ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் ஐஏஎஸ்., ஐபிஎஸ் அதிகாரிகளாக நியமனம்- குமாரசாமி குற்றச்சாட்டு- திடீர் பல்டி
பெங்களூரு: இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளாக அதாவது ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளாக 4,000 ஆர்.எஸ்.எஸ். இயக்க தொண்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி குற்றம்சாட்டியிருந்தார். தற்போது திடீரென தாம் எந்த ஒரு அமைப்பின் பெயரையும் சொல்லவில்லை என பல்டி அடித்துள்ளார் குமாரசாமி.
பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களிடம் குமாரசாமி கூறியதாவது: நாட்டின் அரசு துறைகளில் உயர் பதவிகளில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
ஆட்சிப் பணி அதிகாரிகளாக சேருவதற்கு ஆர்.எஸ்.எஸ். இயக்கம் பயிற்சி அளித்து வருகிறது. இந்த பயிற்சி பெற்று இதுவரை 4,000க்கும் அதிகமானோர் ஆட்சிப் பணி அதிகாரிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

குமாரசாமி குற்றச்சாட்டு
கடந்த 2016-ம் ஆண்டு மட்டுமே இந்திய ஆட்சிப் பணிகளுக்கான தேர்வில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்த 626 பேர் தேர்ச்சி பெற்றனர். இந்த நாடு எங்கே போகிறது? பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் கைப்பாவையாக மாறி இருக்கிறார். இவ்வாறு குமாரசாமி கூறியிருந்தார்.

தவறாக வழிநடத்தும் பாஜக
அத்துடன் பாரதிய ஜனதா கட்சியின் பொதுவான செயல் திட்டமே இந்துராஷ்டிரத்தை உருவாக்குவதுதான். இந்த தேசத்தின் இளைஞர்களை இந்துத்துவா தத்துவத்தின் பெயரால் பாஜகவினர் தவறாக வழிநடத்துகின்றனர். இந்த நாட்டின், மாநிலத்தின் இளைஞர்களுக்கு தேவை வேலைவாய்ப்புகள். 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு தருவோம் என பாஜக உறுதி மொழி அளித்தது. அதனை நிறைவேற்றினார்களா? என்றும் குமாரசாமி கேள்வி எழுப்பினார்.

பாஜக பதிலடி
இதற்கு பதிலளித்த கர்நாடக மாநில பாஜக பொதுச்செயலாளர் ரவிக்குமார், குமாரசாமி தம்முடைய பேரக் குழந்தைகளை ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் சேர்க்கலாம். அவர்களுக்கு ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். பயிற்சி வழங்கி பணியில் சேர்க்கிறோம் என கூறினார். இதனையடுத்து குமாரசாமி தமது கருத்து குறித்து விளக்கம் தந்துள்ளார்.

குமாரசாமி பல்டி
குமாரசாமி தமது விளக்கத்தில், நான் எந்த ஒரு இயக்கம் அல்லது கட்சி தொடர்பாக குறிப்பிட்டு தவறாக சொல்லவில்லை. கொரோனா லாக்டவுன் பல புத்தகங்களைப் படித்தேன். அந்த புத்தகங்களில் இருந்த தகவல்களைத்தான் நான் கூறியிருக்கிறேன். இப்படியான தகவல்களை மக்களிடம் தெரிவிக்க விரும்பினேன். நான் சொன்ன உண்மையை மக்கள் விவாதிக்க வேண்டும். அதைத்தான் விரும்புகிறேன் என்றார்.

ஆர்.எஸ்.எஸ். மீது குற்றச்சாட்டு
மேலும் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் குறித்து நான் அச்சப்படவில்லை. இந்த நாட்டின் நிர்வாகத்தை ஆர்.எஸ்.எஸ்.இயக்கம்தான் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. நான் படித்த வரலாற்று புத்தகங்களில் என்ன தகவல்கள் இருந்தனவோ அதை பகிரங்கமாக கூறியிருக்கிறேன் என்றும் குமாரசாமி கூறினார்.












Click it and Unblock the Notifications