாறு ஊரெல்லாம் தேர்தல் ஆணையத்துக்காக பிரச்சாரம் செய்த முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகா தேர்தல் ஆணையத்தின் தூதராக முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் உள்ளார். இவர் மக்களிடம் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்துவந்தார்.

ராகுல் டிராவிட் பெங்களூரு இந்திரா நகரில் வசித்து வந்தார். சமீபத்தில் அஷ்வந்த் நகருக்கு அவர் குடிபெயர்ந்து விட்டார். இதனையடுத்து சாந்திநகர் சட்டசபை தொகுதியிலிருந்து தனது ஓட்டை நீக்க, பெயர் நீக்குமாறு படிவமான 'பார்ம் 7' ஐ டிராவிட் அளித்துள்ளார். இதனால் டிராவிட் மற்றும் அவரது மனைவி விஜேதாவின் பெயர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறது.
ஆனால் அவர் மீண்டும் பெயர் சேர்ப்பதற்கான 'பார்ம் 6'ஐ அளிக்க தவறிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவரது பெயர் ஏற்கனவே சாந்தி நகர் தொகுதி வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதால், மத்திய பெங்களூரு தொகுதிக்கு வரும் 18ம் தேதி நடக்கும் மக்களவை தேர்தலில் வாக்களிக்க முடியாத நிலை டிராவிட்டுக்கு ஏற்பட்டுள்ளது.
டிராவிட்டின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட தகவல் அங்குள்ள தேர்தல் அதிகாரிகளையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. அவர்கள் இச்சம்பவம் துரதிஷ்டவசமானது என தெரிவித்துள்ளனர். ஓட்டு போடுமாறு ஊரெல்லாம் பிரச்சாரம் செய்தவருக்கே ஓட்டுபோட முடியாத நிலை ஏற்பட்டு இருப்பது கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications